Friday, July 7, 2023

நாஞ்சில்நாடன் விருது -2023 விருதாளர் திரு.அருட்செல்வப்பேரரசன்.




 கோவையிலிருந்து செயல்பட்டுவரும் சிறுவாணி வாசகர் மையம்,  எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் வழங்கும் விருது (2023) இந்த ஆண்டு சென்னையைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் திரு.அருட்செல்வப் பேரரசன் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.


வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி ஆர்த்ரா ஹால்(அண்ணா சிலை அருகில்)நடைபெறும் விருது விழா பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

**

விருது பற்றி சிறு அறிமுகம் ;


சிறுவாணி வாசகர் மையம்  எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் விருது வழங்கி வருகிறது .


கலை, இலக்கியம்  சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது பரிசுத் தொகை ரூபாய் 50,000/- ,கேடயம் மற்றும் சான்றிதழ் அடங்கியது .


முந்தைய ஆண்டுகளில் விருது பெற்றவர்கள்;

ஓவியர் ஜீவா (2018),


முனைவர் ப. சரவணன் ( 2019) ,

 பத்திரிகையாளர்,எழுத்தாளர் கா.சு.வேலாயுதன் (2020),

 

மணல்வீடு திரு.ஹரிகிருஷ்ணன்

(2021) 


சமூகச் செயற்பாட்டாளர் 'கௌசிகா' திரு. செல்வராஜ்(2022)


-------


கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ,சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது . 


இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு  அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் தலைவராக

தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளராக ஜி. ஆர். பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.

கௌரவ ஆலோசகர்களாக திரு.நாஞ்சில் நாடன், திரு.வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC)ஆகியோர் வழிநடத்துகின்றனர்.


 கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட  உறுப்பினர்கள் உள்ளனர். 

தொடர்புக்கு -

9940985920

8778924880

-------------------------------------------------------------

சிறுவாணி வாசகர் மையம் வழங்கும் நாஞ்சில்நாடன் விருது-2023 விருதாளர் 

திரு.அருட்செல்வப்பேரரசன்.


46 வயதாகும் இவர் சென்னை,திருவொற்றியூரில் வசித்து வருகிறார். கணினி வரைகலை அலுவலகம் நடத்தி வருகிறார்.  இந்தியாவின் மாபெரும் இதிகாசமான மஹாபாரதம் இதுவரை நல்லா பிள்ளை பாரதம், வில்லிப்புத்தூரார் பாரதம் மற்றும் ம.வீ.ராமானுஜாச்சாரியார், திருக்கள்ளம் நரசிம்ம ராகவாச்சாரியார், புரிசை கிருஷ்ணமாச்சாரியார் ஆகியோர் மொழிபெயர்த்துள்ளனர்.அவற்றைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் அதற்கான முழுமையான மொழிபெயர்ப்பைச் செய்துள்ளவர் அருட் செல்வப் பேரரசன். பல்கலைக்கழகங்களும் மாபெரும் வல்லுனர் குழுக்களும் இணைந்து செய்ய வேண்டிய ஒன்றை தனியே ஒருவராக செய்துள்ளார்.


அதுமட்டுமன்றி இவர் தனது மொழிபெயர்ப்பை ஒலிக்கோப்பாகவும், காணொளி கோப்பாகவும்  தன்னலமின்றி வெளியிட்டுள்ளார். அச்சு நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. 


கிசாரி மோகன் கங்குலி என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததை எடுத்துக்கொண்டு தமிழில் இவர் மொழிபெயர்க்கும் பணியைச் செய்துள்ளார். இந்த மொழிபெயர்ப்பை பொறுத்தவரை புத்தக வடிவில் உள்ள பதிப்புகளிலும் ஸ்லோக எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளது மட்டுமன்றி அனைத்தும்  ஒருவராலேயே மொழிபெயர்க்கப்பட்டது என்பது இது ஒரு சாதனை.


மகாபாரதத்தைத் தொடர்ந்து ஹரி வம்சத்தையும் நிறைவுசெய்து ராமாயணத்தையும் மறுஆக்கம் செய்துவருகிறார்.


 கடும்உழைப்பைச் செலுத்தி முழுமையான மூல மஹாபாரதத்தை மொழிபெயர்த்துள்ள அருட்செல்வப்பேரரசன் அவர்களுக்கு இந்த ஆண்டின் (2023)  நாஞ்சில்நாடன் விருது வழங்கப்படுகிறது.

--------------------------------------------------------------

முழுமஹாபாரதம், ஹரிவம்சம் ஆகியனவற்றையும், இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டம் 18ம் சர்க்கம் வரையும் முழுமையாக, பர்வ, காண்ட வாரியாக, அத்தியாய வாரியாக www.arasan.info என்ற வலைப்பூவில் படிக்கலாம். இவையனைத்தும் அனைவருக்கும் திறந்த நிலையிலேயே இருக்கிறது.


                               (Scan for Mahabharatham full translation)







ஆத்துக்குப் போகணும்-காவேரி-ஜூன்-2023



 ஜூன்-2023 வெளியீடு

ஆத்துக்குப் போகணும்-

காவேரி-

பக்கங்கள் 160   விலை 180/-


வீடு, பொதுவாக ஒரு வசிப்பிடம். ஆனால் பெண்ணுக்கு ? பெண்தான் வீட்டை அமைக்கிறாள். அது அவளுடைய சௌகரியங்களுக்கல்ல. ஆணுக்கும் குழந்தைகளுக்கும்தான் இடம்தருகிறது. ஏன்? வீட்டின் பௌதிக மதிப்பையும் பெண்தான் உயர்த்துகிறாள். ஆனால் அந்த மதிப்பில் மரபுரிமை கோர அவளுக்கு வழியில்லை. எதனால்? நாம் நமது உடலில் குடியிருப்பதுபோல வீட்டுக்குள் குடியிருக்கிறோம். எனினும் பெண்ணுக்கு அந்த இருப்பு எட்டாப் பொருள். எப்படி ?

காவேரியின் இந்நாவல் பெண்ணின் இடம் எதுவென்ற கேள்வியை மையமாகக்கொண்டு விரிவடைகிறது. வீடு என்ற அமைப்பில் பெண்ணுக்குள்ள வாய்ப்பையும் உரிமையையும் ஆராய்கிறது

குஜராத்திச் சிறுகதைகள்- டி.கே.ஜயராமன் -மே-2023



மே-2023 வெளியீடு

குஜராத்திச் சிறுகதைகள்-

டி.கே.ஜயராமன்


பக்கங்கள் 226   விலை 240/-

------------------------------------------------------

நன்றே செய்க !

“குஜராத்திச் சிறுகதைகள்” என்று தலைப்பிடப்பட்ட திரு.டி.கே.ஜயராமன் மொழிபெயர்த்துத் தொகுத்த இந்நூல் 1969-ம் ஆண்டில் முதற்பதிப்பு கண்டுள்ளது. அணிந்துரை வழங்கியவர் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிக் கலைஞர் தி.ஜ.ர. என்று வழங்கப் பெற்ற தி.ஜ.ரங்கநாதன். அரை நூற்றாண்டுக்குப் பிறகு மறுபதிப்பு வருகிறது. மறுபதிப்பை முன்னெடுத்துள்ள சிறுவாணி வாசகர் மையம் நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள். 

நல்ல புத்தகங்கள் விற்பதில்லை, பல்லாண்டுகளுக்குப் பிறகும் மறுபதிப்பு வருவதில்லை, சிபாரிசும் சன்மானமும் இல்லாமல் அரசு நூலகங்களும் வாங்குவதில்லை என்பதைத் தீப்பேறு என்பதா சாபக்கேடு என்பதா? என்றாலும் மேடைகளில் பல கட்சித் தலைவர்களும், சொற்பொழிவாளரும், பேராசிரியர்களும், மொழி வளர்ப்போம் என்று கூறித் தம்மை வளர்த்துக் கொள்கிறவர்களும், கேட்பவர் நெஞ்சம் வெடிபட தம் தொண்டை கிழிய முழங்குவார்கள் புத்தகம் பற்றியும் வாசிப்புக் குறித்தும். உரத்துப் பேசுகிறவரையும் நீண்ட நேரம் பேசுகிறவரையும் குறித்து மலையாளத்தில் மோசமான சொலவம் ஒன்றுண்டு. அதனுள் பிரவேசிக்க விருப்பமில்லை எனக்கு.

எனது வளரிளம் பருவத்தில் இந்நூலை வாசிக்க வாய்க்கவில்லை. நூற்றிருபது வீடுகள் கொண்ட  சின்னஞ் சிறு கிராமத்தின் ஊர் வகை ‘தமிழர் நூல் நிலையம்’. நெல் அறுவடை ஆகும் பூ   தோறும் ஊர் மக்களிடம் வீட்டுக்குக் குறுணி நெல் சந்தா பிரித்துச் சேர்த்த பணத்தில் எத்தனை நூல்கள் வாங்க இயலும்? தசரத இராமனின் வனவாசம் வானவரின் நற்பேறு ஆனது போல், ஆனது பம்பாய் வாசம், வாசிப்பின் பரப்பைப் பெருக்கிற்று.

1973- ம் ஆண்டு முதல், அரை நூற்றாண்டாகப் பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தின் ஆயுள் உறுப்பினர் நான். அங்கிருந்த நூலகத்தில்தான் இந்த நூலை முதலில் வாசித்தேன். அங்குதான் த.நா.குமாரசாமி, த.நா. சேனாதிபதி, கா.ஸ்ரீ.ஸ்ரீ, கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி, சரசுவதி ராமநாதன் போன்றோரின் மொழிபெயர்ப்பு  நூல்களை எல்லாம் தேடித் தேடி  வாசித்தேன். அந்த மொழிபெயர்ப்புகளின் தொடர்ச்சியே அண்மையில் சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்ட ‘கடவுளுக்கென ஒரு மூலை’ என்று தலைப்பிடப் பெற்ற மொழிபெயர்ப்புச் சிறுகதைகள். மொழிபெயர்ப்பாளர் அனுராதா கிருஷ்ணசாமி. 

மொழிபெயர்ப்பின் மூலம் வேறொரு மொழியின் இலக்கியப் போக்கை அம்மொழி பேசுபவரின் மரபை, பண்பாட்டை, சிந்தனையை, இயற்கைச் சூழலை, நிலவகையை நாம் அறிந்து கொள்ளலாம்.

நம் இலக்கியவாதிகள் எவரைப் பார்த்தாலும் அன்டன் செகாவ், தாஸ்தாவஸ்கி, தோன்ஸ் தாய், மாக்சிம் கார்க்கி, இவான் துர்கேனிவ், ஜேம்ஸ் காயல் என சிலம்பித் திரிவர். நமது அறிவுச் சமவெளியைப் பெருக்கிக்கூட்ட அண்மைக்கால பிரெஞ்சு, இத்தாலி, ஜெர்மன், யப்பான், ஆப்பிரிக்க எழுத்தாளர் சிலரின் பெயர்களையும் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால்  இந்தியப் பிறமொழி எழுத்தாளர்   குறித்து வாய் திறப்பதில்லை. இவர்கள் எவரும் மேதமை கொண்டவர் இல்லையா? அனைத்து மொழிகளின் இலக்கிய ஆளுமைகளும் நமக்கு உறவுதானே! இதிலும் தன்னாள் வேற்றாள் உண்டா?

‘குஜராத்திச் சிறுகதைகள்’ எனுமிந்த நூலுக்கு, தி.ஜ.ர.வைத் தொடர்ந்து அணிந்துரை வழங்குவதில் எனக்குக் கர்வம் உண்டு. பதினைந்து கதைகள் கொண்ட தொகுப்பு இது. நவீன இலக்கிய வாசகன், இதிலுள்ள மூல ஆசிரியரின் பெயர்களில் சிலரையாவது அறிந்திருக்கக்கூடும். அறியாமற் போனால் எவருக்கு இழப்பு?

பத்தொன்பது ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தாலும். மும்பை மாநகரின் கணிசமான மக்கட்தொகை குஜாத்தில் என்பதாலும், மும்பை சர்ச் கேட் ரயில் நிலையத்தில் இருந்து எழுபது கிலோ மீட்டரில் குஜராத் மாநில எல்லை வந்துவிடும் என்பதாலும், தொழில் நிமித்தமாக நவ்சாரி – சூரத் - வதோதரா - ஆமதாபாத்  - சுரேந்தரா  நகர் என அலைய நேர்ந்ததாலும் எனக்குக் குஜராத்தி மொழியும் கொஞ்சம் தெரியும், மராத்தி அளவுக்கு இல்லை என்றாலும்.

அந்த மூலபலம் கொண்டு மறுபடியும் இந்தக் கதைகளை நான் வாசித்தேன். அணிந்துரையில் தி.ஜ.ர. சொன்னதைத் தாண்டி என்னால் என்ன கதைத்துவிட இயலும் ? கே.எம். முன்ஷி , உமாசங்கர் ஜோஷி, பன்னாலால் படேல், சந்திரகாந்த் பக் ஷி போன்றவரின் படைப்புகளை மறுபடி வாசிப்பதே புது அனுபவம்.

இந்தத் தொகுப்பின் சிறப்பான கதைகளில் ஒன்று மதுராய் எழுதிய 'வைத்துக் கொள்ளுங்களேன்' என்பது. எழுதப் பெற்று முக்கால் நூற்றாண்டு ஆகி இருக்கலாம். குஜராத்தில் இருந்து புலம் பெயர்ந்து கல்கத்தாவுக்குப் பிழைக்கச் சென்றவனின் இடிபாடுகளும்  இடர்பாடுகளும்  பாடு பொருள். இன்று வசிக்கும் எவருக்கும் புது அனுபவம் தரும்.

சிவகுமார் ஜோஷி எழுதிய ‘கேயூரி’ என்ற கதை, மென்மையான உணர்வுகள் காலங்கடந்தும் தரும் வலியை உணர்த்துவது. ஆண், பெண் உறவென்பது, பருவ வயதினிலே ஆனாலும், கலவியில் நிறைவடைய வேண்டும் என்று கட்டாயமில்லை என்பதைச் சொல்வது. பன்னாலால் படேல் எழுதிய  'இன்பத்திலும் துனபத்திலும்’ என்ற சிறுகதை. குருடியான பெண்ணுக்கும் நொண்டியான ஆணுக்கும் இடையே மலரும் நேசம் குறித்தது. இருவருமே யாசகர்கள். குடியிருக்க வீடற்றவர்கள். இன்று வாசிக்கும் போது புதிதாக இருக்கிறது.

இந்திய – பாகிஸ்தானியப் பிரிவினையை ஒரு வரலாற்றுச் செய்தியாகவே அறிந்திருக்கிறார்கள் இளைய சமூகத்தினர். பிரிவினைகள் வலியை, வேதனையை, அவலத்தை எந்த மிகையும் ஆகுலமும் இன்றி உணர்த்தும் கதை, கிஷன் சிங் சாவ்லாவின் ‘அஸ்மத்’. வாசிப்போரின் கண்ணீர் கோரும் கதை. பிரிவினை நடக்காமலேயே கொல்லப்பட்ட ஒன்றரை இலட்சம் பேர், காணாமற் போன அரை லட்சம் பேர், தமிழ் மொழி பேசிய காரணத்தாலேயே வன்புணர்ந்து கொங்கைகள் அறுத்து வீசப்பட்ட ஆயிரக்கணக்கான பேர் என வரலாறு முழுக்க வலிகளே மிகுந்து காணப்படுகின்றன. அத்தகைய வழிகளில் ஒன்றுதான் ‘அஸ்மத்’ அனுபவித்ததும். 

டி.கே.ஜயராமன் எனும் மூத்த எழுத்தாளர், குஜராத்தி மொழியில் இருந்து தமிழுக்குப் பெயர்த்த பல கதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப் பெற்ற தொகுப்பு இது. இன்றும் சுவையான வாசிப்பு அனுபவம் தரும் மொழியாக்கம். பகட்டில்லாத மொழிநடை. குஜராத்திச் சொற்களுக்கு சற்றும் துல்லியக் குறைவு வராத தமிழ்ச் சொல் தேர்வு. மொழி, பிரதேசம், மதம், பண்பாடு என்ற எந்த வேறுபாடும்  அவலத்தையோ ஆனந்தத்தையோ நமக்குக் குறைவாக உணர்த்துவதில்லை என்பதை நிறுவும் மொழிபெயர்ப்பு.

யாவற்றுக்கும் மேலே, ஒரு சம்பவத்தை, காட்சியை, கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை, ஒரு மொழியில் இருந்து வேறு மொழிக்குப் பரிமாற்றம் செய்யும் போது, மொழிபெயர்க்கிறவருக்கு இயலாக ஏற்படும் பரிவும் புரிதலும் மொழிபெயர்ப்பை மேம்படுத்தும் என்பது என் துணிவு. திரு.டி.கே.ஜயராமன் அவர்களிடம் அவை இருப்பதை இந்தக் கதைகளின் மொழியாக்கம் அறியத் தரும்.

யாண்டுகள் எத்தனை சென்றாலும், புதுமை குன்றாத தீவிர வாசிப்பு அனுபவத்தை இந்தக் கதைகள் இன்றைய வாசகருக்குத் தரும் என்பது என் உறுதியான நம்பிக்கை.


நட்புடன்

நாஞ்சில் நாடன்

கோயம்புத்தூர் – 641 042

31  மே, 2023

------------------------------------------------------

"நம் இலக்கியவாதிகள் எவரைப் பார்த்தாலும் அன்டன் செகாவ், தாஸ்தாவஸ்கி, தோன்ஸ் தாய்,மாக்சிம் கார்கி, இவான்  துர்னிகாவ், ஜேம்ஸ காயல் என சிலம்பித் திரிவார். நமது அறிவுச் சமவெளியை பெருக்கிக்கூட்ட அண்மைக்கால பிரெஞ்சு,இத்தாலி, ஜெர்மன், யப்பான், ஆப்பிரிக்க எழுத்தாளர் சிலர் பெயரையும் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் இந்திய பிறமொழி எழுத்தாளர் குறித்து வாய் திறப்பதில்லை. இவர்கள் எவரும் மேதமை கொண்டவர் இல்லையா? அனைத்து மொழிகளின் இலக்கிய ஆளுமைகளும் நமக்கு உறவுதானே! இதிலும் தன்னாள் வேற்றாள் உண்டா?" நாஞ்சில் நாடன் அவர்களின் நன்றே செய்க என்ற தலைப்பில்  அணிந்துரையிலிருந்து


(எத்தனை நிதர்சனம்)


 1969ல்  வெளியாகி நீண்ட இடைவெளிக்கு அப்புறம் டி.கே. ஜெயராமன் அவர்களின் மொழி பெயர்ப்பில் மறுபதிப்பாகி வெளிவரும் ' குஜராத்திச் சிறுகதைகளுடன், ஒரு பறவையின் நினைவும், ஆத்துக்குப் போகணும் என்கிற புத்தகங்களில் இன்னும் சில வாரங்களில்  மூழ்கிவிடலாம்


சிறுவாணி வாசகர் மையம்

Madhusudhan sukumaran fb

------------------------------------------------------------------------------

 




இவ்வருடத்தின்(ஏப்ரல் 2023-மார்ச் 2024) முதல் மூன்று மாதங்களுக்கான புத்தகங்களோடு ஓவியர்.ஜீவா

ஏப்ரல்-ஒரு பறவையின் நினைவு-வைதீஸ்வரன்

மே-குஜராத்திச் சிறுகதைகள்-டி.கே.ஜயராமன்

ஜூன்-ஆத்துக்குப் போகணும்-காவேரி




இன்று 26.09.2023 மாலை சிறுவாணி வாசகர் மையத்தின் தலைவர் சுபாஷிணி மேடம் நடிகர் சிவக்குமார் வீட்டில் சென்று "அம்மா அம்மா,இன்னொரு கனவு,குஜராத்தி சிறுகதைகள்" ஆகிய புத்தகங்களைக் கொடுத்தார்.நடிகர் சிவக்குமார் சிறுவாணியின் உறுப்பினர்.

ஒரு பறவையின் நினைவு-எஸ்.வைதீஸ்வரன்-ஏப்ரல்-2023






ஏப்ரல்-2023
ஒரு பறவையின் நினைவு-எஸ்.வைதீஸ்வரன்

பக்கங்கள் 160   விலை  ரூ.180/-

----------------------------------------------

                            வாழ்த்துக்கள்

 கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் சிறுவாணிவாசகர் மையத்தைப் பற்றியும் நல்ல வாசிப்பைத் தூண்டுவதற்காக, வாசகர் வட்டத்தை மெல்ல மெல்ல விரிவு படுத்துவதற்காக அது ஏற்று நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றியும் அறிந்து வியந்துவருகிறேன்.

தற்கால பிரசுரங்களின் சூறாவளியில் திக்குத் தெரியாத காற்றிலென "புக்குத் தெரியாத புத்தகக் காட்சிகளில் " புதிய வாசகர்கள் குழப்பத்தில் தடுமாறுவதை நான் உணர்கிறேன். அத்தகைய இலக்கிய தாகமுள்ள இளம் வாசகர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக தேர்ந்த புத்தகங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினால் அது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கலாம் .

என் இளம்பருவத்தில் எனக்கு மிக நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தி என் இலக்கிய பார்வைக்கு திசைகாட்டியாக இருந்தவர் என் சகோதரர்.. அப்படிப் பட்ட சகோதர்களின் துணை எல்லோருக்கும் கிட்டுவதில்லை.

அத்தகைய நல்ல பணியை சிறுவாணி வாசகர் மையம் செய்து வருவதாகஅறிகிறேன். மிகுந்த தீர்க்கதரிசனமான முயற்சி. இந்த தோழமையுள்ள மையம் மேலும் மேலும் சிறப்பாக வளர வேண்டுமென வாழ்த்துக்கிறேன்.

உங்களுடைய இந்த இயக்கத்தில் ஒப்புவமையற்ற தனித்த பார்வையுள்ள நாஞ்சில்நாடன் போன்ற மூத்த எழுத்தாளர் இணைந்து ஆதரவுடன் செயல்படுவதை அறிந்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. உங்கள் அக்கறையுள்ள இந்த வாசகர் இயக்கம் மேலும் பரவலாக வளரட்டும். வாழ்த்துக்கள்…

 -வைதீஸ்வரன்

-----------------------------------------------------

இவ்வருடத்தின்(ஏப்ரல் 2023-மார்ச் 2024) முதல் மூன்று மாதங்களுக்கான புத்தகங்களோடு ஓவியர்.ஜீவா





ஏப்ரல்-ஒரு பறவையின் நினைவு-வைதீஸ்வரன்

மே-குஜராத்திச் சிறுகதைகள்-டி.கே.ஜயராமன்

ஜூன்-ஆத்துக்குப் போகணும்-காவேரி
----------------------------------------------------------------


 

Wednesday, March 1, 2023

ஆண்டுக் கட்டணம்(April 2023-March 2024)- புதுப்பித்தல் அறிவிப்பு




 


சிறுவாணி  வாசகர்  மையம் வணிகநோக்கின்றி முழுக்கச் சிறந்த படைப்புகளை வாசகர்களிடம் கொண்டுசெல்லும் வகையில் செயல்படுவது தாங்கள் அறிந்ததே.


வாசகர் வட்டம், இலக்கியச் சிந்தனை அமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு துவங்கிய சிறுவாணி வாசகர் மையம் தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரும் என உறுதியளிக்கிறோம்.


மார்ச்--2023 உடன் ஆறாம் வருடச் சந்தா முடிவடைகிறது.

(12 புத்தகங்கள்)


ஏப்ரல் 2023-மார்ச் 2024 (ஏழாம்) ஆண்டுக்கான 

கட்டணம் ரூ.1800 /-

பிற மாநிலங்களுக்கு ரூ 2200 /-

(தபால் செலவு உட்பட).


தங்கள் ( ஏப்ரல் 2023-மார்ச் 2024) சந்தாவைப் புதுப்பித்துத்  தொடர்ந்து ஆதரவு தருவதோடு , தங்கள் ஒவ்வொருவரும் உடன் இன்னொருவரையும்  சிறுவாணி வாசகர் மையத்தில் இணைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


தங்கள் அன்புக்கும், துணையிருப்புக்கும் மீண்டும் மனமார்ந்த 

நன்றி.


தி.சுபாஷிணி

ஜி.ஆர்.பிரகாஷ் 

9940985920 whatsapp 

8778924880 Gpay

சிறுவாணி வாசகர்  மையம்.

-------------------------------------------------

சிறுவாணி வாசகர் மையத்தின் "மாதம் ஒரு நூல்"திட்டத்தில் இணையவும்,புதுப்பிக்கவும்......


ஏப்ரல் 2023-மார்ச் 2024

தமிழகம் ரூ1800/-

பிற மாநிலங்கள் ரூ 2200/-


Payment option: 


1.Gpay/Paytm/Phonepe: 8778924880


2. UPI

siruvanivasagar-1@okhdfcbank


Please send  following details to us through whatsapp(9940985920)

1. Name

2. Full Address and Pincode

 3. Contact number

siruvanivasagar@gmail.com

https://siruvanivasagarmaiyam.blogspot.com/?m=1

----------------------------------------

ஒரு நிமிடம் ப்ளீஸ் !

தரமான தமிழ் இலக்கியப் புத்தகங்களை விரும்புபவர்கள் என்னவெல்லாமோ செய்யலாம். ஆனால் எளிதாக செய்ய முடிவது சிறுவாணி வாசகர் மைய உறுப்பினராக சந்தா கட்டிச் சேர்தல்தான். சிறுவாணி வெளியிட்டுள்ள புத்தகப் பட்டியல் இணைப்பில் உள்ளதைப் பார்த்தாலே தெரியும்.  எந்தப் புத்தகத்தை வெளியிட்டால் விற்பனை ஆகும் என்று இவர்கள் வெளியிடுவதில்லை. எந்தப் புத்தகத்தை வாசகர்கள் தவற விடக்கூடாது என்று நினைத்து செயல்படுகிறார்கள்.  எழுத்தாளர்களே வாசகர்களாகி மகிழும் சூழல் கொண்டது சிறுவாணி புத்தக வெளியீடு.  "மாதம் ஒரு நூல்" திட்டம்.


1. இது பொது விநியோகத்துக்காக அச்சிடப்படுபவை அல்ல. வாசகர் வட்ட உறுப்பினராக (சந்தா Rs.1800/- கூரியர் செலவு உட்பட) மாதம் 120 செலவுதான்... அல்ல... வாசக முதலீடு. வருடத்தில்  12 புத்தகங்கள் கிடைக்கின்றன.  தவற விடமுடியாத புத்தகங்கள்.

2. நல்ல புத்தகமாக  இருக்கும்போது அவற்றைப் பிற வெளியீட்டாளர்களிடமிருந்து வாங்கி அதை சந்தா தாரர்களுக்கு முன்பு தந்தார்கள் . (உதாரணமாக சாருவின் கட்டுரைத் தொகுப்பு, விலையே  ரூ.600.) 

3.  வாசகரை மனதில் கொண்டு செயல்படும் வாசகர் மையம் இது. இதன் பல நூல்கள் வெளியே கிடைக்காது. 

4. எளிதில் கிடைத்துவிட முடியாத தொகுப்புகளை இவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். உதாரணமாக - 

விட்டல் ராவின் போக்கிடம் நாவல் (அச்சிலேயே இல்லை). க.சுப்ரமணியனின் வேரும் விழுதும் (நம்மில் பலருக்கு இப்படி ஒரு நாவல் இருந்ததே தெரியாது)  

பாரதி பற்றிய சித்திர பாரதி (தகவல் களஞ்சியம். ஒரிஜினல் போட்டோக்கள்விலை ரூ 360/-); 

பாரதியை மொழிபெயர்ப்பாளராக காட்டும் தாகூர் மொழிபெயர்ப்பு;  ரா.கி.ர டைம்ஸ்; 

சூடாமணியின் அர்த்தங்கள் ஆயிரம்; 

 ஆ.மாதவனின் புனலும் மணலும்; 

வழக்கறிஞர் சுமதியின் நாவல் கல் மண்டபம் (இந்தப் பின்னணியில் இதுவரை இப்படி வேறொரு  நாவலே வந்ததாக தெரியவில்லை ). இவை நாம் சேகரிக்க வேண்டிய நூல்கள்.

5. எல்லாவற்றுக்கும் மேல் சிறுவாணி எழுத்தாளர்களுக்குத் தரும் கௌரவம்.  எழுதியதற்குப் பணம் கேட்டு நினைவூட்டு கடிதம் எழுதும் தற்போதைய தமிழ் இலக்கிய சூழலில், அப்படி ஒரு அசூசையான அவலத்தை ஒருபோதும் உண்டாக்குவதில்லை  சிறுவாணி. 

ஏதோ ஒரு பதிப்பகத்தை ஆதரிப்பது அல்ல இது.  அதனோடு சேர்ந்து பயணிப்பது.

இதை நாம் ஆதரிக்க வேண்டும் அல்லவா !  புதிய சந்தாதாரர்களை அறிமுகப் படுத்தவேண்டும்.   ஏனென்றால் சிறுவாணி வணிக நோக்க செயல்பாடு அல்ல.  வாசகர்கள் மட்டுமே அதன் பலம்.

(நண்பர்களை சிரமப்படுத்த கூடாது என்று தனியாக யாரையும் Tag செய்யவில்லை.  ஆகவே நீங்கள் விரும்பினால் உங்கள் பக்கத்தில் இதை Share செய்யுங்கள்.  பலரை அறிமுகம் செய்து உதவுங்கள் )

நன்றி !

Ramesh Kalyan sir பகிர்வு

---------------------------------------------------------


Tuesday, February 28, 2023

"தவிப்பூ" -மகேஷ்குமார் செல்வராஜ்(ம.செ)-மார்ச் -2023





மார்ச் -2023 

"தவிப்பூ" -

மகேஷ்குமார் செல்வராஜ்(ம.செ)

------------------------------------------------------------------

மகேஷ் குமார் செல்வராஜ், இந்த 'தவிப்பூ' சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழ்ப் புனைவுப் புலத்தில் புது நாற்றாகப் பதியமாகிறார். தமிழ் இலக்கியத் தட்டகத்தில் வளம் கூட்ட முனையும் பல புதிய இளம் படைப்பாளிகளுள் ம.செ.யும் அணி சேர்கிறார்.                                                              

 -நாஞ்சில்நாடன் 


**                                                                                                                                                               

நிம்மதியான காலங்களில் இந்தக் கதைகள் இவற்றை வாசிப்பவர் மனதுக்குக் குதூகலத்தைத் தரும்; பொய்மையாலும், பகைமையாலும் வருந்தி மனம் சோர்வுற்ற காலங்களிலும் இவை வாசிப்பவருக்கு அமைதியை, நம்பிக்கையைத் தரும். அவ்வாசகர் எங்கிருந்தாலும் அவ்விடத்தில் சற்று நேரத்துக்காவது சாந்தி நிலவும். 

-வ. ஸ்ரீநிவாசன்.




 

"ரசிகமணியின் நாத ஒலி"-தீப.நடராஜன்-பிப்ரவரி-2023

 


பிப்ரவரி-2023 

"ரசிகமணியின் நாத ஒலி"-

தீப.நடராஜன்






#ரசிகமணி டிகேசி விழா

—————————————


 (11-2-2023)  மாலை ரசிகமணி டி.கே.சி.யின் 141 ஆவது பிறந்தநாள் விழா சென்னையில் காந்தி கல்வி நிலையம்-

டக்கர்பாபா அரங்கில் நடந்தது. ரசிகமணியின் பேரன் தீப.நடராஜன் எழுதிய ‘ரசிகமணியின் நாத ஒலி ’ என்ற நூலை வெளியிட்டேன். நூல் வெளியீட்டு விழாவுக்கு திருப்பூர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஜஸ்டிஸ் எஸ்.மகராஜனின் புதல்வர் எம்.சிதம்பரம், டி.கே.சி.யின் கொள்ளுப் பேரன் இரா.தீத்தாரப்பன்,செல்லையா, டில்லி காந்தி அறநிலையத்துறையின் அண்ணாமலை,டிதிருமலை அவர்களின் புதல்வி சுபாஷினி, கிரா புதல்வர் திவாகர் மற்றும் டி.கே.சி குடும்பத்தார் உட்பட பலர் இந்த இலக்கியத் திருவிழாவில் பங்கேற்றனர். விழா இனிதே நடந்தது.

 தொற்று நோய் பாதிப்புக்கு பின்,இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லை வட்டார மக்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பும், சென்னையில் உள்ள திருநெல்வேலி வட்டார மக்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. இன்றைய மாலைப் பொழுது நல்ல நிகழ்வுகளுடன் இனிதாகக் கழிந்தது.


#KSR_Post

1-2-2023

------------------------------------------------------

"இராமாயணத்தில் 627 பாடல்களை இடைசெருகல் என்று போராடி நீக்கியவர் ரசிகமணி" என்று ரசிக மணி பேரன் தீப நாடராஜனின்’ நாத ஒலி’ புத்தகத்தை வெளியிட்டு ரசிகமணி பற்றிய பல அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.கே எஸ் இராதாகிருஷ்ணன். அவரின் சிறப்புரை இதோ.....

#ரசிகமணி 

https://youtu.be/1kwiKOA-fx4

#ksrvoice #ksr #TKC  

follow for more information

#KSR_Post

 (22-2-2023)தினமணியில் #ரசிகமணி டிகேசியின் அன்றைய குற்றாலம் குறித்த‘ குற்றால முனிவர் ரசிகமணி’ என்ற கட்டுரை வெளி வந்துள்ளது.

*---------------------------------------------

ரசிக மணியும் திருக்குற்றாலமும்!

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

 

“குற்றாலத்துக்கு வந்தவர்கள் எல்லாரும் மலை, செவ்வானம், மேகம், மலை ஓடைகள், குரங்குகள், கோவில் எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள். அந்த அனுபவங்களைத் தாளத்திலும், தமிழிலும் வைத்துப் பரிமாறும்போது மனம் இழுபட்டுக் கூத்தாடவே ஆரம்பித்துவிடுகிறது. பாடலை அனுபவிக்கிறது என்றால் அதுதானே?” என்கிறார் ரசிக மணி டி.கே.சி. நீதிபதி மகராஜனுக்கு 23.07.1945 - இல் எழுதிய கடிதத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்.  

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த டி.கே.சி.யின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஊர் குற்றாலம். குற்றாலம் பகுதியில் போல இயற்கையாக எழும் ஒலிகளையும் தமிழ் பாடல்களின் ராக, தாளங்களையும் இணைத்துக் காண்கிற இந்த அவருடைய ரசனை உணர்வே அவரை ரசிகமணியாக்கி இருக்கிறது. 

இதை, டி.கே.சி. எழுதிய கட்டுரையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். 

“கவி என்பது உணர்ச்சி உலகத்தில் ஊடாடுகிற காரியம். லகுவான முரையில் விஷயத்தை ஒரு தாளத்தில் வைத்து அது பேசும். அப்படிப் பேசும்போது எதிர்பாராத முறையில்  அரிய உணர்ச்சி ஒன்று பிறந்துவிடும். அதிசயமாய் இருக்கும்.

கவியிலும் அதாவது உண்மை ததும்பும் உருவத்தோடு கூடிய கவியிலும் ஈடுபட்டுவிட்டால், வார்த்தை, தாளம், தமிழ்ப் பண்பு இவைகளில் அப்படியே கரைந்துவிடுகிறோம் நாம். பாஷைக்கு ஒரு மந்திர சக்தி இருக்கிறதாகவே தெரிய வருகிறது. கவியிலுள்ள உணர்ச்சி வசமாய்ப் போய், வார்த்தை, தாளம், செய்யுள்கோப்பு இவைகளால் ஆகிய உருவமாகவே மாறி விடுகிறோம். கவிக்கு விஷயம் அல்ல, உருவமே பிரதானம் ” என சொல்கிறார். 

வழக்கறிஞரான டி.கே.சி. நெல்லைவண்ணார்பேட்டையில் வாழும்போது, வட்டத் தொட்டி என்ற பெயரில் இலக்கியக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார். ஜஸ்டிஸ் மகராஜன், வையாபுரி பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, சோமசுந்தர பாரதியார், மீ.ப.சோமு, ல.சண்முகசுந்தரம், பாஸ்கரதொண்டைமான், அ.சீனிவாச ராகவன், பெ.நா.அப்புஸ்வாமி, கே.பி.கணபதி, டி.டி.திருமலை, நீலாவதி சுப்பிரமணியம், மு.அருணாசலம், ஜி.சி.பட்டாபிராம் மற்றும் பல இலக்கியவாதிகள், ஆர்வலர்கள் கலந்து கொண்ட கூட்டம் அது. தமிழ்க் கவிதைகளில் புதைந்து கிடந்த ஆழமான கருத்துகளை எல்லாம் தனது சுவையான பேச்சுகளின் மூலம் வெளிக்கொண்டுவந்து அவற்றின் சுவையை ஏராளமானோரை அனுபவிக்கச் செய்திருக்கிறார்.

ரசிகமணி நெல்லையில் இருந்தபோதும் சரி,திருக்குற்றாலத்தில் இருந்தபோதும் சரி அவர் வீட்டில் கூடும் தமிழ் அன்பர்களிடம் கம்பனின் கவியாற்றலையும் கம்பரின் பெருமைகளையும் டி.கே.சி விவரிக்கும்போது எல்லாரும் மெய்மறந்து கேட்பார்கள். 

வாரம் ஒருமுறை ஒவ்வொருவரும் நேர்முகமாகப் பார்க்கும் விதத்தில் வட்ட வடிவமான முறையில் அமர்ந்து நடத்தப்பட்ட இந்த வட்டத்தொட்டி இலக்கிய முற்றம் ‘டி.கே.சி. வட்டத்தொட்டி’ எனப் பிரபலமடைந்தது. இந்த வட்டத் தொட்டி நிகழ்ச்சிக்கு மட்டுமல்லாமல்,எழுத்தாளர் லா.ச.ரா. திருநெல்வேலி வண்ணார்பேட்டைடி.கே.சி. வீட்டுக்கு அடிக்கடி வருவது வழக்கமாகஇருந்திருக்கிறது. லா.ச.ரா தென்காசியில் 3 ஆண்டுகள் வங்கி மேலாளராக பணிபுரிந்த காலம் அது.

டி.கே.சி 1926- இல் சென்னை மாகாண சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து இந்து அறநிலையத்துறை ஆணையராகவும் பொறுப்பேற்றார்.

நெல்லையில் டி.கே.சி. இருந்தபோதே ராஜாஜி, கல்கிகுடும்பத்தினர் அவருக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்திருக்கின்றனர். நெல்லை வீட்டுக்கு அவர்கள்குடும்பத்தோடு வந்து தங்கி டி.கே.சி.யுடன் குடும்ப நண்பர்களாகப் பழகியிருக்கின்றனர். கல்கி, சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி என கல்கி குடும்பத்தினரும் அடிக்கடி இங்கே வருவதுண்டு.

ராஜாஜியும் கல்கியும் எப்போதும் டி.கே.சி.யுடன் நல்ல நண்பர்களாகவே இருந்திருக்கிறார்கள். ராஜாஜி, கல்கி, டி.கே.சி. மூவரும் பழகத் தொடங்கிய காலத்தில் ராஜாஜியும் கல்கியும் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். நீதிக் கட்சியில் சிறிது காலம் தொடர்பு வைத்திருந்தார் டி.கே.சி. ஆனால் அவர்களுடைய நட்பை அவர்கள் சார்ந்திருந்த கட்சி எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அவர்களுடைய நட்பு இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒருவரையொருவர் உண்மையாகப் புரிந்து கொண்ட, தூய அன்பை அடித்தளமாகக் கொண்டது.

டி.கே.சி. நெல்லையில் இருக்கும்போதே குற்றாலத்துக்கு அடிக்கடி வந்துவிடுவார் வருவதற்கு முன்பு ராஜாஜியையும், கல்கியையும் குற்றாலத்துக்கு வரச் சொல்லி கடிதம் எழுதிவிடுவார். குற்றாலத்தில் டி.கே.சி. தங்குவது கோவிலுக்கு அருகே உள்ள 1 ஆம் எண் பங்களாவில்தான். டி.கே.சி. ஐந்தாண்டுகள் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக பணியாற்றியவர் என்பதால் அங்கே தங்குவதற்கு அவரிடம் வாடகை கேட்க மாட்டார்கள்.

அதற்குப் பிறகு நிரந்தரமாகவே குற்றாலத்துக்கே குடிவந்துவிட்டார். குற்றாலம் தேவஸ்தானத்தினரிடத்தில் இருந்து 1942 -ஆம் ஆண்டு குற்றாலம் ஐந்தருவிச் சாலையில் அருகருகே உள்ள எட்டறை என்ற வரிசை வீடுகளில் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டார். ஒரு வீட்டில் குடும்பத்தார் தங்கினார்கள். அந்த வீட்டில் சமையல், சாப்பாடு, விருந்தினர்களை உபசரிப்பது எல்லாம் நடக்கும். இன்னொரு வீட்டில் டி.கே.சி. தங்கியிருந்தார்.  படிப்பது, எழுதுவது, நண்பர்களுடன் உரையாடுவது எல்லாம் அங்கேதான். தமிழ்க் கவிதைகளைப் பாடுவது, அவற்றுக்கு விளக்கம் கூறுவதும் இங்கேதான்.  

டி.கே.சி. வீட்டில் தினமும் 20 பேர் , 25 பேர் பந்தியில் அமர்ந்து சாப்பிடுவார்கள். அவர்களுடைய  ஒரே மகன் செல்லையா என்கிற  தீத்தாரப்பன் 32 வயதில் மறைந்தார். அந்த மறைவை டி.கே.சி.யாலும் அவருடைய துணைவியாராலும் தாங்கிக் கொள்ள முடியாதநிலையில் பல விருந்தினர்கள் வீட்டுக்கு வருவதும், வந்த விருந்தினர்களை நன்கு உபசரிப்பதும் அந்த கவலையில் இருந்து அவர்கள் மீள உதவியிருக்கிறது.

டி.கே.சி. தரையில் சம்மணம் போட்டு அமர்ந்துஇலையில் சாப்பிடுவது வாடிக்கை. பின் தரையில் அமர்ந்து எழ இயலாத காலத்தில் நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிடுவார். ரசிகமணி கையில் உணவை எடுத்துச் சாப்பிடுவதே தனி அழகாக இருக்கும். பருப்பு,நெய் எப்படி குழைய வேண்டும்? சாம்பாருடன் எப்படி சாதத்தைப் பிசைந்து சாப்பிட வேண்டும்? ரசத்தைச் சாப்பிட்ட பின் ரசநீர் பருக்கையோடு  கைவிரல்களால் எப்படி சுவையாக உறிஞ்சிச் சாப்பிடுவது? பாயசத்தில் பொரித்த அப்பளத்தை, காராபூந்தியையோ விட்டுச் சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் சொல்வார். கட்டித் தயிராக விரும்பிச் சாப்பிட்ட ரசிகமணி.பிற்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்பட்டதால், தயிரைத் தவிர்த்து மோரைச் சாப்பிட்டார். ஊறுகாயை ஆள்காட்டி விரலின் ஓர் ஓரமாகச் சற்று எடுத்து நாக்கில் வைப்பார்.சிறு கரண்டியில் எடுத்து வாயில் வைப்பதைப் போல துவையலை இரண்டு விரல்களில் எடுத்து வாயில் வைக்க வேண்டும் என்று சொல்வார். சாப்பிடுவதை ஒரு கலை என்று சொல்வார். 

இன்றைக்கு இட்லி, தோசைக்கென்று தனி அரிசி வாங்குகின்றோம். அப்போது இட்லி தோசைக்குஎல்லாம் ஒரே அரிசிதான். ரசிகமணி வீட்டில் அப்போதேசோறு பொங்க தனி அரிசிதான். இட்லி, தோசை, வடை போன்ற சிற்றுண்டிகளுக்கு சரியான அளவில் அரிசியும் உளுந்தும் போட வேண்டும் என்று அவரே சொல்வார். மோர் மிளகாயும், ஊறுகாயும் இத்தனை நாள் சூரிய வெப்பத்தில் வைக்க வேண்டும் என்பதையெல்லாம் அவரே சொல்வதுண்டு. ரசிகமணி வீட்டுத் தோசை அன்றைக்கு எல்லாராலும் சிலாகிக்கப்பட்டது. 

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் டிகேசி இருந்த வீடு மாளிகை போன்றிருக்கும். ஆனால் குற்றாலத்தில் இருந்த வீடு அந்த அளவுக்குப் பெரியதில்லை. 

டி.கே.சி. குற்றால வீடுகளுக்கு குடியிருக்க வரும்போது வீட்டில் மின் இணைப்பு இல்லை. அரிக்கேன் விளக்குதான். இரண்டு மாடுகள் பூட்டிய வில்வண்டியில்தான் பயணம் செய்ய வேண்டும். வில்வண்டிகள் தவிர, சைக்கிள்தான் அப்போது போக்குவரத்துச் சாதனமாக அங்கிருந்தது. இன்று உள்ளதைப் போல அன்றைக்கு தொலைபேசி வசதி எல்லாம் கிடையாது. ராஜாஜி, கல்கி ஆகியோரிடம் இருந்து வரும் தகவல்கள், செய்திகள் எல்லாம்கடிதங்கள், தந்தி மூலமாகத்தான் வரும். குற்றாலத்தில் சாரல் தொடங்கி, அருவிகள் பெரிய அளவில் வழியத் தொடங்கும்போதுதான் குற்றாலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். அது வரை ஒரு கிராமத்தைப் போல, குறைவாக மக்கள் நடமாட்டம் இருக்கும்.  

அப்போது குற்றாலத்தில் உணவகங்கள் கூட மிகவும் குறைவாகவே இருந்தன. கடைத் தெருவில் இருந்த போத்தி ஹோட்டல், மண்டபம் ஹோட்டல், பாம்பகோயில் பிள்ளை உணவகம், அய்யங்கார் உணவகம் என்று ஒருசில உணவகங்களே இருந்தன. 

குற்றாலநாதர் திருக்கோயிலின் வடக்கு வாசலில் இருந்து அருவிக்குப் போகும் வழியில் வலது பக்கம் மலையின் அடியில் கசிந்து வரும் நீரை தொட்டியில் நிரப்பி, கோயிலின் மடப்பள்ளிக்கு பயன்படுமாறு ஒரு குழாயும், கோயிலுக்கு வெளியே மக்களுக்குப் பயன்படுமாறு இன்னொரு குழாயும் அமைக்கப்பட்டிருக்கும். வடக்கு வாசல் பக்கத்தில் வரும் தண்ணீரை தென்காசி பகுதியில் வாழ்பவர்கள் எல்லாம் பிடித்துக் கொண்டு சென்று பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. அதற்குக் காரணம், தென்காசியில் அப்போது தண்ணீர் சற்று சவராக இருக்கும். 

இந்த நீர் விழும் பகுதிக்கு அருகில் இருந்த சிறு வீடுஒன்றில் ஸ்ரீமத் மௌன ஸ்வாமிகள் தங்கியிருந்தார். நாட்கள் செல்ல பக்தர்கள் வருகை அங்கேஅதிகரித்ததால், செங்கோட்டை சாலையில் ஸ்ரீமத்மௌன ஸ்வாமிகள் மடம் அமைக்கப்பட்டது.  

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ், என்னகாரணத்தாலோ ராஜீவ்காந்தியால் இந்திரா படுகொலைக்குப் பிறகு புறக்கணிக்கப்பட்டார். இதனால் மிகவும் மனவேதனை அடைந்த நரசிம்மராவ்,தன்னுடைய சொந்த ஊரான ஹைதராபாத்துக்குசென்றுவிடுவோம்; இனிமேல் அரசியல் வேண்டாம் என்றுமுடிவெடுத்துவிட்டார். அதன் பின் குற்றாலத்தில் உள்ள தற்போது இருக்கும் ஸ்ரீமத் மௌன ஸ்வாமிகள்மடத்திலேயே இறுதிக் காலம் வரை தங்கிவிடலாம் என்று தீர்மானித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாகஅவருக்குப் பிரதமராகும் வாய்ப்பு 1991- இல் கிட்டியது. 

 

டி.கே.சி. வீட்டுக்கும் ஐந்தருவிச் சாலைக்கும் நடுவே வாய்க்கால் ஓடும். தெளிந்த நீர் அதில் பளிங்குபோல் எப்போதும் ஓடிக் கொண்டு இருக்கும்.டி.கே.சி.குடியிருந்த எட்டறை வரிசை வீடுகளுக்குஎதிரில் சிற்றருவிகளுக்குப் போகும் பாதை மலைமேல்ஏறத் தொடங்கும். எப்போதும் வண்டுகளின் ரீங்காரம், காட்டுமல்லியின் நறுமணம், பேரருவியின் ஓசை என மனதுக்கு மகிழ்ச்சி தரும் சூழல் நிலவியதால், அனைத்து வசதிகளும் இருந்த நெல்லை வண்ணார்பேட்டையை விட்டுவிட்டு டி.கே.சி. குற்றாலத்துக்கு குடிபெயர்ந்திருக்கிறார்.

குற்றாலத்துக்கு டி.கே.சி.குடியேறிய பிறகும், ராஜாஜி, கல்கி குடும்பத்துடன் குற்றாலத்துக்கு வருவார்கள். பிச்சம்மாள் அண்ணிக்கு அதாவது டிகேசியின் மனைவிக்கு விருந்தினர்களை உபசரிப்பதுதான் வேலை. அண்ணி என்பது பெண்களைக் குறிக்கும் சொல்லாக அன்றைக்கு இருந்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு பாட்டியை குழந்தைகள் அண்ணி என்றே கூப்பிடுவார்கள். ராஜாஜி, கல்கி, எம்.சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி எல்லாரும் அண்ணி என்றே பிச்சம்மாளை அழைப்பார்கள். 

குற்றாலத்தில் மலைமேல் திறந்தவெளி இருந்தது. அதில் டி.கே.சி.யும் அவருடைய நடைப்பயிற்சி செய்தும் அமர்ந்தும் தமிழ் இலக்கியத்தைக் குறித்து எப்போதும்போல மாலை நேரங்களில் பேசுவது உண்டு. 

ராஜாஜி கேட்டுக் கொண்டதற்கிணங்க 1953 இல் சென்னை ஆளுநர் ஸ்ரீபிரகாசா குற்றாலத்துக்குவந்திருக்கிறார். ஆங்கிலத்தில் விளக்கமளித்து பின்னர் தமிழ் கவிதைகளை டி.கே.சி. பிரகாசாவுக்கு பாடிக் காட்டினார். இதுபோன்று இதற்கு முன்பு காந்தி,வினோபா பாவே அவர்களுக்கும் டி.கே.சி. இதுபோன்று பாடிக் காட்டியிருக்கிறார். அதற்குப் பின்பு ஒருமுறை ஆளுநர் பிரகாசா வந்தபோது, டிகேசி காலமாகிவிட்டார். ஆளுநர் பிரகாசா டிகேசி இல்லம் சென்று ரசிகமணியின் மறைவைக் குறித்து விசாரித்ததும் உண்டு. அன்றைய தமிழக சட்டப்பேரவைத் தலைவர் சிவசண்முகம் பிள்ளையும் குற்றாலம் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

அறிஞர் அண்ணா 1947 இல் கம்பராமாயணம் குறித்து ‘கம்பரசம் ’ என்ற நூலை எழுதினார். கம்பராமாயணத்தில் காணப்படும் காமம் தொடர்பான பாடல்களை அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார். 

அதற்கு முன்பிருந்தே  கம்பனின் கவியுள்ளத்தை வெளிப்படுத்தும் பணியில் டி.கே.சி. ஈடுபட்டிருந்தார். ‘கம்பர் தரும் காட்சி’ என்னும் தலைப்பில் கல்கி இதழின் ஆரம்ப இதழில் 1941 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கம்பராமாயணத்தை விளக்கப்படுத்தி எழுதி வந்தார் டி.கே.சி. சுமார் பத்து ஆண்டுகள் ஒவ்வொரு இதழிலும் அந்த கட்டுரைகள் இடம் பெற்றன. அதன் மூலம் சாதாரண படிப்புள்ள வாசகரையும் கம்பர் கவியை அனுபவிக்கச் செய்ய முடிந்ததே என்ற எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டார் டி.கே.சி.

கம்பராமாயணத்தில் ஆழமாக மூழ்கிய இவர், அந்தக் காவியத்தில் சேர்க்கப்பட்டிருந்த 627 இடைச்செருகல்களை அடையாளம் கண்டார். அவற்றை எல்லாம் டி.கே.சி. நீக்கினார்.  கம்பர் கவிதைகளில் சிலவற்றை திருத்தம் செய்து அவற்றை அர்த்தம் பாவம் பொலிந்த கவிதைகளாகப் பதிப்பித்தார். இதற்கு நிறைய எதிர்ப்புக் கிளம்பியது. அது 1953 ஆம் ஆண்டு ‘கம்பர் தரும் ராமாயணம்’ என்ற நூலாக வெளிவந்தது.‘கம்பர் தரும் ராமாயணம்’ நூலின் முதல் தொகுதிவெளியீட்டு விழா குற்றாலத்தில் நடந்தது. அதில் ராஜாஜிபங்கேற்றார். 

இதன் முதல் தொகுதி திருநெல்வேலி டவுனில் உள்ள அச்சகத்தில் அச்சிடப்பட்டது. அதன் முதல் தொகுதியின் பிரதி டி.கே.சி.யால் கையெழுத்திடப்பட்டுபிரதி கிராவுக்கு அனுப்பப்பட்டது. அதை கிரா என்னிடம் கொடுத்தார். கடந்த வருடம் திரும்பவும் டி.கே.சி.யின் ராமாயணத்தை அல்லயன்ஸ் பதிப்பகம் மூன்று தொகுதிகளையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு தொகுப்பாக வெளியிட்டது. அதற்கு ரசிகமணியின் பேரன் தீப.நடராஜன், கி.ரா., மாலன், அடியேனும் வாழ்த்துரை வழங்கினோம். வெளியிடப்பட்ட அந்தப் புத்தகத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று தீப.நடராஜன் விரும்பினார். அவர் மறைந்த இரண்டு நாள்களுக்குப்பிறகுதான் அச்சடிக்கப்பட்டு, பைண்டிங் செய்யப்பட்டு நூல் கைக்கு வந்தது. நூலைப் பார்க்காமலேயே கிராவும் மறைந்துவிட்டார். இந்த இருவரும் இந்த மூன்று தொகுதிகளையும் ஒருங்கிணைந்தமுறையில் பார்க்க விரும்பினார்கள். இதற்காகப் பொறுப்பெடுத்து பணியாற்றிய என்னால் உரிய நேரத்தில் நூலை அவர்களுக்கு வழங்க முடியவில்லையே என்பதுஎன்னுடைய வாழ்க்கையில் தீராத கவலையாக உள்ளது.

ரசிகமணி டி.கே.சி. என்று மனத்துள் எண்ணும் போதே கவிதை நினைவுக்கு வரும். அதே போல் அடுத்து நினைவுக்கு வருவது இசையாகும். கவிதையை எப்படி அனுபவித்தாரோ அதுபோன்றே இசையையும் அனுபவித்தவர் டி.கே.சி. 

 இசை அறிவும் ஈடுபாடும் டி.கே.சி.க்கு அதிகம். தமிழ்க் கவிதைகளை எல்லாம் தனக்கேயுரிய பாணியில் இசையோடு பாடித்தான் பிறருக்கு வழங்கி வந்தார்.

சென்னையில் டி.கே.சி. இருந்தபோது வீணை தனம்மாளை அடிக்கடி சந்தித்து தனது இசையறிவை வளர்த்துக் கொண்டார். டி.கே.சி. வீட்டில் வீணை தனம்மாளின் படம் இருந்தது.

 சென்னை மாநகராட்சி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஜே.ராமானுஜாச்சாரி ஓராண்டு விடுமுறை எடுத்துக் கொண்டு குற்றாலத்துக்கு வந்தார். டி.கே.சி.வீட்டில் தங்கி டி.கே.சி.பேரப்பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தார். இதெல்லாம் கல்கியின் ஏற்பாடு. இதற்குக் காரணம்,கல்கிக்கும் இந்த கருத்து உண்டு. குழந்தைகள் புத்தகமூட்டையைச் சுமந்து செல்வது, வேண்டாத பாடங்களை அவர்கள் மூளைக்குள் திணிப்பது, ஆசிரியர்கள் கடுமையுடன் பிள்ளைகளிடம் நடந்து கொள்வது ஆகியவற்றிற்கு எதிரான கருத்துகளை பெற்றோன் என்ற புனைபெயரில் கல்கியில்  தொடர்ந்து எழுதியிருக்கிறார். 

கல்கி குடும்பத்தினர் குற்றாலம் வந்தால் டி.கே.சி. வீட்டில்தான் தங்குவார்கள். சென்னைக்கு டி.கே.சி. குடும்பத்தினர்  சென்றால் கல்கி வீட்டில்தான் தங்குவார்கள். 1937 முதல் குற்றாலம் செல்வதை கல்கி வழக்கமாக வைத்திருந்தார்.  ஆஸ்த்மா நோயாளியான கல்கிக்கு குற்றாலம் குளியலால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.  சிவகாமியின் சபதத்தில் குற்றாலம் தொடர்பான காட்சிகள் பல இடம் பெற்று இருக்கின்றன. புரச மரங்கள் பூத்துக் குலுங்குவதை எழுதியிருக்கிறார். 

கல்கியில் நன்கொடை வசூலித்து எட்டையபுரத்தில் பாரதி மணிமண்டபம் கட்டியதும், திறப்பு விழா நடத்தியதும் கல்கிதான். ‘பாரதி ஸ்பெஷல்’ என்ற ரயில் கோவில்பட்டிக்கு விடப்பட்டது. இந்த பாரதி மண்டபம் கட்டும் பணிகளுக்கான அலுவலமாக டிகேசியின் குற்றால வீடு இரவும் பகலுமாக காட்சி தந்தது. 

ரசிகமணி டி.கே.சி. 1954-ஆம் ஆண்டு 73-ஆம் வயதில் மறைந்தார்.

‘கம்பனைப் போன்று ஒரு ரசிகன் கிடைப்பதற்கு வள்ளுவர் 700 ஆண்டுகள் காத்திருந்தார். டி.கே.சி.யைப் போன்ற ஒரு ரசிகன் கிடைப்பதற்கு கம்பன் 1000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது’ என டி.கே.சி.க்கு புகழ்மாலை சூட்டியுள்ள ஜஸ்டிஸ்மகராஜன், “நவீன குற்றாலத்தில் ஐந்தருவி செல்லும் சாலையில்தான் டி.கே.சி வாழ்ந்த வீடும் அவரது நினைவாய் அமைந்துள்ள நூலகமும் உள்ளது என்கிற விஷயமே அங்கிருக்கும் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. தன் உற்ற நண்பர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்த சமயத்தில் கூட தனக்கென எதையும் பெற்றுக் கொள்ள முனையாது குற்றால முனிவராகவே வாழ்ந்த டி.கே.சி தனது இறுதிகாலத்தில் வசித்த இரண்டு வீடுகளும் இன்று சுற்றுலாப் பயணிகள் வாடகைக்குத் தங்கும் விடுதிகளாக இருப்பதைப் பார்க்க சங்கடமாயிருந்தது. அவரது நினைவாக உள்ள நூலகத்தின் ‘பெயர் பலகை’கூட நிறம் மங்கி நிற்பது டி.கே.சிக்கு பெருமை தருவதாயில்லை.

இதற்கு மாறாக பழைய குற்றாலத்துக்கு செல்லும் பாதையில் அமைந்திருக்கும் அவரது நினைவிடம் நம் மனச்சோர்வை அமைதிப்படுத்துவதாய் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் திரிகூட மலையின் நீலச் சிகரங்களின் நிழலில் பசுமை கொஞ்சும் வயல்வெளிகளின் புறத்தில் எளிமையாக அமைந்துள்ளது அவரது சமாதி ” என்கிறார்.

பொருநை ஆற்று ஞானியாகவும், திருநெல்வேலி கன்னல் தமிழின் காவலராகவும் வாழ்ந்தவர் டி.கே.சி. கம்பனின் கவியுள்ளத்துக்கும், தமிழுக்கும், கடிதஇலக்கியத்துக்கும், தமிழிசைக்கும் உழைத்த.டி.கே.சி.க்கு உரிய மரியாதையை செலுத்த வேண்டியதுநமது கடமையாகும்.

 

கட்டுரையாளர்: அரசியலாளர்

ஆசிரியர், கதைசொல்லி


#கேஎஸ்ஆர்போஸ்ட்

#KSR_Post

22-2-2023.


9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்) இதுவரையிலான புத்தகங்கள்.2025-2026

  சிறுவாணி வாசகர் மையம் 9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்)  உறுப்பினர்களுக்கு இதுவரை அனுப்பியுள்ள புத்தகங்கள்.