Wednesday, March 1, 2023

ஆண்டுக் கட்டணம்(April 2023-March 2024)- புதுப்பித்தல் அறிவிப்பு




 


சிறுவாணி  வாசகர்  மையம் வணிகநோக்கின்றி முழுக்கச் சிறந்த படைப்புகளை வாசகர்களிடம் கொண்டுசெல்லும் வகையில் செயல்படுவது தாங்கள் அறிந்ததே.


வாசகர் வட்டம், இலக்கியச் சிந்தனை அமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு துவங்கிய சிறுவாணி வாசகர் மையம் தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரும் என உறுதியளிக்கிறோம்.


மார்ச்--2023 உடன் ஆறாம் வருடச் சந்தா முடிவடைகிறது.

(12 புத்தகங்கள்)


ஏப்ரல் 2023-மார்ச் 2024 (ஏழாம்) ஆண்டுக்கான 

கட்டணம் ரூ.1800 /-

பிற மாநிலங்களுக்கு ரூ 2200 /-

(தபால் செலவு உட்பட).


தங்கள் ( ஏப்ரல் 2023-மார்ச் 2024) சந்தாவைப் புதுப்பித்துத்  தொடர்ந்து ஆதரவு தருவதோடு , தங்கள் ஒவ்வொருவரும் உடன் இன்னொருவரையும்  சிறுவாணி வாசகர் மையத்தில் இணைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


தங்கள் அன்புக்கும், துணையிருப்புக்கும் மீண்டும் மனமார்ந்த 

நன்றி.


தி.சுபாஷிணி

ஜி.ஆர்.பிரகாஷ் 

9940985920 whatsapp 

8778924880 Gpay

சிறுவாணி வாசகர்  மையம்.

-------------------------------------------------

சிறுவாணி வாசகர் மையத்தின் "மாதம் ஒரு நூல்"திட்டத்தில் இணையவும்,புதுப்பிக்கவும்......


ஏப்ரல் 2023-மார்ச் 2024

தமிழகம் ரூ1800/-

பிற மாநிலங்கள் ரூ 2200/-


Payment option: 


1.Gpay/Paytm/Phonepe: 8778924880


2. UPI

siruvanivasagar-1@okhdfcbank


Please send  following details to us through whatsapp(9940985920)

1. Name

2. Full Address and Pincode

 3. Contact number

siruvanivasagar@gmail.com

https://siruvanivasagarmaiyam.blogspot.com/?m=1

----------------------------------------

ஒரு நிமிடம் ப்ளீஸ் !

தரமான தமிழ் இலக்கியப் புத்தகங்களை விரும்புபவர்கள் என்னவெல்லாமோ செய்யலாம். ஆனால் எளிதாக செய்ய முடிவது சிறுவாணி வாசகர் மைய உறுப்பினராக சந்தா கட்டிச் சேர்தல்தான். சிறுவாணி வெளியிட்டுள்ள புத்தகப் பட்டியல் இணைப்பில் உள்ளதைப் பார்த்தாலே தெரியும்.  எந்தப் புத்தகத்தை வெளியிட்டால் விற்பனை ஆகும் என்று இவர்கள் வெளியிடுவதில்லை. எந்தப் புத்தகத்தை வாசகர்கள் தவற விடக்கூடாது என்று நினைத்து செயல்படுகிறார்கள்.  எழுத்தாளர்களே வாசகர்களாகி மகிழும் சூழல் கொண்டது சிறுவாணி புத்தக வெளியீடு.  "மாதம் ஒரு நூல்" திட்டம்.


1. இது பொது விநியோகத்துக்காக அச்சிடப்படுபவை அல்ல. வாசகர் வட்ட உறுப்பினராக (சந்தா Rs.1800/- கூரியர் செலவு உட்பட) மாதம் 120 செலவுதான்... அல்ல... வாசக முதலீடு. வருடத்தில்  12 புத்தகங்கள் கிடைக்கின்றன.  தவற விடமுடியாத புத்தகங்கள்.

2. நல்ல புத்தகமாக  இருக்கும்போது அவற்றைப் பிற வெளியீட்டாளர்களிடமிருந்து வாங்கி அதை சந்தா தாரர்களுக்கு முன்பு தந்தார்கள் . (உதாரணமாக சாருவின் கட்டுரைத் தொகுப்பு, விலையே  ரூ.600.) 

3.  வாசகரை மனதில் கொண்டு செயல்படும் வாசகர் மையம் இது. இதன் பல நூல்கள் வெளியே கிடைக்காது. 

4. எளிதில் கிடைத்துவிட முடியாத தொகுப்புகளை இவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். உதாரணமாக - 

விட்டல் ராவின் போக்கிடம் நாவல் (அச்சிலேயே இல்லை). க.சுப்ரமணியனின் வேரும் விழுதும் (நம்மில் பலருக்கு இப்படி ஒரு நாவல் இருந்ததே தெரியாது)  

பாரதி பற்றிய சித்திர பாரதி (தகவல் களஞ்சியம். ஒரிஜினல் போட்டோக்கள்விலை ரூ 360/-); 

பாரதியை மொழிபெயர்ப்பாளராக காட்டும் தாகூர் மொழிபெயர்ப்பு;  ரா.கி.ர டைம்ஸ்; 

சூடாமணியின் அர்த்தங்கள் ஆயிரம்; 

 ஆ.மாதவனின் புனலும் மணலும்; 

வழக்கறிஞர் சுமதியின் நாவல் கல் மண்டபம் (இந்தப் பின்னணியில் இதுவரை இப்படி வேறொரு  நாவலே வந்ததாக தெரியவில்லை ). இவை நாம் சேகரிக்க வேண்டிய நூல்கள்.

5. எல்லாவற்றுக்கும் மேல் சிறுவாணி எழுத்தாளர்களுக்குத் தரும் கௌரவம்.  எழுதியதற்குப் பணம் கேட்டு நினைவூட்டு கடிதம் எழுதும் தற்போதைய தமிழ் இலக்கிய சூழலில், அப்படி ஒரு அசூசையான அவலத்தை ஒருபோதும் உண்டாக்குவதில்லை  சிறுவாணி. 

ஏதோ ஒரு பதிப்பகத்தை ஆதரிப்பது அல்ல இது.  அதனோடு சேர்ந்து பயணிப்பது.

இதை நாம் ஆதரிக்க வேண்டும் அல்லவா !  புதிய சந்தாதாரர்களை அறிமுகப் படுத்தவேண்டும்.   ஏனென்றால் சிறுவாணி வணிக நோக்க செயல்பாடு அல்ல.  வாசகர்கள் மட்டுமே அதன் பலம்.

(நண்பர்களை சிரமப்படுத்த கூடாது என்று தனியாக யாரையும் Tag செய்யவில்லை.  ஆகவே நீங்கள் விரும்பினால் உங்கள் பக்கத்தில் இதை Share செய்யுங்கள்.  பலரை அறிமுகம் செய்து உதவுங்கள் )

நன்றி !

Ramesh Kalyan sir பகிர்வு

---------------------------------------------------------


Tuesday, February 28, 2023

"தவிப்பூ" -மகேஷ்குமார் செல்வராஜ்(ம.செ)-மார்ச் -2023





மார்ச் -2023 

"தவிப்பூ" -

மகேஷ்குமார் செல்வராஜ்(ம.செ)

------------------------------------------------------------------

மகேஷ் குமார் செல்வராஜ், இந்த 'தவிப்பூ' சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழ்ப் புனைவுப் புலத்தில் புது நாற்றாகப் பதியமாகிறார். தமிழ் இலக்கியத் தட்டகத்தில் வளம் கூட்ட முனையும் பல புதிய இளம் படைப்பாளிகளுள் ம.செ.யும் அணி சேர்கிறார்.                                                              

 -நாஞ்சில்நாடன் 


**                                                                                                                                                               

நிம்மதியான காலங்களில் இந்தக் கதைகள் இவற்றை வாசிப்பவர் மனதுக்குக் குதூகலத்தைத் தரும்; பொய்மையாலும், பகைமையாலும் வருந்தி மனம் சோர்வுற்ற காலங்களிலும் இவை வாசிப்பவருக்கு அமைதியை, நம்பிக்கையைத் தரும். அவ்வாசகர் எங்கிருந்தாலும் அவ்விடத்தில் சற்று நேரத்துக்காவது சாந்தி நிலவும். 

-வ. ஸ்ரீநிவாசன்.




 

"ரசிகமணியின் நாத ஒலி"-தீப.நடராஜன்-பிப்ரவரி-2023

 


பிப்ரவரி-2023 

"ரசிகமணியின் நாத ஒலி"-

தீப.நடராஜன்






#ரசிகமணி டிகேசி விழா

—————————————


 (11-2-2023)  மாலை ரசிகமணி டி.கே.சி.யின் 141 ஆவது பிறந்தநாள் விழா சென்னையில் காந்தி கல்வி நிலையம்-

டக்கர்பாபா அரங்கில் நடந்தது. ரசிகமணியின் பேரன் தீப.நடராஜன் எழுதிய ‘ரசிகமணியின் நாத ஒலி ’ என்ற நூலை வெளியிட்டேன். நூல் வெளியீட்டு விழாவுக்கு திருப்பூர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஜஸ்டிஸ் எஸ்.மகராஜனின் புதல்வர் எம்.சிதம்பரம், டி.கே.சி.யின் கொள்ளுப் பேரன் இரா.தீத்தாரப்பன்,செல்லையா, டில்லி காந்தி அறநிலையத்துறையின் அண்ணாமலை,டிதிருமலை அவர்களின் புதல்வி சுபாஷினி, கிரா புதல்வர் திவாகர் மற்றும் டி.கே.சி குடும்பத்தார் உட்பட பலர் இந்த இலக்கியத் திருவிழாவில் பங்கேற்றனர். விழா இனிதே நடந்தது.

 தொற்று நோய் பாதிப்புக்கு பின்,இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லை வட்டார மக்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பும், சென்னையில் உள்ள திருநெல்வேலி வட்டார மக்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. இன்றைய மாலைப் பொழுது நல்ல நிகழ்வுகளுடன் இனிதாகக் கழிந்தது.


#KSR_Post

1-2-2023

------------------------------------------------------

"இராமாயணத்தில் 627 பாடல்களை இடைசெருகல் என்று போராடி நீக்கியவர் ரசிகமணி" என்று ரசிக மணி பேரன் தீப நாடராஜனின்’ நாத ஒலி’ புத்தகத்தை வெளியிட்டு ரசிகமணி பற்றிய பல அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.கே எஸ் இராதாகிருஷ்ணன். அவரின் சிறப்புரை இதோ.....

#ரசிகமணி 

https://youtu.be/1kwiKOA-fx4

#ksrvoice #ksr #TKC  

follow for more information

#KSR_Post

 (22-2-2023)தினமணியில் #ரசிகமணி டிகேசியின் அன்றைய குற்றாலம் குறித்த‘ குற்றால முனிவர் ரசிகமணி’ என்ற கட்டுரை வெளி வந்துள்ளது.

*---------------------------------------------

ரசிக மணியும் திருக்குற்றாலமும்!

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

 

“குற்றாலத்துக்கு வந்தவர்கள் எல்லாரும் மலை, செவ்வானம், மேகம், மலை ஓடைகள், குரங்குகள், கோவில் எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள். அந்த அனுபவங்களைத் தாளத்திலும், தமிழிலும் வைத்துப் பரிமாறும்போது மனம் இழுபட்டுக் கூத்தாடவே ஆரம்பித்துவிடுகிறது. பாடலை அனுபவிக்கிறது என்றால் அதுதானே?” என்கிறார் ரசிக மணி டி.கே.சி. நீதிபதி மகராஜனுக்கு 23.07.1945 - இல் எழுதிய கடிதத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்.  

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த டி.கே.சி.யின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஊர் குற்றாலம். குற்றாலம் பகுதியில் போல இயற்கையாக எழும் ஒலிகளையும் தமிழ் பாடல்களின் ராக, தாளங்களையும் இணைத்துக் காண்கிற இந்த அவருடைய ரசனை உணர்வே அவரை ரசிகமணியாக்கி இருக்கிறது. 

இதை, டி.கே.சி. எழுதிய கட்டுரையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். 

“கவி என்பது உணர்ச்சி உலகத்தில் ஊடாடுகிற காரியம். லகுவான முரையில் விஷயத்தை ஒரு தாளத்தில் வைத்து அது பேசும். அப்படிப் பேசும்போது எதிர்பாராத முறையில்  அரிய உணர்ச்சி ஒன்று பிறந்துவிடும். அதிசயமாய் இருக்கும்.

கவியிலும் அதாவது உண்மை ததும்பும் உருவத்தோடு கூடிய கவியிலும் ஈடுபட்டுவிட்டால், வார்த்தை, தாளம், தமிழ்ப் பண்பு இவைகளில் அப்படியே கரைந்துவிடுகிறோம் நாம். பாஷைக்கு ஒரு மந்திர சக்தி இருக்கிறதாகவே தெரிய வருகிறது. கவியிலுள்ள உணர்ச்சி வசமாய்ப் போய், வார்த்தை, தாளம், செய்யுள்கோப்பு இவைகளால் ஆகிய உருவமாகவே மாறி விடுகிறோம். கவிக்கு விஷயம் அல்ல, உருவமே பிரதானம் ” என சொல்கிறார். 

வழக்கறிஞரான டி.கே.சி. நெல்லைவண்ணார்பேட்டையில் வாழும்போது, வட்டத் தொட்டி என்ற பெயரில் இலக்கியக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார். ஜஸ்டிஸ் மகராஜன், வையாபுரி பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, சோமசுந்தர பாரதியார், மீ.ப.சோமு, ல.சண்முகசுந்தரம், பாஸ்கரதொண்டைமான், அ.சீனிவாச ராகவன், பெ.நா.அப்புஸ்வாமி, கே.பி.கணபதி, டி.டி.திருமலை, நீலாவதி சுப்பிரமணியம், மு.அருணாசலம், ஜி.சி.பட்டாபிராம் மற்றும் பல இலக்கியவாதிகள், ஆர்வலர்கள் கலந்து கொண்ட கூட்டம் அது. தமிழ்க் கவிதைகளில் புதைந்து கிடந்த ஆழமான கருத்துகளை எல்லாம் தனது சுவையான பேச்சுகளின் மூலம் வெளிக்கொண்டுவந்து அவற்றின் சுவையை ஏராளமானோரை அனுபவிக்கச் செய்திருக்கிறார்.

ரசிகமணி நெல்லையில் இருந்தபோதும் சரி,திருக்குற்றாலத்தில் இருந்தபோதும் சரி அவர் வீட்டில் கூடும் தமிழ் அன்பர்களிடம் கம்பனின் கவியாற்றலையும் கம்பரின் பெருமைகளையும் டி.கே.சி விவரிக்கும்போது எல்லாரும் மெய்மறந்து கேட்பார்கள். 

வாரம் ஒருமுறை ஒவ்வொருவரும் நேர்முகமாகப் பார்க்கும் விதத்தில் வட்ட வடிவமான முறையில் அமர்ந்து நடத்தப்பட்ட இந்த வட்டத்தொட்டி இலக்கிய முற்றம் ‘டி.கே.சி. வட்டத்தொட்டி’ எனப் பிரபலமடைந்தது. இந்த வட்டத் தொட்டி நிகழ்ச்சிக்கு மட்டுமல்லாமல்,எழுத்தாளர் லா.ச.ரா. திருநெல்வேலி வண்ணார்பேட்டைடி.கே.சி. வீட்டுக்கு அடிக்கடி வருவது வழக்கமாகஇருந்திருக்கிறது. லா.ச.ரா தென்காசியில் 3 ஆண்டுகள் வங்கி மேலாளராக பணிபுரிந்த காலம் அது.

டி.கே.சி 1926- இல் சென்னை மாகாண சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து இந்து அறநிலையத்துறை ஆணையராகவும் பொறுப்பேற்றார்.

நெல்லையில் டி.கே.சி. இருந்தபோதே ராஜாஜி, கல்கிகுடும்பத்தினர் அவருக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்திருக்கின்றனர். நெல்லை வீட்டுக்கு அவர்கள்குடும்பத்தோடு வந்து தங்கி டி.கே.சி.யுடன் குடும்ப நண்பர்களாகப் பழகியிருக்கின்றனர். கல்கி, சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி என கல்கி குடும்பத்தினரும் அடிக்கடி இங்கே வருவதுண்டு.

ராஜாஜியும் கல்கியும் எப்போதும் டி.கே.சி.யுடன் நல்ல நண்பர்களாகவே இருந்திருக்கிறார்கள். ராஜாஜி, கல்கி, டி.கே.சி. மூவரும் பழகத் தொடங்கிய காலத்தில் ராஜாஜியும் கல்கியும் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். நீதிக் கட்சியில் சிறிது காலம் தொடர்பு வைத்திருந்தார் டி.கே.சி. ஆனால் அவர்களுடைய நட்பை அவர்கள் சார்ந்திருந்த கட்சி எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அவர்களுடைய நட்பு இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒருவரையொருவர் உண்மையாகப் புரிந்து கொண்ட, தூய அன்பை அடித்தளமாகக் கொண்டது.

டி.கே.சி. நெல்லையில் இருக்கும்போதே குற்றாலத்துக்கு அடிக்கடி வந்துவிடுவார் வருவதற்கு முன்பு ராஜாஜியையும், கல்கியையும் குற்றாலத்துக்கு வரச் சொல்லி கடிதம் எழுதிவிடுவார். குற்றாலத்தில் டி.கே.சி. தங்குவது கோவிலுக்கு அருகே உள்ள 1 ஆம் எண் பங்களாவில்தான். டி.கே.சி. ஐந்தாண்டுகள் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக பணியாற்றியவர் என்பதால் அங்கே தங்குவதற்கு அவரிடம் வாடகை கேட்க மாட்டார்கள்.

அதற்குப் பிறகு நிரந்தரமாகவே குற்றாலத்துக்கே குடிவந்துவிட்டார். குற்றாலம் தேவஸ்தானத்தினரிடத்தில் இருந்து 1942 -ஆம் ஆண்டு குற்றாலம் ஐந்தருவிச் சாலையில் அருகருகே உள்ள எட்டறை என்ற வரிசை வீடுகளில் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டார். ஒரு வீட்டில் குடும்பத்தார் தங்கினார்கள். அந்த வீட்டில் சமையல், சாப்பாடு, விருந்தினர்களை உபசரிப்பது எல்லாம் நடக்கும். இன்னொரு வீட்டில் டி.கே.சி. தங்கியிருந்தார்.  படிப்பது, எழுதுவது, நண்பர்களுடன் உரையாடுவது எல்லாம் அங்கேதான். தமிழ்க் கவிதைகளைப் பாடுவது, அவற்றுக்கு விளக்கம் கூறுவதும் இங்கேதான்.  

டி.கே.சி. வீட்டில் தினமும் 20 பேர் , 25 பேர் பந்தியில் அமர்ந்து சாப்பிடுவார்கள். அவர்களுடைய  ஒரே மகன் செல்லையா என்கிற  தீத்தாரப்பன் 32 வயதில் மறைந்தார். அந்த மறைவை டி.கே.சி.யாலும் அவருடைய துணைவியாராலும் தாங்கிக் கொள்ள முடியாதநிலையில் பல விருந்தினர்கள் வீட்டுக்கு வருவதும், வந்த விருந்தினர்களை நன்கு உபசரிப்பதும் அந்த கவலையில் இருந்து அவர்கள் மீள உதவியிருக்கிறது.

டி.கே.சி. தரையில் சம்மணம் போட்டு அமர்ந்துஇலையில் சாப்பிடுவது வாடிக்கை. பின் தரையில் அமர்ந்து எழ இயலாத காலத்தில் நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிடுவார். ரசிகமணி கையில் உணவை எடுத்துச் சாப்பிடுவதே தனி அழகாக இருக்கும். பருப்பு,நெய் எப்படி குழைய வேண்டும்? சாம்பாருடன் எப்படி சாதத்தைப் பிசைந்து சாப்பிட வேண்டும்? ரசத்தைச் சாப்பிட்ட பின் ரசநீர் பருக்கையோடு  கைவிரல்களால் எப்படி சுவையாக உறிஞ்சிச் சாப்பிடுவது? பாயசத்தில் பொரித்த அப்பளத்தை, காராபூந்தியையோ விட்டுச் சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் சொல்வார். கட்டித் தயிராக விரும்பிச் சாப்பிட்ட ரசிகமணி.பிற்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்பட்டதால், தயிரைத் தவிர்த்து மோரைச் சாப்பிட்டார். ஊறுகாயை ஆள்காட்டி விரலின் ஓர் ஓரமாகச் சற்று எடுத்து நாக்கில் வைப்பார்.சிறு கரண்டியில் எடுத்து வாயில் வைப்பதைப் போல துவையலை இரண்டு விரல்களில் எடுத்து வாயில் வைக்க வேண்டும் என்று சொல்வார். சாப்பிடுவதை ஒரு கலை என்று சொல்வார். 

இன்றைக்கு இட்லி, தோசைக்கென்று தனி அரிசி வாங்குகின்றோம். அப்போது இட்லி தோசைக்குஎல்லாம் ஒரே அரிசிதான். ரசிகமணி வீட்டில் அப்போதேசோறு பொங்க தனி அரிசிதான். இட்லி, தோசை, வடை போன்ற சிற்றுண்டிகளுக்கு சரியான அளவில் அரிசியும் உளுந்தும் போட வேண்டும் என்று அவரே சொல்வார். மோர் மிளகாயும், ஊறுகாயும் இத்தனை நாள் சூரிய வெப்பத்தில் வைக்க வேண்டும் என்பதையெல்லாம் அவரே சொல்வதுண்டு. ரசிகமணி வீட்டுத் தோசை அன்றைக்கு எல்லாராலும் சிலாகிக்கப்பட்டது. 

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் டிகேசி இருந்த வீடு மாளிகை போன்றிருக்கும். ஆனால் குற்றாலத்தில் இருந்த வீடு அந்த அளவுக்குப் பெரியதில்லை. 

டி.கே.சி. குற்றால வீடுகளுக்கு குடியிருக்க வரும்போது வீட்டில் மின் இணைப்பு இல்லை. அரிக்கேன் விளக்குதான். இரண்டு மாடுகள் பூட்டிய வில்வண்டியில்தான் பயணம் செய்ய வேண்டும். வில்வண்டிகள் தவிர, சைக்கிள்தான் அப்போது போக்குவரத்துச் சாதனமாக அங்கிருந்தது. இன்று உள்ளதைப் போல அன்றைக்கு தொலைபேசி வசதி எல்லாம் கிடையாது. ராஜாஜி, கல்கி ஆகியோரிடம் இருந்து வரும் தகவல்கள், செய்திகள் எல்லாம்கடிதங்கள், தந்தி மூலமாகத்தான் வரும். குற்றாலத்தில் சாரல் தொடங்கி, அருவிகள் பெரிய அளவில் வழியத் தொடங்கும்போதுதான் குற்றாலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். அது வரை ஒரு கிராமத்தைப் போல, குறைவாக மக்கள் நடமாட்டம் இருக்கும்.  

அப்போது குற்றாலத்தில் உணவகங்கள் கூட மிகவும் குறைவாகவே இருந்தன. கடைத் தெருவில் இருந்த போத்தி ஹோட்டல், மண்டபம் ஹோட்டல், பாம்பகோயில் பிள்ளை உணவகம், அய்யங்கார் உணவகம் என்று ஒருசில உணவகங்களே இருந்தன. 

குற்றாலநாதர் திருக்கோயிலின் வடக்கு வாசலில் இருந்து அருவிக்குப் போகும் வழியில் வலது பக்கம் மலையின் அடியில் கசிந்து வரும் நீரை தொட்டியில் நிரப்பி, கோயிலின் மடப்பள்ளிக்கு பயன்படுமாறு ஒரு குழாயும், கோயிலுக்கு வெளியே மக்களுக்குப் பயன்படுமாறு இன்னொரு குழாயும் அமைக்கப்பட்டிருக்கும். வடக்கு வாசல் பக்கத்தில் வரும் தண்ணீரை தென்காசி பகுதியில் வாழ்பவர்கள் எல்லாம் பிடித்துக் கொண்டு சென்று பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. அதற்குக் காரணம், தென்காசியில் அப்போது தண்ணீர் சற்று சவராக இருக்கும். 

இந்த நீர் விழும் பகுதிக்கு அருகில் இருந்த சிறு வீடுஒன்றில் ஸ்ரீமத் மௌன ஸ்வாமிகள் தங்கியிருந்தார். நாட்கள் செல்ல பக்தர்கள் வருகை அங்கேஅதிகரித்ததால், செங்கோட்டை சாலையில் ஸ்ரீமத்மௌன ஸ்வாமிகள் மடம் அமைக்கப்பட்டது.  

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ், என்னகாரணத்தாலோ ராஜீவ்காந்தியால் இந்திரா படுகொலைக்குப் பிறகு புறக்கணிக்கப்பட்டார். இதனால் மிகவும் மனவேதனை அடைந்த நரசிம்மராவ்,தன்னுடைய சொந்த ஊரான ஹைதராபாத்துக்குசென்றுவிடுவோம்; இனிமேல் அரசியல் வேண்டாம் என்றுமுடிவெடுத்துவிட்டார். அதன் பின் குற்றாலத்தில் உள்ள தற்போது இருக்கும் ஸ்ரீமத் மௌன ஸ்வாமிகள்மடத்திலேயே இறுதிக் காலம் வரை தங்கிவிடலாம் என்று தீர்மானித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாகஅவருக்குப் பிரதமராகும் வாய்ப்பு 1991- இல் கிட்டியது. 

 

டி.கே.சி. வீட்டுக்கும் ஐந்தருவிச் சாலைக்கும் நடுவே வாய்க்கால் ஓடும். தெளிந்த நீர் அதில் பளிங்குபோல் எப்போதும் ஓடிக் கொண்டு இருக்கும்.டி.கே.சி.குடியிருந்த எட்டறை வரிசை வீடுகளுக்குஎதிரில் சிற்றருவிகளுக்குப் போகும் பாதை மலைமேல்ஏறத் தொடங்கும். எப்போதும் வண்டுகளின் ரீங்காரம், காட்டுமல்லியின் நறுமணம், பேரருவியின் ஓசை என மனதுக்கு மகிழ்ச்சி தரும் சூழல் நிலவியதால், அனைத்து வசதிகளும் இருந்த நெல்லை வண்ணார்பேட்டையை விட்டுவிட்டு டி.கே.சி. குற்றாலத்துக்கு குடிபெயர்ந்திருக்கிறார்.

குற்றாலத்துக்கு டி.கே.சி.குடியேறிய பிறகும், ராஜாஜி, கல்கி குடும்பத்துடன் குற்றாலத்துக்கு வருவார்கள். பிச்சம்மாள் அண்ணிக்கு அதாவது டிகேசியின் மனைவிக்கு விருந்தினர்களை உபசரிப்பதுதான் வேலை. அண்ணி என்பது பெண்களைக் குறிக்கும் சொல்லாக அன்றைக்கு இருந்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு பாட்டியை குழந்தைகள் அண்ணி என்றே கூப்பிடுவார்கள். ராஜாஜி, கல்கி, எம்.சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி எல்லாரும் அண்ணி என்றே பிச்சம்மாளை அழைப்பார்கள். 

குற்றாலத்தில் மலைமேல் திறந்தவெளி இருந்தது. அதில் டி.கே.சி.யும் அவருடைய நடைப்பயிற்சி செய்தும் அமர்ந்தும் தமிழ் இலக்கியத்தைக் குறித்து எப்போதும்போல மாலை நேரங்களில் பேசுவது உண்டு. 

ராஜாஜி கேட்டுக் கொண்டதற்கிணங்க 1953 இல் சென்னை ஆளுநர் ஸ்ரீபிரகாசா குற்றாலத்துக்குவந்திருக்கிறார். ஆங்கிலத்தில் விளக்கமளித்து பின்னர் தமிழ் கவிதைகளை டி.கே.சி. பிரகாசாவுக்கு பாடிக் காட்டினார். இதுபோன்று இதற்கு முன்பு காந்தி,வினோபா பாவே அவர்களுக்கும் டி.கே.சி. இதுபோன்று பாடிக் காட்டியிருக்கிறார். அதற்குப் பின்பு ஒருமுறை ஆளுநர் பிரகாசா வந்தபோது, டிகேசி காலமாகிவிட்டார். ஆளுநர் பிரகாசா டிகேசி இல்லம் சென்று ரசிகமணியின் மறைவைக் குறித்து விசாரித்ததும் உண்டு. அன்றைய தமிழக சட்டப்பேரவைத் தலைவர் சிவசண்முகம் பிள்ளையும் குற்றாலம் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

அறிஞர் அண்ணா 1947 இல் கம்பராமாயணம் குறித்து ‘கம்பரசம் ’ என்ற நூலை எழுதினார். கம்பராமாயணத்தில் காணப்படும் காமம் தொடர்பான பாடல்களை அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார். 

அதற்கு முன்பிருந்தே  கம்பனின் கவியுள்ளத்தை வெளிப்படுத்தும் பணியில் டி.கே.சி. ஈடுபட்டிருந்தார். ‘கம்பர் தரும் காட்சி’ என்னும் தலைப்பில் கல்கி இதழின் ஆரம்ப இதழில் 1941 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கம்பராமாயணத்தை விளக்கப்படுத்தி எழுதி வந்தார் டி.கே.சி. சுமார் பத்து ஆண்டுகள் ஒவ்வொரு இதழிலும் அந்த கட்டுரைகள் இடம் பெற்றன. அதன் மூலம் சாதாரண படிப்புள்ள வாசகரையும் கம்பர் கவியை அனுபவிக்கச் செய்ய முடிந்ததே என்ற எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டார் டி.கே.சி.

கம்பராமாயணத்தில் ஆழமாக மூழ்கிய இவர், அந்தக் காவியத்தில் சேர்க்கப்பட்டிருந்த 627 இடைச்செருகல்களை அடையாளம் கண்டார். அவற்றை எல்லாம் டி.கே.சி. நீக்கினார்.  கம்பர் கவிதைகளில் சிலவற்றை திருத்தம் செய்து அவற்றை அர்த்தம் பாவம் பொலிந்த கவிதைகளாகப் பதிப்பித்தார். இதற்கு நிறைய எதிர்ப்புக் கிளம்பியது. அது 1953 ஆம் ஆண்டு ‘கம்பர் தரும் ராமாயணம்’ என்ற நூலாக வெளிவந்தது.‘கம்பர் தரும் ராமாயணம்’ நூலின் முதல் தொகுதிவெளியீட்டு விழா குற்றாலத்தில் நடந்தது. அதில் ராஜாஜிபங்கேற்றார். 

இதன் முதல் தொகுதி திருநெல்வேலி டவுனில் உள்ள அச்சகத்தில் அச்சிடப்பட்டது. அதன் முதல் தொகுதியின் பிரதி டி.கே.சி.யால் கையெழுத்திடப்பட்டுபிரதி கிராவுக்கு அனுப்பப்பட்டது. அதை கிரா என்னிடம் கொடுத்தார். கடந்த வருடம் திரும்பவும் டி.கே.சி.யின் ராமாயணத்தை அல்லயன்ஸ் பதிப்பகம் மூன்று தொகுதிகளையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு தொகுப்பாக வெளியிட்டது. அதற்கு ரசிகமணியின் பேரன் தீப.நடராஜன், கி.ரா., மாலன், அடியேனும் வாழ்த்துரை வழங்கினோம். வெளியிடப்பட்ட அந்தப் புத்தகத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று தீப.நடராஜன் விரும்பினார். அவர் மறைந்த இரண்டு நாள்களுக்குப்பிறகுதான் அச்சடிக்கப்பட்டு, பைண்டிங் செய்யப்பட்டு நூல் கைக்கு வந்தது. நூலைப் பார்க்காமலேயே கிராவும் மறைந்துவிட்டார். இந்த இருவரும் இந்த மூன்று தொகுதிகளையும் ஒருங்கிணைந்தமுறையில் பார்க்க விரும்பினார்கள். இதற்காகப் பொறுப்பெடுத்து பணியாற்றிய என்னால் உரிய நேரத்தில் நூலை அவர்களுக்கு வழங்க முடியவில்லையே என்பதுஎன்னுடைய வாழ்க்கையில் தீராத கவலையாக உள்ளது.

ரசிகமணி டி.கே.சி. என்று மனத்துள் எண்ணும் போதே கவிதை நினைவுக்கு வரும். அதே போல் அடுத்து நினைவுக்கு வருவது இசையாகும். கவிதையை எப்படி அனுபவித்தாரோ அதுபோன்றே இசையையும் அனுபவித்தவர் டி.கே.சி. 

 இசை அறிவும் ஈடுபாடும் டி.கே.சி.க்கு அதிகம். தமிழ்க் கவிதைகளை எல்லாம் தனக்கேயுரிய பாணியில் இசையோடு பாடித்தான் பிறருக்கு வழங்கி வந்தார்.

சென்னையில் டி.கே.சி. இருந்தபோது வீணை தனம்மாளை அடிக்கடி சந்தித்து தனது இசையறிவை வளர்த்துக் கொண்டார். டி.கே.சி. வீட்டில் வீணை தனம்மாளின் படம் இருந்தது.

 சென்னை மாநகராட்சி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஜே.ராமானுஜாச்சாரி ஓராண்டு விடுமுறை எடுத்துக் கொண்டு குற்றாலத்துக்கு வந்தார். டி.கே.சி.வீட்டில் தங்கி டி.கே.சி.பேரப்பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தார். இதெல்லாம் கல்கியின் ஏற்பாடு. இதற்குக் காரணம்,கல்கிக்கும் இந்த கருத்து உண்டு. குழந்தைகள் புத்தகமூட்டையைச் சுமந்து செல்வது, வேண்டாத பாடங்களை அவர்கள் மூளைக்குள் திணிப்பது, ஆசிரியர்கள் கடுமையுடன் பிள்ளைகளிடம் நடந்து கொள்வது ஆகியவற்றிற்கு எதிரான கருத்துகளை பெற்றோன் என்ற புனைபெயரில் கல்கியில்  தொடர்ந்து எழுதியிருக்கிறார். 

கல்கி குடும்பத்தினர் குற்றாலம் வந்தால் டி.கே.சி. வீட்டில்தான் தங்குவார்கள். சென்னைக்கு டி.கே.சி. குடும்பத்தினர்  சென்றால் கல்கி வீட்டில்தான் தங்குவார்கள். 1937 முதல் குற்றாலம் செல்வதை கல்கி வழக்கமாக வைத்திருந்தார்.  ஆஸ்த்மா நோயாளியான கல்கிக்கு குற்றாலம் குளியலால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.  சிவகாமியின் சபதத்தில் குற்றாலம் தொடர்பான காட்சிகள் பல இடம் பெற்று இருக்கின்றன. புரச மரங்கள் பூத்துக் குலுங்குவதை எழுதியிருக்கிறார். 

கல்கியில் நன்கொடை வசூலித்து எட்டையபுரத்தில் பாரதி மணிமண்டபம் கட்டியதும், திறப்பு விழா நடத்தியதும் கல்கிதான். ‘பாரதி ஸ்பெஷல்’ என்ற ரயில் கோவில்பட்டிக்கு விடப்பட்டது. இந்த பாரதி மண்டபம் கட்டும் பணிகளுக்கான அலுவலமாக டிகேசியின் குற்றால வீடு இரவும் பகலுமாக காட்சி தந்தது. 

ரசிகமணி டி.கே.சி. 1954-ஆம் ஆண்டு 73-ஆம் வயதில் மறைந்தார்.

‘கம்பனைப் போன்று ஒரு ரசிகன் கிடைப்பதற்கு வள்ளுவர் 700 ஆண்டுகள் காத்திருந்தார். டி.கே.சி.யைப் போன்ற ஒரு ரசிகன் கிடைப்பதற்கு கம்பன் 1000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது’ என டி.கே.சி.க்கு புகழ்மாலை சூட்டியுள்ள ஜஸ்டிஸ்மகராஜன், “நவீன குற்றாலத்தில் ஐந்தருவி செல்லும் சாலையில்தான் டி.கே.சி வாழ்ந்த வீடும் அவரது நினைவாய் அமைந்துள்ள நூலகமும் உள்ளது என்கிற விஷயமே அங்கிருக்கும் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. தன் உற்ற நண்பர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்த சமயத்தில் கூட தனக்கென எதையும் பெற்றுக் கொள்ள முனையாது குற்றால முனிவராகவே வாழ்ந்த டி.கே.சி தனது இறுதிகாலத்தில் வசித்த இரண்டு வீடுகளும் இன்று சுற்றுலாப் பயணிகள் வாடகைக்குத் தங்கும் விடுதிகளாக இருப்பதைப் பார்க்க சங்கடமாயிருந்தது. அவரது நினைவாக உள்ள நூலகத்தின் ‘பெயர் பலகை’கூட நிறம் மங்கி நிற்பது டி.கே.சிக்கு பெருமை தருவதாயில்லை.

இதற்கு மாறாக பழைய குற்றாலத்துக்கு செல்லும் பாதையில் அமைந்திருக்கும் அவரது நினைவிடம் நம் மனச்சோர்வை அமைதிப்படுத்துவதாய் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் திரிகூட மலையின் நீலச் சிகரங்களின் நிழலில் பசுமை கொஞ்சும் வயல்வெளிகளின் புறத்தில் எளிமையாக அமைந்துள்ளது அவரது சமாதி ” என்கிறார்.

பொருநை ஆற்று ஞானியாகவும், திருநெல்வேலி கன்னல் தமிழின் காவலராகவும் வாழ்ந்தவர் டி.கே.சி. கம்பனின் கவியுள்ளத்துக்கும், தமிழுக்கும், கடிதஇலக்கியத்துக்கும், தமிழிசைக்கும் உழைத்த.டி.கே.சி.க்கு உரிய மரியாதையை செலுத்த வேண்டியதுநமது கடமையாகும்.

 

கட்டுரையாளர்: அரசியலாளர்

ஆசிரியர், கதைசொல்லி


#கேஎஸ்ஆர்போஸ்ட்

#KSR_Post

22-2-2023.


Thursday, December 29, 2022

உடுக்கை விரல் – என். ஸ்ரீராம்- ஜனவரி 2023.



ஜனவரி 2023. வெளியீடு:

 உடுக்கை விரல் – என். ஸ்ரீராம்

சிறுகதைத் தொகுப்பு.


பக்கங்கள் 176  விலை .170/-

---------------------------------------------------

நான் படித்த புத்தகம்


உடுக்கை விரல் – என். ஸ்ரீராம்(98417 16099)

சிறுகதைத் தொகுப்பு.


வெளியீடு:

முதற்பதிப்பு – ஜனவரி 2023.

சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம், 24-5, சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர், கோயம்புத்தூர் – 641 038. 

தொடர்புக்கு:

GR Prakash –

87789 24880  //  99409 85920

siruvanivasagar@gmail.com


புத்தகத்தைப் பற்றி:

இது ஒரு அற்புதமான சிறுகதைத் தொகுப்பு.  தாராபுரம், கோவை, ஈரோடு, பழனி பகுதிகளை உள்ளடக்கிய கொங்குப்பகுதி மக்களின் வாழ்வியல் பேச்சு வழக்கு.  ஆசிரியர் திரு என். ஸ்ரீராம் பால்யத்தில் பார்த்த, பழகிய பாத்திரங்களை கதைகளில் கொண்டு வந்திருக்கிறார்.

15 சிறுகதைகளில் அற்புதமாக எழுதியிருக்கிறார்.

இவரது எழுத்தை திரு நாஞ்சில் நாடன் அவர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

நம் கண் முன்னும் இப்படிப் பாத்திரங்கள் புழங்கியிருப்பார்கள்.

எங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் என் கண் முன்னே உலவிய சில  பாத்திரங்கள்.

வண்டு (கோவணம் மட்டும் தான் கட்டியிருப்பார், கைகளை குறுக்கே மடித்து ஊரெங்கும் நடந்து கொண்டிருப்பார்.  எங்கள் ஊர் திருமுக்குளத்தில் நீண்ட நேரங்கள் மிதந்து கொண்டுரிப்பார்).

பரஞ்சோதி (திருநம்பியாக இருப்பார்.  மாடு மேய்த்துக் கொண்டிருப்பார்.  இவர் எங்கோ ஓரிடத்தில் இறந்து கிடந்தார்.  இவரைப் பற்றி யாருக்கும் தெரியாது).

இப்படிப்பாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்.

இவ்வளவு அற்புதமான சிறுகதைத்தொகுப்பை, நல்ல எழுத்துகளை மக்கள் படிக்கக்  கொண்டு வந்த சிறுவாணி வாசகர் மையம், கோயம்புத்தூர் அவர்களுக்கு பாராட்டுகள்.

அற்புதமான எழுத்து நடைக்கு பாராட்டுகள்.  நாமும் அவர்களுடனேயே இருப்பது போல் இருக்கிறது.  பாராட்டுகள் ஆசிரியர் திரு என். ஸ்ரீராம்

அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம்.

நன்றி நண்பர்களே.

Rathnavel ayya fb

-----------------------------------------------------

உடுக்கை விரல்-என்.ஸ்ரீராம்-

தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

விலை ரூ.170/-


தள்ளுபடி போக ரூ.150/-

(+அனுப்பும் செலவு 

தமிழ்நாட்டுக்குள் ரூ. 40/-

பிற மாநிலங்களுக்கு ரூ 50/-)


NEFT / RTGS மூலம் பணம் அனுப்ப.....


Canara Bank, H .Q.Road Branch, Coimbatore - 641018,


Current A/c no. 61211010003590


IFSC :  CNRB0001204


Beneficiary : Siruvani Vasagar Maiyam. 

****

8778924880

Google pay (siruvani vasagar maiyam) number

*****

சிறுவாணி வாசகர் மையம், 

24-5, சக்தி மஹால், சின்னம்மாள் தெரு, 

கே. கே. புதூர், 

கோவை - 641038


9940985920 /8778924880

(ஜி.ஆர்.பிரகாஷ்)


siruvanivasagar@gmail.com



எழுத்தாளர் என்.ஸ்ரீராம் ,மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா ஆகியோருடன்...






கடவுளுக்கென ஒரு மூலை- (மொ.பெ) -அனுராதா கிருஷ்ணசாமி -டிசம்பர்-2022



 கடவுளுக்கென ஒரு மூலை-

(மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)

-அனுராதா கிருஷ்ணசாமி

பக்கங்கள் 224   விலை  ரூ.220/-

------------------------------------------------------

கடவுளுக்கென ஒரு மூலை-

(மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)

-அனுராதா கிருஷ்ணசாமி


 ரூ.220/-

(+அனுப்பும் செலவு 

தமிழ்நாட்டுக்குள் ரூ. 40/-

பிற மாநிலங்களுக்கு ரூ 50/-)


NEFT / RTGS மூலம் பணம் அனுப்ப.....


Canara Bank, H .Q.Road Branch, Coimbatore - 641018,


Current A/c no. 61211010003590


IFSC :  CNRB0001204


Beneficiary : Siruvani Vasagar Maiyam. 

****

8778924880

Google pay (siruvani vasagar maiyam) number

*****

சிறுவாணி வாசகர் மையம், 

24-5, சக்தி மஹால், சின்னம்மாள் தெரு, 

கே. கே. புதூர், 

கோவை - 641038


9940985920 /8778924880

(ஜி.ஆர்.பிரகாஷ்)


siruvanivasagar@gmail.com

----------------------------------------------------------------

நண்பர் திருமதி அனுராதா கிருஷ்ணசாமியின் சரளமான மொழிபெயர்ப்பில் மிளிர்கிறது, ‘கடவுளுக்கென ஒரு மூலை’, சிறுகதைத் தொகுப்பு.

சிறுவாணி வாசகர் மையம் வெளியீடு.

மொத்தம் 14 கதைகள் -பஞ்சாபி, ஹிந்தி, ஒடியா, உருது, டோக்ரா, வங்காளி, குஜராத்தி, கன்னடம் என்று வரும் சிறுகதைகள் அத்தனையும்  அந்தந்த மொழியில் பிரபலமான பெண் எழுத்தாளர்கள் எழுதியவை.

ஆங்கில, ஹிந்தி வழியே தமிழுக்கு மொழிபெயர்ப்பானவை.

கடைசிக் கதையான குஜராத்திச் சிறுகதை 

’கதவு’ இப்படித் தொடங்குகிறது - ஹிமான்ஷி ஷேலாட் எழுதியது-

//

முட்டாள்ப் பெண்ணே! இப்படியே தொடர்ந்தால் நீ உன் கையாலேயே சாவது நிச்சயம். நான்கு நாள் ஆகிவிட்டதே, உனக்கு வயிறு வலிக்கவில்லையா? அந்தப் பெண்களைப் பார். ஒரு கவலையும் இல்லாமல் எவ்வளவு சந்தோஷமாகக் குந்தியிருந்து விட்டு வருகிறார்கள்! உனக்கு மட்டும் ரொம்பவும்தான் நொரநாட்டியம்

//

கழிவறை இல்லாத கிராமச் சூழ்நிலையில் குந்த வைக்க இடம், நேரம் பார்த்துக் காத்திருக்கும் பெண்கள் பற்றிய  கதை.

அனுராதா மேடத்திடம்  ‘நொரநாட்டியம்’  இங்கே எப்படி வந்தது என்று கேட்டேன்.

‘ஹிந்தியிலே நக்ரா தான்  இங்கே மொழியாக்கமாக வந்திருக்கு”


 May your tribe increase!


நன்றி EraMurukan Ramasami sir

-----------------------------------------

கடவுளுக்கென ஒரு மூலை

(மொழி பெயர்ப்புச் சிறுகதைகள்)

பவித்ரா பதிப்பகம்

எல்லாக் கதைகளையும் பற்றிச் சொல்வது சாத்தியமில்லை/ தேவையுமில்லை என்பதால்  சொல்வதற்கு  நான்கு கதைகள்

அங்கூரி ( பஞ்சாபி)

அம்ரிதா ப்ரீதம்


கணவனின் திருமண பந்தத்தில் அங்கூரி இரண்டாம் மனைவி. பிரபாத்தியின் ஈமச்சடங்குகளின்போது அங்கூரியின் தந்தை அவனுடைய ஈர மேல் துண்டைப் பிழிந்து காயவைத்ததன் மூலம் தன் மகளை அவனுக்கு மணம் முடித்துத்தர மறைமுகமாக உணர்த்துகிறான்.ஆழ்ந்த கரிய நிறம்.அவள் உடல் தசைகள் விண்ணென்று இழுத்துப்பிசையப்பட்ட கோதுமை மாவு போல இருந்தன என வர்ணிக்கப்படுகிற அங்கூரி தனக்கு தேநீரில் எதையோ ராம் தாரா கலந்து கலந்து கொடுத்ததாக முடியும் அந்தக் கதையின் ஆழமும், அது நகரும் விதமும் மனதிலேயே நின்று விடுகிறது


அடிமரம் (ஹிந்தி)

கிருஷ்ண ஸோப்தி


மெஹ்ரானோடு பயணித்து அவள் மகள்களின் திருமணத்தில் பங்கேற்று சந்தோஷமாக இருந்தாலும், அவள் மாமியார்(பாட்டியம்மா) மற்றும் மாமனாரின் முதுமை அவர்களின் எதிர்பார்ப்புகள் அப்படியே மனதை பிசைந்துவிட அவர்கள் தங்கியிருந்த அந்த 'சாமான்கள் அறையை விட்டு வெளியே வர மனம் வரவில்லை. பாட்டிம்மாவின் இறுதி கணங்களில் 

அவள் அருகிலேயே இருந்துவிட நேரிடுகிறது. அண்மையில் வாசித்த கதைகளில் மிகவும் நெகிழ வைத்த கதை இது. இந்தக் கதையில் இருந்து மீண்டு வர நேரம் பிடித்தது.


நீ அப்படியேதான் இருக்கப் போகிறாய்.

சுதா அரோடா (ஹிந்தி)


பெண்களின் அகபுற வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என தரப்படுகிற அறிமுகத்தின்போது தெரியவில்லை ஒரு அருமையான ஆனால் வித்யாசமான கதையை வாசிக்க வாய்த்திருக்கிறது என்பதை. பெண்ணின் நாட்குறிப்பு என்ற  புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இச்சிறுகதை முழுக்க ஆண் தனக்கு வாய்த்தவளின் மீது  வார்த்தைகளால்/ கேள்விகளால் கையாள்கிற அடக்குமுறைகள். (வன்முறை என்றும் வைத்துக்கொள்ளலாம்). 


மோதிரம் (ஒடிசா)

பிரதிபா ரே


இச்சிறுகதையில் தலையில் அடிபட்ட மகன், படுக்கை வசதியின்றி மருத்துவமனையில் தரையில் கிடத்தப்பட்டதை தனக்குத்தானே சமாதானம் சொல்லி ஏற்றுக்கொள்கிற கிழவி, மகன் உயிர்பிரிந்ததும் வாழ்நாள் முழுதுக்குமான தன் துக்கத்தை ஓலங்களின் வழியே வெளிபடுத்தியபோது, அதை வேடிக்கை பார்க்கிறவர்களோடு வாசிப்பவரையும் நெக்குருகச் செய்துவிடுகிறாள். கணவனும் மகனும் பொறுப்பைத் தவிர்த்துவிட்டு பெண்களைச் சுமக்கும்படி செய்துவிட்டு மாண்டுபோன தைரியமற்ற கோழிகள் ( கோழைகள்) என தன்னை ஆற்றுப்படுத்திக்கொள்கிற

அந்தக் கிழவி மனதில் தங்கிவிடுகிறாள்


மிக நேர்த்தியான மொழிபெயர்ப்புச்

சிறுகதைகள்  என்ற 

ஆத்ம திருப்தியோடு 

கடைசிப் பக்கத்திலிருந்து வெளியே வந்தேன்


இந்தத் தொகுப்பில் மொத்தம்

14 சிறுகதைகள், இதில் ஹிந்தி 6, உருது 3, பஞ்சாபி, வங்காளி, கன்னடம், குஜராத்தி, ஒடியா தலா ஒன்று

மாற்று மொழிக்கதைகளை மிக இயல்பான வார்த்தைகளால் மொழி பெயர்த்திருப்பது இந்தத் தொகுப்பின் கூடுதல் சிறப்பு.

வாழ்த்துகள்

அனுராதா கிருஷ்ணசாமி

***

' சுதந்திரத்திற்கு முந்தைய, பிந்தைய பெண் இலக்கியவாதிகளின் வாழ்க்கை மற்றும் படைப்புச் சுதந்திரம் ஆகியவற்றின் சாரமாக இந்தக் கதைகள் விளங்குகின்றன" என்னுரையில்  அனுராதா கிருஷ்ணசாமி

Madhusudhan

------------------------------------------------

கடவுளுக்கென ஒரு மூலை - அனுராதா கிருஷ்ணசாமி :


ஆசிரியர் குறிப்பு:


சென்னையில் பிறந்து, தில்லி, மும்பை போன்ற நகரங்களில் வசித்தவர்.  மத்தியஅரசின் நிறுவனம் ஒன்றில் உயர்பதவி வகித்தவர்.  தீவிர வாசகர். இது இவரது முதல் மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பு.


இந்த நூல், பலவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.  முதலாவதாகப் பணி ஓய்வுபெற்று, பல வருடங்கள் கழித்து அனுராதா, தன் முதல் மொழிபெயர்ப்புத் தொகுப்பின் மூலம் எழுத்து வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்.  இரண்டாவது, இவை அனைத்துமே இந்திய மொழிகளில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை.  கடைசியாக இதில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்கள் அனைவரும் பெண்கள். பெண்கள் என்பதற்கான எந்தவித சலுகையையும் எதிர்பார்க்காமல்,  Commonraceல் கலந்து கொண்டு, பலரையும் முந்தி இலக்கைத் தொடக்கூடியவர்கள்.


அம்ரிதா ப்ரீதம், கிருஷ்ணா ஸோப்தி, இஸ்மத் சுக்தாய், ஆஷா பூர்ணாதேவி போன்ற மாஸ்டர்கள், தமிழில் பரவலான வாசகர்களால் இன்னும் அறியப்படாமலேயே இருக்கிறார்கள். இவர்களது முக்கிய படைப்புகள் தமிழுக்கு இந்நேரம் வந்திருக்க

வேண்டும்.  நம்மில் பலருக்கு வாயில் நுழையாத பெயருள்ள நாட்டிலிருந்து எழுதுபவர் நன்றாக எழுதுவார் என்ற கற்பிதம் இருக்கின்றது.


அம்ரிதாவின் அங்கூரி பல்லடுக்குகள் கொண்ட கதை.  முதலாவதாக கிராமத்தில் பெண்கள் எவ்வாறு Exploit செய்யப்படுகின்றனர், திருமண வாழ்க்கைக்கு அவர்கள் சம்மதம் தேவையில்லை, பெண்கள் படிப்பது பாவம் என்ற பிற்போக்கு நிலை குறித்துப் பெண்ணியம் பேசுகிறது.  இரண்டாவதாக பெரிதும் உரையாடல்கள் மூலம் நகரும் கதையில் வரும் இரண்டு பெண்கள், வேறுவேறு உலகத்தைச் சார்ந்தவர்கள், ஆனாலும் அவர்களுக்குள் பகிர ஒரு அந்தரங்கம் இருக்கின்றது.  அடுத்ததாக இரு ஆண்களின் உருவ அமைப்பு குறித்த ஓரிரு வரிகள் வாசகரைத் தயார்நிலைக்குக் கொண்டு வருகின்றன.  இலக்கியப் படைப்புகளில் சிறுகுறிப்புகள் முக்கியமானவை.  நான்காவதாக, ஆசைக்கும், பாவபுண்ணியத்திற்கும் நடக்கும் நித்திய போராட்டத்தில் ஆசையே வெற்றி கொள்வது. அங்கூரியை, அம்ரிதா மாவு என்றிருப்பார். சப்பாத்தி உருண்டைக்கு, இழுத்து அப்பளம் இட, எண்ணெய்யில் பொரித்தால் உப்பி வர என்று பல மாறுதல்கள் கொள்ளும் மாவு.  பார்வைக்கு எளிமையாகத் தோன்றும் இந்தக் கதையை எழுதுவது எளிதல்ல.  இந்தியாவின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று.


சாதாரண மாமியார்-மருமகள் Ego clash ஆக முடிந்திருக்க வேண்டிய கதை கிருஷ்ணா ஸோப்தியின் சரிகை வேலைப்பாடுகளால் நல்ல கதையாகி இருக்கிறது.  குர்ரத்துலைன் ஹைதரின் கதையில் மனம்போன வாழ்க்கை வாழும் பெண் அவளை நியாயப்படுத்திக் கொள்கிறாள். இஸ்மத் சுக்தாயின் போர்வை கதை பெரும் சர்ச்சைக்குள்ளாகி அவரை லாகூர் நீதிமன்றத்தில் ஆஜராக வைத்த கதை. (அது ஏன் தொகுப்பின் நடுவே முகம்மூடி போர்த்தி ஒளிந்து கொண்டிருக்கிறது?) ஆஷா பூர்ணா தேவியின் கதையில் சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்வது எதற்காக என்பது கதையின் கடைசி வரியின் டிவிஸ்டில் தெரிகிறது. மன்னு பண்டாரி ஐம்பது வருடங்களுக்கு முன்னரே அருமையான உளவியல் கதையை எழுதி இருக்கிறார். உஷா பிரியம்வதாவின் கதை நிதர்சனம். லாட்டி பயங்கரம். 


பதினான்கு கதைகள் கொண்ட தொகுப்பு.  எட்டு இந்திய மொழிகளில் எழுதப்பட்டு, இந்தி மூலமில்லாதவை, இந்திக்கு மாற்றம் செய்யப்பட்டு அதிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. எல்லாக் கதைகளும் ஒரே தரமானவை என்று சொல்ல முடியாது, ஆனால் எல்லாமே சராசரித் தரத்தை மிஞ்சியவை. இரண்டு மொழிகள் தெரிந்து மொழிபெயர்ப்பது வேறு, அந்தக் கலாச்சாரத்தின் நடுவே சிலகாலம் வாழ்ந்து பின் மொழிபெயர்ப்பது என்பது வேறு.  அந்த Advantage அனுராதாவின் மொழிபெயர்ப்புக்குக் கிடைத்திருக்கிறது.  மேலும் இந்தக் கதைகளின் தேர்வுக்காகவும் அனுராதாவிற்கு முதுகில் ஒரு ஷொட்டைத் தாராளமாகக் கொடுக்கலாம்.


பிரதிக்கு:


சிறுவாணி வாசகர் மையம் 99409 85920

முதல்பதிப்பு டிசம்பர் 2022

விலை ரூ. 220.

#மொழிபெயர்ப்புநூல்கள் 


http://saravananmanickavasagam.in/2023/01/05/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81/

 Saravanan manickavasagam 

----------------------------------------------------------

Very meticulously reviewed 

Moment I received this book with the Thiru Nanjil Nadan preface I commenced reading

It had a big impact on me 

I told my wife and sisters to read

Each stories are Pearl 

What a great ladies 

Bravo to Anuradha Krishnaswamy

V N pillai IG

Chennai👆

-----------------------------------------------------

இது வரை நீங்கள் மிகவும் சிரத்தை எடுத்துத் தேர்வு செய்து அனுப்பும் புத்தகங்களுக்கு நான் விமர்சனம் அனுப்பியதில்லை. போன மாதம் தாங்கள் அனுப்பிய அனுராதா கிருஷ்ணசாமி அவர்களின் கடவுளுக்கென ஒரு மூலை புத்தகத்திற்கு நான் அனுப்பும் விமர்சனம்:

முத்தான கதைகளைத் தேர்ந்தெடுத்த அந்தக் கணமே அவரின் வேலை பாதி பூர்த்தியாகி விட்டது. இத்தனை புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கதைகளை எத்தனை அழகாக மொழி பெயர்த்துள்ளார். மொழி பெயர்ப்பு என்றே தெரியவில்லை. பெண் எழுத்தாளர்கள் அவர்களுக்குள்ள கட்டுப்பாடுகளையும் மீறி இவ்வளவு நேர்த்தியாக உணர்வுகளை வெளிப்படுத்த முடிகிறதென்றால் அது இறைவன் கொடுத்த வரம் அல்லாது வேறென்ன?


பத்மா சச்தேவின் தாதி மனதை விட்டு நீங்க மாட்டேனென்கிறது. அருமையான பாத்திரங்கள். கதை சொல்லும் பாங்கு, உயிரோட்டமான நடை அனைத்தும் உன்னத நிலைக்கு எடுத்துச் செல்கின்றன. 

புத்தகங்கள் உலகத்தின் சாளரங்கள்தாமே.

திருமதி அனுராதாவின் கைபேசி எண் குறிப்பிடப் படவில்லை. முடிந்தால் இந்த விமர்சனத்தை அவருக்கு அனுப்புங்கள்.

திருமதி.சாந்தி, திருவனந்தபுரம்

----------------------------------------------------------




கு.அழகிரிசாமி-நிலை பெற்ற நினைவுகள்- வேலாயுத முத்துக்குமார் (தொ.ர்)-November-2022

 



நவம்பர்-2022

கு.அழகிரிசாமி-நிலை பெற்ற நினைவுகள்-

வேலாயுத முத்துக்குமார் (தொ.ர்)


பக்கங்கள்  144  விலை 140 /-

------------------------------------

https://solvanam.com/2022/12/11/%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/

கு. அழகிரிசாமி நூற்றாண்டு (23/9/1923 – 5/7/1970) – ஓர் எளிய மலர்ச்செண்டு

குஅழகிரிசாமி (23/9/1923 – 5/7/1970)

ஒரு கதை பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பது வாசிப்பவரின் மனப்பாங்கையும், மனோ நிலையையும் பொருத்தது. விவரம் தெரிந்து அனுபவ பாசி, சார்பு மாசுகள் படிந்த பின் அவையும் பார்வையின் கூர்மையை, நேர்மையைப் பாதிக்கும். இலக்கிய அனுபவ சாம்ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கவும் குழந்தைகளைப் போல மாசற்ற கவனமும், எதிர்பார்ப்பில்லா குதூகலமும் வேண்டும். ஒருவர் தன்னை எந்த சிதறலுக்கும் ஆளாக்கிக் கொள்ளாமல் தூய்மையான கவனத்தோடு வாசிப்பு சுகத்துக்காகவே வாசித்து, தனக்குக் கிட்டியவற்றை பகிர்கையில் பிறருக்கும் அவை பயன் தரும். அத்தகைய பகிர்தல், தேவைப் பட்டால் ஓர் உரையாடலுக்கும் – நல்ல கதையைப் போலவே – இடம் தரும்.

எல்லா எழுத்தாளர்களைப் பற்றியும் பலதரப்பட்ட விமர்சனங்கள் உள்ளன. ஓர் எழுத்தாளர் பற்றிய விமர்சனங்கள் தவிர, இரண்டு எழுத்தாளர்களை ஒப்பிடுவதும் வழக்கத்தில் உள்ளதுதான். சார்லஸ் டிக்கன்ஸா – டால்ஸ்டாயா, தஸ்தாயெவ்ஸ்கியா – டால்ஸ்டாயா ஆய்வுகளெல்லாம் நூல்களாகவும், யூட்யூப் பதிவுகளாகவும் இருக்கின்றன. நவீன தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான, நூற்றாண்டு காணும் கு. அழகிரிசாமி பற்றியும் பல்வேறு எடை போடல்கள் உள்ளன. வாசிப்பு வானில் நிம்மதியாக முழு ஈடுபாட்டுடன் பறந்து கொண்டிருக்கும் வாசகனுக்கும், எழுத்தாளனுக்கும் இடையேயான உறவு இவற்றால் தொடப்படாதது. அந்த உறவால் மலரும் இன்பத்தை அழகிரிசாமியின் முகம் தெரியா வாசகர்கள் பலரும் கால காலமாக அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

நாம் எப்போதும் இலக்குடனும், பெருமளவு இலக்கின்றியும் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டும், பதிந்து கொண்டும் இருக்கிறோம். அதில் கு. அழகிரிசாமி போன்ற தேர்ந்த எழுத்தாளர் அதன் எல்லா அம்சங்களையும் கூர்ந்து நோக்குகிறார். வாசகரோடு பகிர்கிறார். இதயத்தை நொறுங்க வைக்கும் தாங்கொணாத் துயரையும், நிராசையையும், சாமான்ய மனிதர்களுக்கு நிகழும் சாமான்ய சம்பவங்கள் மூலம் வாழ்வின் சாரத்தையும், அர்த்தத்தையும், அனர்த்தத்தையும், தினசரி வாழ்வில் தானாய் நிகழும் நகைச்சுவையையும் இவரது கதைகளில் நாம் காண்கிறோம். இவற்றில் அவரது நூற்றாண்டு என்னும் இச்சந்தோஷமான தருணத்தில் அவர் தொட்டு நம் இதயங்களில் இட்ட ஆனந்தம் பற்றிய கதைகளில் மூன்றைப் பற்றி சில வரிகள் :-

வனஜம்

வனஜம் என்கிற இந்தக் கதை, கு. அழகிரிசாமி பற்றிய நகுலனின் “ அவருடைய கதைகளை ஒரு முறைக்கு இரு முறையாகப் படிப்பவர்களுக்கு சௌந்தர்ய உணர்ச்சி என்பதன் அர்த்தம் தெளிவாக விளங்கும்” என்கிற கூற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

இக்கதை சொல்லப்பட்ட விதம், விஷயம், வர்ணனைகள் சுகானுபவம்.

14 வயது சிறுமி, 17 வயது வளர்ந்த சிறுவன் இவர்கள் இடையே நிகழ்பவை. கோவில்களுக்கு அருகாமையில், மாட வீதிகளில், திருவிழா, உற்சவ காலங்களில் இருக்க வாய்ப்பு பெற்றவர்கள் இந்தக் கதையில் தவழும் குளுமையை, இனிமையை மீண்டும் அனுபவிக்கலாம். அத்தகு வாய்ப்பு கிட்டாதவர்களும் இக்கதையைப் படிக்கையில் அதைப் பரிபூரணமாக அனுபவிக்கலாம்.

காதலா அது? பாரமில்லாத இன்பப் பிரவாகம். அப்பாவிக் குழந்தைகளின் ஊடாகச் சொரியும் அன்பு ஊற்று. கோவில் சார்ந்த ஊர்க் கூட்டம், அக்காடாவென்று பொறுப்பேதுமில்லாத நிம்மதியும், ஆனந்தமும், களியும் ததும்பும் உல்லாசச் சூழல், அதற்கு உயிரேற்றும் இசை. அங்கு சிவராமன் சிறுவன் போலவா பேசுகிறான்? வாலிபனைப் போல் தன்னை நாஸ்திகன் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் அவன் கவிதையாய் நினைப்பதில், பேசுவதில் என்ன ஆச்சர்யம்? வனஜம் என்கிற அந்தக் குழந்தை. அதன் அப்பாவித்தனம். அழகு. வெள்ளைப் போக்காக படபடவென்ற பேச்சு. அகன்ற கண்களில் பொருந்தியிருந்த, அளவிற்கு அதிகமான மடப்பம். ஒரு மாற்றம் நிகழ்கையில் அதில் கொஞ்சம் குடியேறும் கள்ளப் பார்வை. மனிதர் என்னவாகவெல்லாம் அனுபவிக்க வைக்கிறார் !

60, 70 வருடங்களுக்கு முன்பு வந்த சினிமாக்களில் இது போன்ற காதல் ஓரளவு சித்தரிக்கப் பட்டு இருக்கிறது. பின்னால் தெரியும் வட்ட நிலா, ஓர் ஓடை, சில மரங்கள், பூக்கள், கறுப்பு வெள்ளையிலும் பிரகாசிக்கும் இரவு. வனஜத்தையும், சிவராமனையும் விட சற்று வயதில் மூத்த காதலர்கள் பெரும்பாலும் மிக நல்ல காதல் பாட்டை பாடுவார்கள். பெண்ணின் உதட்டுச் சுழிப்பிலும், ஆணின் அன்பூறும் கண்களின் ஒளியிலும் தூய காதல் பிறந்து கொட்டகைகளை நிரப்பும்.

அற்புதமான இதயப் பிணைப்புகளை, அதன் மூலம் இவ்வுலகின் இயக்க சக்தியை நமக்குக் காட்டும் இன்ப அனுபவம் இக்கதை. கதையைக் கடைசி வரை படிப்பவர்கள் நடுவில் எழும் கேள்விகளும் தானே அடங்கிவிடுவதைக் காணலாம்; உடன் பேரானந்தத்திலும் மூழ்கலாம்.

அன்பளிப்பு

எழுத்தாளன் மனித மனங்களிலும், புற உலகிலும் கவனத்தோடு பயணித்து எழுதுபவன். எல்லா மனிதராகவும் ஆகும் சக்தி அவனுக்கு உள்ளது. அதனால்தான் 80 வயது ஆண் பதினாறு வயது சிறுமியை நம்முன் கொண்டுவர முடிகிறது. ஐம்பது வயது பெண்ணால் இருபத்தைந்து வயது இராணுவ வீரனை தத்ரூபமாக சித்தரிக்க முடிகிறது. இதில் குழந்தைகளை வர்ணிப்பது அலாதியான வரம். அந்த வரத்தைப் பூரணமாகப் பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் அழகிரிசாமி முக்கியமானவர்.

குழந்தைகளே அன்பளிப்புதானே ? நமக்கு மாசற்ற அன்பு அவர்களிடமிருந்துதானே கிடைக்கிறது. அந்தக் குழந்தைகளோடு, சந்தோஷமாய் இருக்கும் பேறு பெற்றவனின் கதை இது. அவனுக்கு ஒரு நோக்கமும் இல்லை. குழந்தைகள் உலகம் என்கிற சொர்க்கலோக வாசி அவன். இதில் அவன் குழந்தைகள் ஒருவரும் இல்லை. அவனுக்கு மணமாகக் கூட இல்லை.

சின்னஞ்சிறு சம்பவங்கள். சாதாரண வாழ்க்கை நிகழ்வுகள். குழந்தைகளின் செய்கைகள், நம்பிக்கைகள், நினைவில் இருத்தி மீண்டும், மீண்டும் துயருறாத நிகழ் இருப்பு. பயம், கட்டற்ற சுதந்திரம், உரிமை. அவனை பெரிய மனித பீடத்தில் தூக்கி வைக்காமல் சமதையான ஜீவனென்று கருதி கைகோர்த்துக் கொள்கிறார்கள். விளையாடுகிறார்கள். சண்டை போடுகிறார்கள். அடிக்கிறார்கள். தண்டிக்கிறார்கள். மன்னிக்கிறார்கள். நேசிக்கிறார்கள். அனைத்தும் அற்புதமாக நம் கண் எதிரே நடக்கின்றன.

இது தானாய்க் கிட்டிய பாக்கியம். அதில் மூழ்கி நீந்துகையில் அவன் கற்றுக் கொண்டே இருக்கிறான். ” உலகத்தில் எல்லோரும் குழந்தைகளிடம் பிரியமாக நடந்து கொள்கிறார்கள், விளையாடுகிறார்கள். ஆனால் அவர்கள் அன்பில் விளையாட்டுணர்ச்சியும், நடிப்பும் கலந்திருக்கின்றன. அவர்களுக்குக் குழந்தைகள் விளையாட்டு பொம்மைகள். ஆனால் குழந்தைகள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள் ” என்கிற உண்மை என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவன் மனதில் தைத்த நாள் முதல் அவன் அவர்களை குழந்தைகளாக நடத்துவதில்லை. உள்ளன்பு என்கிற அந்தஸ்தில் அவனும், குழந்தைகளும் சம உயிர்களாகிறார்கள். மேலும் எத்தனை எத்தனை அவன் குழந்தைகளைப் பற்றி அறிந்துணர்ந்து கொண்டே இருக்கிறான். கடைசி வரை இது தொடரும். கதை முடிந்த பின்பும். அவனுக்கும், நமக்கும்.

தெய்வம் பிறந்தது

இது ஓர் ஆதர்ச இலட்சியவாதக் கதை. இது மனிதனின் முடிவுறா தூய்மைப் படுத்திக் கொள்ளும் முயற்சி பற்றியது. சமூகம் விதித்த விதிமுறைகளைக் கேள்வி கேட்காது ஏற்றுக் கொண்ட மனிதர்கள் பற்றியது. இந்த சுய சுத்திகரிப்பும், தவம் போன்ற அடைமொழிகளைப் பற்றிய பிரக்ஞையே கூட இல்லாத பயன் கருதாச் செயல்பாடுகளும் தவப்பயனுக்கு இட்டுச் செல்லும் அற்புதம் பற்றிய கதை. எழுத்தாளரின் உளத் தூய்மை மட்டுமே இது போன்ற கதைகளை எழுத வைக்கும்.

ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக வேண்டிக் கொண்ட தெய்வங்கள், யாத்திரை செய்த ஸ்தலங்கள் என்று அவர் செய்த பதிமூன்று வருட தவம். ஜென்மாந்திர வாசனையைப் போல் அவர் மனச்சுவரில் ஏதேனும் கறை இருந்தாலும் அதையும் சுட்டெரித்த அத்தவத்தின் கனல். இதில் அவரது உள்ளமே ஒரு கோவிலாகி விட்டது. தவம் செய்து பிறந்த குழந்தை புண்ணியாத்மாவாக இருக்க வேண்டும் என்று, பொறாமை, துவேஷம் இல்லாதவனாக வளர்க்கிறார். பள்ளி ஆசிரியரிலிருந்து வீட்டுக்கு முடி திருத்த வருபவர் வரை அனைவரிடமும் எப்படி அன்பாக, மரியாதையாகப் பழக வேண்டும் என்று சொல்லித் தருகிறார். ”குழந்தையாக வந்து தெய்வம் பேசுகிறது” என்று முடி திருத்தும் வேலாயுதம் சொன்ன போது “என் வயிற்றிலா? நான் என்ன புண்ணியம் செய்திருக்கிறேன்? தெய்வம் வேண்டாம். மனிதன் பிறந்திருக்கிறான் என்று உலகம் சொல்ல வேண்டும். எனக்கு அந்த ஒரு கீர்த்தி போதும் “ என்கிறார்.

உள்ளமே கோவிலாகி விட்ட பிறகு அதில் குடியிருக்க தெய்வம் எப்படி வராது இருக்கும் ? அவர் வயிற்றில் எப்படிப் பிறக்காது இருக்கும் ? தெய்வம் வந்ததை, பிறந்ததை, கண் காண அவருக்குப் பிறந்து விட்டதை, இது நடந்த விதத்தைச் சொல்லி கதை முடிகிறது.

***************

இந்தக் கட்டுரையின் தலைப்பு ‘ஓர் எளிய மலர்ச்செண்டு’. கு. அழகிரிசாமியின் கதைகளையும் அப்படியே குறிப்பிடலாம். அதில் இல்லாத மலர்களே இல்லை.

---------------------------------------

வணக்கம் சார்.. அற்புதமான கட்டுரை இது.  இக்கட்டுரையினை நண்பர் பிரகாஷ் அவர்களுக்கு தாங்கள் அனுப்பிக் தந்த நவம்பர் 30 அன்றிரவே எனக்கும் அனுப்பி இருந்தார். வாசித்துவிட்டு அவரிடம் என் கருத்தை பகிர்ந்திருந்தேன்.

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற (ஜூம் மீட்டிங்) ரசிகமணியின் வட்டத்தொட்டி - கு.அழகிரிசாமி நூற்றாண்டு சிறப்பு நிகழ்வில் அவரது மூத்த மகள் திருமதி.ராதா அவர்கள் கு.அ.வின் தெய்வம் பிறந்தது கதை குறித்து யாரும் அவ்வளவாக பேசவில்லை என்று கூறியிருந்தார். அக்கதை குறித்து இந்தக் கட்டுரையில் தாங்கள் குறிப்பிட்டு எழுதியிருப்பதை கு.அ.வின் புதல்வர் சாரங்கராஜன் அவர்களிடம் தெரிவித்தேன். அவரும் சகோதரியிடம் சொல்லி இருக்கிறார்.

சொல்வனத்தில் வெளியான இக்கட்டுரையினை மீள்வாசிப்பு செய்த போது இச்சம்பவம் நினைவிற்கு வந்தது.

நன்றி சார்...

.வே. முத்துக்குமார்

------------------------------------

https://bookday.in/introduction-to-the-book-velayutha-muthukumars-memories-of-g-azhagiriswamy-bhavannan/

அழகிரிசாமி வந்திருக்கிறார்
பாவண்ணன்

நவீன தமிழ் சிறுகதை ஆசிரியர்களில் புதுமைப்பித்தன், மெளனி, பிச்சமூர்த்தி ஆகியோரின் அடுத்த தலைமுறையைச் சார்ந்த எழுத்தாளர் கு.அழகிரிசாமி. அவர் எழுத்தாளராக மட்டுமன்றி பல்வேறு துறைகளிலும் ஆர்வம் கொண்டவராகவும் விளங்கினார். அவருக்கு இசையிலும் கம்பராமாயணத்திலும் எல்லையற்ற ஆர்வம் இருந்தது. காருகுறிச்சி அருணாசலம், விளாத்திகுளம் சுவாமிகள் ஆகியோருடன் அவர் இறுதிவரைக்கும் தொடர்பில் இருந்தார். பாரதியார், தியாகராஜர், கவிமணி தேசியவினாயகம் பிள்ளை போன்றோர் எழுதிய சில பாடல்களை ஸ்வரப்படுத்தினார். அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தைப் பதிப்பித்தார். கம்பராமாயணத்தின் ஐந்து காண்டங்களையும் குறிப்புகளுடன் பதிப்பித்தார். மேடையில் நடிக்கத்தக்க அளவில் கவிச்சக்கரவர்த்தி, வஞ்சமகள் ஆகிய நாடகங்களை எழுதியிருக்கிறார். கார்க்கி நூல்களை தமிழில் மொழிபெயர்த்து நல்ல மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். டி.கே.சிதம்பரம் முதலியாரின் வழியில் சிறந்த ரசனைக்கட்டுரைகளையும் எழுதினார். 1942இல் எழுதத் தொடங்கிய அவர் 1970இல் மறைவது வரைக்கும் அவர் எழுதிக்கொண்டே இருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பாக அழகிரிசாமியின் நூற்றாண்டு விழாக்கொண்டாட்டம் தொடங்கியது. அதையொட்டி பல இடங்களில் கவனிப்பாரற்று சிதறிக் கிடந்த பல கட்டுரைகளை வேலாயுத முத்துக்குமார் தேடித் தொகுத்திருக்கிறார். அதை சிறுவாணி வாசகர் மையம் அழகிய வடிவில் நூலாக்கியிருக்கிறது. புத்தகத்தை ஒரே அமர்வில் படித்துமுடித்ததும் அழகிரிசாமி மீண்டும் வந்திருக்கிறார் என்று சொல்லத் தோன்றியது.

அழகிரிசாமி 05.06.1970 அன்று மறைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது நாற்பத்தைந்து. அவருடைய மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரைப்பற்றிய பல்வேறு நினைவுகளை கி.ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், தீப.நடராஜன், ஆ.மாதவன், தி.ஜ.ர., வித்வான் ல.சண்முகசுந்தரம் கி.ராஜேந்திரன், ஜெயகாந்தன் ஆகியோர் எழுதிய கட்டுரைகளைத் தேடியெடுத்திருக்கிறார் வேலாயுதமுத்துக்குமார். அக்கட்டுரைகளோடு கல்கி, நகுலன், பி.எஸ்.ராமையா போன்றோர் எழுதிய சில கட்டுரைகளையும் கி.ராஜநாராயணன், வித்துவான் ல.சண்முகசுந்தரம், ஆ.மாதவன் ஆகிய மூவருக்கும் அழகிரிசாமி எழுதிய கடிதங்களையும் கண்டுபிடித்து ஒரு சிறிய தொகைநூலாக உருவாக்கியுள்ளார். இக்கட்டுரைகள் வழியாக வாசகர்கள் அழகிரிசாமியைப்பற்றிய ஒரு தோராயமான சித்திரத்தை பெறமுடிகிறது. அதுவே இத்தொகுதியின் வெற்றி.

கி.ராஜநாராயணன் தன் கட்டுரையில் இளம்வயதில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டிருக்கிறார். கி.ரா.வும் செல்லையா என்கிற அழகிரிசாமியும் இளவயதுக் கூட்டாளிகள். அடுத்தடுத்த வீடுகளில் வசித்தவர்கள். தன் இளம்பருவத்திலேயே கனிவான பார்வையும் கருணையும் செல்லையாவின் நெஞ்சில் குடியேறியிருந்தன என்பதை அறிந்துகொள்ள அந்த நினைவுப்பதிவு உதவி செய்கிறது. அவர் வளர வளர அவருடைய கனிவும் வளர்ந்துகொண்டே சென்றதை அவருடைய வாழ்க்கை உணர்த்துகிறது.

கி.ரா. வீட்டில் ஒரு பெரிய நாய் இருந்தது. அந்த நாய் திடீரென புத்தி பேதலித்து வருவோர் போவோரையெல்லாம் கடிக்கத் தொடங்கிவிட்டது. புகார்கள் அதிகரித்ததும் கி.ரா.வின் தகப்பனார் அப்பிரச்சினைக்கு ஒரு முடிவுக்குக் கொண்டுவர ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அன்று மாலை அந்த நாய்க்கு வேலைக்காரர்கள் நல்ல விருந்துச்சாப்பாடு போட்டார்கள். அதுதான் தன் கடைசி விருந்து என அறியாமல் அந்த நாய் விருப்பத்தோடு சாப்பிட்டது. விருந்து முடிந்ததும், அந்த நாயின் கழுத்தில் ஓர் உறுதியான கயிற்றைக் கட்டி அழைத்து வந்தனர். பெரியவர் அதைத் தொட்டுக் கொடுத்ததும் அவர்கள் அந்த நாயோடு வீட்டைவிட்டு வெளியேறினார்கள். சிறுவர்கள் ஆர்வத்தின் காரணமாக அதைப் பின்தொடர்ந்து சென்றார்கள். கி.ரா.வும் அழகிரிசாமியும் பின்னாலேயே சென்றார்கள். ஆனால் கி.ரா.விடம் இருந்த உற்சாகம் அழகிரிசாமியிடம் இல்லை.

வழிநெடுக கிடைத்த கற்களையெல்லாம் சேகரித்து தம் பைகளில் நிரப்பிக்கொண்டே நடந்தார்கள் சிறுவர்கள். ஊருக்கு வெளியே நாயை அழைத்துச் சென்று ஒரு மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு அந்த நாயை அடித்துக் கொல்வதுதான் அவர்கள் திட்டம். அதைப் புரிந்துகொண்ட அழகிரிசாமி அவர்களிடமிருந்து விலகி வழியிலேயே ஓரிடத்தில் சோர்வோடு அமர்ந்துவிட்டார். உற்சாகமாக நாய்க்குப் பின்னால் சென்ற சிறுவர்கள் அந்த நாயைச் சூழ்ந்து கல்லாலேயே அடித்துக் கொன்றனர். நாய் செத்துவிட்டது என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு வந்த வழியே வீட்டுக்குத் திரும்பினார்கள். வழியில் சிலைபோல அமர்ந்திருந்த அழகிரிசாமியின் தோற்றம் உற்சாகத்தோடு ஓடி வந்த கி.ரா.வின் நெஞ்சைக் கரைத்துவிட்டது. அவர் நெஞ்சிலிருந்தும் அப்போது அழுகை பீறிட்டெழுந்தது. ஒருவருடைய கருணை பிறரையும் கருணையுள்ளவர்களாக மாற்றிவிட்டது.

ஆ.மாதவன் தன் கட்டுரையில் வயதில் சிறியவரானாலும் அடுத்தவர்களுக்கு உதவும் மனநிலை நிறைந்தவராகவும் இலக்கியத்தைப்பற்றி மட்டுமே எப்போதும் சிந்திப்பவராகவும் அழகிரிசாமி வாழ்ந்த விதத்தைக் குறிப்பிடுகிறார். ஒருமுறை தான் தயாரிக்கும் ஒரு மலருக்கு புதுமைப்பித்தனின் இறுதிக்காலம் பற்றி எஸ்.சிதம்பரம் என்பவர் எழுதி சக்தி இதழில் வெளியான பழைய கட்டுரையொன்று தேவைப்பட்டிருக்கிறது. தன் தேவையை உடனே அழகிரிசாமிக்குத் தெரியபடுத்துகிறார். உடனே அக்கட்டுரை வெளிவந்த சக்தி இதழைக் கண்டுபிடித்து அக்கட்டுரையை எழுதி பிரதியெடுத்து அவருக்கு அனுப்பிவைக்கிறார் அழகிரிசாமி. மேலும் மாதவனின் வேண்டுகோளுக்கு இணங்க பிறமொழிகளில் வெளிவந்த சில சின்னஞ்சிறு கதைகளை மொழிபெயர்த்துத் தொகுத்து அனுப்பிவைத்திருக்கிறார். அடுத்தவர்களுக்காக செய்யும் இத்தகு உதவிகளால் அவருக்குக் கிஞ்சித்தும் பயனில்லை என்றபோதும் நட்புக்காக மகிழ்ச்சியோடு அவ்வுதவியைச் செய்யும் மனம் கொண்டவராக அழகிரிசாமி வாழ்ந்தார் என்பதை மாதவனின் குறிப்புகள் உணர்த்துகின்றன.

லானா சானா என்று அனைவராலும் அழைக்கப்படும் வித்வான் ல.ச.சண்முகசுந்தரம் அழகிரிசாமியுடன் நெருங்கிப் பழகியவர். அழகிரிசாமியின் வாழ்க்கை பற்றிய ஒரு கோட்டுச்சித்திரத்தை அவர் பதிவு செய்திருக்கும் நினைவுகள் வழியாக உணரமுடிகிறது. பதினாறு, பதினேழு வயதிலேயே சிறுகதைகளும் விருத்தம், வெண்பா போன்ற மரபுப்பாடல்கள் எழுதவும் அழகிரிசாமி பயிற்சி பெற்றிருந்தார். தொடக்கத்தில் ஆரம்பப்பள்ளியில் சில மாதங்கள் ஆசிரியராகவும் பிறகு சப்ரிஜிஸ்தர் அலுவலகத்தில் எழுத்தராகவும் பணிபுரிந்தார். ஆனந்தபோதினி, பிரசண்டவிகடன் இதழ்களில் அவர் எழுதி வெளிவந்த சில சிறுகதைகள் அவருக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கியளித்தன. அதன் விளைவாக அதே பத்திரிகைக்கு அவர் உதவியாசிரியராக வந்து சேர்ந்தார். பிறகு அங்கிருந்து சக்தி இதழுக்குச் சென்றார். சில ஆண்டுகள் கழித்து தமிழ்நேசன் என்னும் பத்திரிகைக்கு ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மலேசியாவுக்குச் சென்றார். அங்குதான் அவருக்கு திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகளுக்குப் பின் சென்னைக்குத் திரும்பி வந்து காந்தி நூல் வெளியீட்டுக்கழகத்திலும் நவசக்தி இதழிலும் பணியாற்றினார். துன்பங்களும் வறுமையும் சூழ்ந்த வாழ்க்கையை வாழ்ந்த போதும் மன உறுதியுடன் எதிர்கொண்டு வாழ்ந்தார். கிஞ்சித்தும் மனம் சோர்வுறாது இலக்கியம் படைத்தார்.

அழகிரிசாமியின் அகாலமரணத்தை ஏற்றுக்கொள்ள மனம் தயங்கித் தவித்தபோது, அதற்கொரு பதில் சொல்வதுபோல நினைவுக்கு வந்த நாலடியார் பாடலொன்றை லானா சானா பதிவு செய்திருக்கும் விதம் பொருத்தமாக இருக்கிறது.

பல்லான்ற கேளிவிப் பயனுணர்வார் வீயவும்

கல்லாதார் வாழ்வும் அறிதிரேல் கல்லார்கண்

சேதனம் என்னுமச் சேறகத்தின்மையால்

கோதென்று கொள்ளாதாம் கூற்று

அன்பும் அறிவும் நிறைந்த சாரமுள்ள உயிர்களை ருசித்து அனுபவிக்கும் கூற்றுவன் அவை எதுவுமில்லாத சக்கைகளை ஒதுக்கிவிடுகிறான் என்னும் நாலடியாரின் சொல், அழகிரிசாமியைப் பொறுத்தவரை உண்மையாகிவிட்டது.

அழகிரிசாமி பத்திரிகைகளுக்காகவோ, புத்தகங்களுக்காகவோ, வருமானத்துக்காகவோ எழுத விரும்பியவரல்ல. தன் மனநிறைவுக்காகவும் இலக்கிய ரசனைக்காகவும் எழுதவே என்றென்றும் விரும்பினார். ஒருமுறை அவர் ஒரு பத்திரிகையில் ஒரு தொடர்கதையை எழுதினார். வழக்கமாக அத்தகு தொடர்கதைகளை எழுதுகிறவர்கள் தமக்கு வகுக்கப்பட்டிருக்கும் வாரக்கணக்குக்குள் அடங்கும்படி திட்டமிட்டு எழுதி முடித்துவிடுவார்கள். ஆனால் மன இயக்கத்துக்கு இசைவாக எழுதிச் செல்லும் பண்புடைய அழகிரிசாமிக்கு அது ஒத்து வரவில்லை. குறிப்பிட்ட கால எல்லைக்குள் அவரால் கதையை அடக்கமுடியவில்லை. மேலும் வளர்ந்து செல்வதை பத்திரிகை விரும்பாத ஒரு கட்டம் வரும்போது மனத்தில் மிச்சமிருக்கும் மொத்த கதையையும் ஒரு சுருக்கம்போல ஒரே அத்தியாயத்தில் எழுதி முடித்துவிடுகிறார். பிற்பாடு சுருக்கிவிட்ட அப்பகுதியை மனம்போல விரித்தெழுதி முழுமை செய்துகொள்ளலாம் என அவர் திட்டமிட்டிருந்தபோதும் கடைசி வரைக்கும் அந்தச் செப்பமிடும் வேலையை அவரால் செய்யமுடியாமலேயே போய்விட்டது. வெவ்வேறு அல்லல்கள் அவரை வெவ்வேறு திசைநோக்கி இழுத்த இழுப்பில் படைப்பூக்கத்தின் திசையில் அவரால் செல்ல இயலாமல் போய்விட்டது. கல்கி ராஜேந்திரனின் சொற்கள் வழியாக அழகிரிசாமியின் மனம் அடைந்த தவிப்பை உணர்ந்துகொள்ள முடிகிறது.

1952இல் வெளிவந்த அழகிரிசாமியின் முதல் சிறுகதைத்தொகுதிக்கு கல்கி முன்னுரை எழுதியிருக்கிறார். அம்முன்னுரையில் கதை எழுதுவதன் வெவ்வேறு கோணங்களைப்பற்றி விரித்துரைப்பதுபோலத் தொடங்கி அவர் அழகிரிசாமியின் கதையுலகத்தை வந்தடைந்திருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது. அழகிரிசாமியின் கதைகளை மதிப்பிட்டு அவருடைய இலக்கிய இடத்தை வரையறுக்கும் விதத்தில் நகுலன் எழுதியிருக்கும் கட்டுரை, க.நா.சு.வின் இலக்கியவட்டக் கருத்தரங்கில் எதற்காக எழுதுகிறேன் என்னும் தலைப்பில் ஆற்றிய தன் உரையை அழகிரிசாமியே எழுத்து வடிவத்துக்கு மாற்றி எழுத்து இதழில் வெளியிட்ட கட்டுரை என சில அரிய கட்டுரைகளையெல்லாம் வேலாயுத முத்துக்குமார் தேடியெடுத்து இத்தொகுதியுடன் சேர்த்திருக்கிறார்.

இத்தொகுதியில் பெரும்பான்மையாக அழகிரிசாமியின் மறைவையொட்டி எழுதப்பட்ட அஞ்சலிக்கட்டுரைகளே இடம்பெற்றுள்ளன. அஞ்சலிக்கட்டுரைகள் மட்டுமன்றி, அழகிரிசாமியின் படைப்புலகத்தை முன்வைத்து அவருடைய சமகாலத்திலும் அவருடைய மறைவுக்குப் பிறகான கடந்த அரைநூற்றாண்டுக்காலத்திலும் பல்வேறு கட்டுரைகள் வந்திருக்கக்கூடும். வேலாயுத முத்துக்குமார் அத்தகு கட்டுரைகளையும் தேடித் தொகுக்கவேண்டும். எதிர்காலத் தலைமுறையினருக்கு அது நிச்சயம் நல்லதொரு ஆவணமாக விளங்கும்.

(கு.அழகிரிசாமி – நிலைபெற்ற நினைவுகள். 

தொகுப்பாசிரியர் வேலாயுத முத்துக்குமார். 

சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம், 24-5, சக்தி மஹால், சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர், கோவை – 641038. விலை. ரூ.140)

9940985920/ 8778924880

-------------------------------------

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02iEZAhy3Ujtm9mEKqvFfzxYVFQccS2iGpu6LQTHBFLVyZteF6gmNyRHipM3GMho3dl&id=100006829357757&mibextid=Nif5oz

------------------------------------




Sunday, November 13, 2022

அடுத்தடுத்த மாதங்களுக்கான நூல்கள்.

 







சிறுவாணி வாசகர் மையத்தின் அடுத்தடுத்த மாதங்களுக்கான நூல்கள்.


நவம்பர்-2022

கு.அழகிரிசாமி-நிலை பெற்ற நினைவுகள்-

வேலாயுத முத்துக்குமார் (தொ.ர்)


டிசம்பர்-2022

கடவுளுக்கென ஒரு மூலை-

(மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)

அனுராதா கிருஷ்ணசாமி 


ஜனவரி-2023

உடுக்கை விரல்-

என்.ஸ்ரீராம் (சிறுகதைகள்)


9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்) இதுவரையிலான புத்தகங்கள்.2025-2026

  சிறுவாணி வாசகர் மையம் 9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்)  உறுப்பினர்களுக்கு இதுவரை அனுப்பியுள்ள புத்தகங்கள்.