சிறு வாணி வாசகர் மையத்திற்கு பாராட்டுக்கள்.
ஒருகாட்சியில் இரண்டுபடங்கள் இரண்டுமே சாந்திநிலையம் நினைத்தாலே இனிக்கும் போல... இன்னிசை மழையாக...அமைந்துவிட்டால்.....
..
அமைந்து விட்டால் என்ன அமைந்துவிட்டால்....
அமைந்துவிட்டதே!
சிறுவாணி மாதாமாதம் உச்சத்தை அடைந்துகொண்டிருந்தால்... அடுத்தவருஷம் என்னாகும்? பயம்மாயிருக்கு.
லா.ச.ராவிடம் கேட்டேன்
" எல்லாவார்த்தைகளையும் (த்வனி); இந்தகதையிலேயே போட்டுவிட்டால் அடுத்த கதைக்கு வார்த்தைகளுக்கு எங்கே போவே? பதில்:ஒலகத்துல 600 கோடிபேர் மூச்சு விட்டுண்டுதானே இருக்கா...புதுசுபுதுசாக்குழந்தையும் பொறந்துண்டுதானே இருக்கு. அதுவும் மூச்சு விடததானே போறது. காத்து தீர்ந்து போச்சா?
சிறுவாணிக்கும் இதுவே...பதிலாகவும் ஆசிகளாகவும் அமையட்டும்...திருமதி சுபாஷிணிக்கும் ,
திரு. பிரகாஷுக்கும்...
திருவாளர்..வ.ஸ்ரீநிவாசன் ஐயாவுக்கும் வாழ்த்துக்கள்....!
லா.ச.ரா.சப்தரிஷி Fb
----------------------------------------------------------------------------------
காலம் நான்கு கால் பாய்ச்சலில் குதித்துச் செல்லும் போது, விஞ்சானமும் தொழில் நுட்பமும் எண்ணற்ற மாற்றங்களை மானுட வாழ்வில் கொண்டு செல்லும் போது, மொழி மாத்திரம் எந்த மாற்றமும் பெறாமல் இருந்துவிட இயலாது.
ஆம்லட் வேண்டும். பிரியாணி, புலாவ், பரோட்டா, சென்னா மசாலா, பிட்சா, பர்கர் வேண்டும். ஆனால் அந்தச் சொற்கள் வேண்டாம் என்றால் நடக்கிற காரியமா? எல்லாச் சொற்களையும் மொழி மாற்றம் செய்வோமோ?
நாஞ்சில் நாடன்.
SR Viswanathan fb
----------------------------------------------------------------------------------------
அருமை சப்தரிஷி (எனக்கு கண்ணன்) லா.ச.ரா.வின் அற்புதமான வார்த்தைகளால் பாராட்டி விட்டார் சிறுவாணி யை .
பெரியவர் ஆசி கிடைத்துவிட்டது.வேறு என்ன வேண்டும்?
நானும் வாழ்க என்று வாழ்த்துகிறேன்.
Deepa .Natarajan
Tenkasi
--------------------------------------------------------------------------------------------
எண்ணும் எழுத்தும்
சிறுவாணியின் முதல்புத்தகம்... எண்களைப்பற்றி...
இந்தமாத மூன்றாம் ஆண்டின் முதல் புத்தகம் எழுத்தைப்பற்றி!
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமல்லவா!
நவம் முதல் புத்தகம்...
நாமமும் நாஞ்சில் என்பேன் ,25 வது புத்தகம்.
ஒன்றும்...இருபத்திஐந்தும் நாஞ்சில்நாடன் ஐயாவாக அமைந்ததும், அது எண்ணும் எழுத்தாகவும் அமைந்ததும் சிறுவாணி அமைத்ததா?
அல்லது அந்த வாணியால்...அமைந்ததா?
உடனே சிறுவாணியில் சேருங்கள்.. .
இன்பமும்ஆச்சர்யமும் அனுபவியுங்கள்!
லா.ச.ரா. சப்தரிஷி Fb
--------------------------------------------------------------------------------------------------
முகநூல், நிறைய எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது,(அது பல எழுத்தாளர்களுக்கு கோபத்தையும் உண்டாகியிருக்கிறது)
நான் முகநூல் புரட்சிக்கு சற்று முன்னால் கட்டுரைகள் எழுத தொடங்கினேன்.ஆனால்,தொடர்ந்து எழுதுவதற்கு முகநூல் உதவித்தான் இருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை.
இதுவரை நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.அச்சுப்புத்தகத்தில் ஒன்று கூட வந்ததில்லை. ஏனோ,அச்சு இதழ்களுக்கும் நான் கட்டுரைகள் அனுப்பியதேயில்லை.ஒரே ஒரு கட்டுரை அலமாரி எனும் இதழில் வந்தது.ஆனால்,அதுவும் ஒரு இணைய இதழில் வந்ததுதான்.
இந்நிலையில்,ஒரு அச்சுப் புத்தகத்துக்கென்றே நான் எழுதிய முதல் கட்டுரை,நாஞ்சில் நாடன் சாரின்,'நாமமும் நாஞ்சில் என்பேன்',என்ற கட்டுரை நூலுக்கான முன்னுரை,முதன் முதலாக ஒரு அச்சுப் புத்தகத்தில் பெயரை பார்ப்பதும், நன்றாகத்தானிருக்கிறது.
இந்த நல்வாய்ப்பினை அளித்த நாஞ்சில் சாருக்கும், சிறுவாணி வாசகர் மையத்துக்கும் நன்றி.
சுரேஷ் வெங்கடாத்ரி
-------------------------------------------------------------------------------------------------
இக்கட்டுரைத் தொகுப்பில் நாஞ்சில் நாடன் பல்வேறு கால கட்டத்தில் எழுதிய 15 கட்டுரைகள் உள்ளன.பெரும்பாலானவற்றின் பேசு பொருளாகச் சொல் ஆராய்ச்சி என்பது திகழ்கிறது."எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்று சொல்லுக்கு மூலமான பொருள் குறித்தும், அப்பொருட்கள் புழங்கும் விதம் குறித்தும், அதன் வழமை குறித்தும் உரத்துச் சிந்திப்பதே இந்தத் தொகுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.சொல்லாழி,தொல் தமிழ்நாடு சோறுடைத்து, கருத்தவாவு, சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி, செத்த பிணம் தொழும் சாகும் பிணங்கள், என்று 15 கட்டுரைகளுக்கும் அவர் வைத்துள்ள வித்தியாசமான தலைப்புகளே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி விடுகின்றன.
கதைகளிலிருந்து விடுபட்டு இம்மாதிரிப் புத்தகங்களைப் படிக்கும் போது கதை கதையென்று காலம் விரயமாகிப் போனதோவென்று மனம் இன்னொரு பக்கம் ஏங்குகிறது...அம்மாதிரியான ஆய்வினையும் உழைப்பினையும் நல்கி இன்று உச்சியில் உட்கார்ந்திருக்கிறார் நாஞ்சில் நாடன் அவர்கள்....
Ushadeepan sruthy ramani fb
04.05.2019
-------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
ஆயிரம் ஆண்டுகள் பிந்தி நடக்கப்போவதை, ஔவையால் எப்படி முன்னுரைக்க முடிந்தது.
சொல்லாமலே பெரியர் சொல்லிச் சிறியர் செய்வர்
சொல்லியும் செய்யார் கயவரே!
பெரியவர்கள் தம்பட்டம் அடிக்காமலேயே தொண்டு செய்வார்கள். சிறியவர் தம்பட்டம் அடித்தாலும் தொண்டைச் செய்வார்கள். கயவரோ சொன்னாலும் செய்ய மாட்டார்கள். இதற்கு ஔவை மூன்று மரங்களை எடுத்துக் காட்டுகிறார். பலா, மா, பாதிரி என்று. தெரியாமல் பூத்து, சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கக் கிடக்கும் பலாமரம். வெளித்தெரிய பூத்து, கொத்துக் கொத்தாகக் காய்க்கும் மாமரம். ஆடம்பரமாகப் பூத்தாலும் காய்க்காது பாதிரி.
நாஞ்சில் நாடன்
நாமமும் நாஞ்சில் என்பேன்...சிறுவாணி வாசகர் மையம்
SR Viswanathan
04.05.2019
-------------------------------------------------------------------
நாமமும் நாஞ்சில் என்பேன்,
படித்ததும் ஏற்படும் பிரமிப்பு அதன் தமிழ். எத்தனை அழகான நடை. அழகு தமிழில் எளிய நடையில் ,அங்கங்கே லேசாய் நக்கல்,கிண்டல்,ஏளனம் என்று மனதை அள்ளுகிறது.
அவர் கொடுத்திருக்கும் சங்க இலக்கிய பாடல்கள்,கம்ப ராமாயணம்,தொல்காப்பியம் ,குறள் என்று பாடல்களும் அதன் விளக்கமும் அற்புதம்.
நம் வேலையை நாம் ஓழுங்காகச் செய்வதே தவம் என்பது இவர் சொல்லும் போது புரிகிறது. காற்றின் வேந்தன், நாமம் என்பதற்கு எத்தனை பொருள்கள்!
அதேபோல் பூக்கள்....அரளி,தாமரை கற்பகம்,பாரிஜாதம் ,முல்லை என்று பல பூக்களுடன் மனதை வலிக்கச் செய்யும் சாத்தனின் கதையும் வருகிறது. வறுமையைப் போல் ஒரு கொடிய நோயுண்டோ. அதிலும் பரிசில் பெற்று வறுமையை போக்கிக் கொள்ளலாம் என வரும்போது சாத்தன் எனும் குறுநில மன்னன் இறந்து விட்டான் என்று செய்தி மரணத்தை விடக் கொடுமையாக இருக்கும். இதை அவர் நடையில் விவரிக்கும்போது பாடல் அந்த சம்பவத்துடன் நம்மை அந்த இடத்துக்கே கூட்டிப் போகிறது.ஒரு நிமிஷம் அது மனதை துயரப் படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.
ஆழமான விஷயத்தையும் எளிமையாகச் சொல்லிச் செல்கிறதால் புரிகிறது. அவர் சொல்கின்ற விஷயத்தைப் பற்றியும் சிந்திக்க வைக்கிறது. சமூக அக்கறையும்,தன் வாசகனை ஒரு மேலான தளத்திற்கு உயர்த்தி கூட்டிச் செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் எழுத்தில் பிரதிபலிக்கிறது.
ரசிக்கலாம்.ரசித்துக் கொண்டே இருக்கலாம்.தமிழும், நடை அழகும்,கருத்துக்களையும் படித்துக் கொண்டே இருக்கலாம்.
இவர் கட்டுரைகளைப் படிக்கப் படிக்க,மொழி ஆளுமை பிரமிப்புடன்,நாம் ஒருசில தங்லீஷ் வார்த்தைகளுடன் குதிரை ஓட்டுகிறோம் என்ற வெட்கமும் ஏற்படுகிறது.
நன்றி சிறுவாணி வாசகர் மையத்திற்கு.
Praba G A
03.05.2019
---------------------------------------------------------------------
'நாமமும் நாஞ்சில் என்பேன்' புத்தகத்தை
பிரமிப்போடு வாசித்துக்கொண்டிருக்கிறேன்
'கைம்மாறு', 'கைக்கூலி' - விளங்குகிறது,
கணவரை இழந்த நங்கைக்குக் 'கைம்பெண்'
என்ற பெயர் வந்தது ஏன் என யோசித்துக்
கொண்டிருந்தேன். அதற்கான விளக்கத்தை
'மெய்ப்பொருள் காண்பது அறிவு' கட்டுரை
மூலம் அறிந்து கொண்டேன்
Thirumalaiyappan
03.05.2019
---------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது...
நாமமும் நாஞ்சில் என்பேன்..
நாஞ்சில் நாடன்.
சிறுவாணி வாசகர் மையம்.
எருக்கம் மலர்களை எவரும் சூடுவதில்லை. ஆனால் பிள்ளையார் சதுர்த்தியன்று எருக்கமாலைக்கு ஏக கிராக்கி.துங்கக்கரி முகத்துத் தூமணிக்கு வாங்கி வழிபாடு செய்யலாம்.சிவபெருமன் வெள்ளெருக்கு மாலை சூடியவன் என்பார்கள். கண்டவர் விண்டிருக்கக் கூடும். கம்பர், இராவணனைப் பாடும் போது, “வெள்ளெருக்கம் சடை முடியான் வெற்பு எடுத்த திருமேனி” என்பார். வெள்ளெருக்கம் மலர்களைச் சூடிய சடைமுடி உடைய நீலகண்டனின் கைலாய மலையை இடர்ந்து எடுத்த இராவணனது திருமேனி என்பது பொருள்.
வீடுகளில் சாத்திரத்திற்காக சிலர் வெள்ளருக்கு வளர்க்கிறார்கள்.மற்றபடி வெள்ளெருக்கு எவரும் பொருட்படுத்தாத தாவரம். பொய்சாட்சி சொன்னவர் மனையில் வேதாளம் வாழும், வெள்ளெருக்கு பூக்கும், பாதாள மூலி படரும், சேடன் குடிபுகும் என்று பேசும் பழம் பாடல் ஒன்றும் உள்ளது.
(12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய நல்வழி)
SR Viswanathan
13.05.2019
------------------------------------------------------------------------------------------------------
நாமமும் நாஞ்சில்
என்பேன்
நாஞ்சில் நாடன்
சிறுவாணி வாசகர்
மையம் -2019
தமிழிலக்கிய
வெளியில் மேலோட்டமாக எனது மாலைக்கண்ணுடன் பார்த்தால் மூன்றுவிதமான நிறங்களை காண
முடிகிறது. க்ளாஸிக் சங்க இலக்கிய வகை ரசிகர்கள்
(இவர்கள் பாரதிதாசன் மு.வ . தாண்டி
வரமாட்டார்கள். நெட்டித் தள்ளினால் சுரதா கண்ணதாசன் வரை போகலாம்). மற்றது, நவீன இலக்கிய வகை
- பாரதி புதுமைப்பித்தன் தொடங்கி இன்றைய
புது எழுத்தாளர் வரை படிப்பவர்கள்.( மௌனியையும் கு.அழகிரிசாமியையும் அடுத்தடுத்து
வாசிக்க முடியாமல் மலச்சிக்கல் கொள்வோரும் உண்டு). இன்னொன்று ஐரோப்பிய ரஷிய
அமெரிக்க இலக்கியத்துக்கு முன்னால் நாம்
எங்கேயோ பல ஒளியாண்டுகள் தூரத்தில்
இருக்கிறோம் என்று நம்புபவர்கள். கொஞ்சம் அகப்பயணம் ஊடான cynical வகை எழுத்து மேல் காதலுண்டு. எதுவும் தவறொன்றும்
இல்லைதானே !
இதில் சங்க
இலக்கிய ஆளுமையோடு, ஆசையோடு, நவீன இலக்கியத்துக்கும் முக்கியத்துவமும்
மதிப்பும் தந்து இரண்டிலும் காத்திரமான படைப்புகளை உரையாடல்களை பார்வைகளை
கொண்டிருக்கும் சமகால படைப்பாளிகளில் நாஞ்சில் நாடன் ஒரு சிறந்த ஆளுமை. தான்
முறையாக இலக்கிய தமிழ் பயின்றவன் அல்ல என்று சொல்லிக்கொண்டு இவர் எழுதி இருக்கும்
இந்த கட்டுரைகள் 'முறையான' கல்வி கற்றோர் வெட்கும் படிக்கு அருமையானவை.
அபாரமான வாசிப்பும் உழைப்பும். தனது பாணியில் மொழிச்செறிவும், இனிய தமிழ்ச் சொற்களின் உபயோகங்களோடு, தன்னைக்கே உரிய சமூகம் மற்றும் அரசியல் மீதான
அங்கதமும் கொண்டு எழுதப்பட்டவை.
மூலத் தமிழ்
சொற்களும் அவற்றின் சீரும் பற்றி ஆசையோடு பேசும் இவர் வட்டார சொற்கள், திசைச்சொற்கள் போன்றவற்றுக்கு உரிய இடம்
தரப்படவேண்டும் என்பதை சமயம் கிடைக்கும்போதெல்லாம் அழுத்திச் சொல்லுகிறார்.
அகராதிக்கு அகப்படாமல், சேர்க்கப்படாமல்
பல நூறு சொற்கள் உண்டு என்பதை உரக்க சொல்லுகிறார். மொழிமேல் காதல் கொண்டவனின்
மூச்சிரைப்பை அதில் நாம் உணரமுடியும். வேறு ஒரு கட்டுரையில் 'சும்மா செலம்பாதே' என்று படிப்பறியா மக்களின் கிராமத்து வழக்கு
சொல் 'புல்லும் சிலம்பின'
என்ற ஆண்டாளின்
கவிதைச் சொல்லுக்கு அருகே இருப்பதை சொல்லி
காட்டி இருப்பார்.
இங்கே ஒன்றை
சொல்ல தோன்றுகிறது. தமிழின் சொற்களஞ்சியத்துக்கு மூல காரணம் தமிழின் கவிதை அல்லது
செய்யுள் மரபு என்று தோன்றுகிறது. ஒரு பொருள் குறிக்க பல சொற்களும், ஒரு சொல்லுக்கு பல பொருள் தரும் சொற்களும்
இலக்கியத்தின் செறிவு. richness. குறிப்பாக
செய்யுள் மரபுக்கு நிறைய சொற்கள் தேவைப்படும். எதுகை மோனை உட்பட்ட பா வகைகளுக்கு
சேர்த்துக்கட்ட நிறைய சொற்கள் தேவைப்பட்டிருக்கும். புதுக்கவிதைக்கோ உரையாடலுக்கோ
புதினத்துக்கோ அந்த தேவை இருப்பதில்லை. கானம் என்று எழுதி அடுத்த எதுகைக்கு மோனம்
என்றோ வானம் என்றோ எழுத வேண்டிய நிர்பந்தம் உண்டு. சொற்களின் பயன்பாடு சற்று
தளர்வாக தாராளமாக இருக்க வேண்டிய அவசியம் உண்டு. இதனால் மொழி வளம் கூடுகிறது.
சொற்களின் பிறப்பும் பயன்பாடும் தேர்வும் அதிகமாகிறது. (ஆனாலும் இன்றெழுதும் கவி மொழிகளில்
இளவரசி என்று எழுதி விட்டதால் சந்தமாக உலையரிசி என்றெழுதி ஒப்பேற்ற வேண்டிய
நிர்பந்தங்கள் பற்றி அவரவர் முடிவு செய்து கொள்ளலாம்). இது பிற மொழிகளுக்கும் இருக்க கூடும் (உதாரணமாக ஆங்கிலத்தின் run
என்ற வார்த்தையை சுமார் முப்பது விதமாக பயன்படுத்தலாம் என்று
படித்திருக்கிறேன்) - என்றாலும் தமிழில் நீண்ட செய்யுள் மரபின் கலை இலக்கிய வடிவம் கூடுதல் சிறப்பு என்று தோன்றுகிறது.
பிழை இருப்பின் விளக்கி மன்னிக்கவும்.
சிறுவாணி
வெளியீடாக வெ.சுரேஷ்-ன் 'சொல்லின் தீராக் காதலர்' முன்னுரையுடன் 15
கட்டுரைகள். எவ்வளவு வாசிப்பு ! தேடல்!! உரையாடல் மூலம் தெளிவு !!! என
பேருழைப்பின் பலன் இந்த தொகுப்பு. இதில் இவர் குறிப்பிடும் reference களை பார்க்கும்போது உச்ச நீதிமன்ற வழக்காடுகளில் இருக்கும் அளவுக்கான
துல்லியங்கள். தேடல்கள். சிலவற்றை பகிர்கிறேன்
***
வடதிசை எல்லை
இமயம் ஆக - என்ற கட்டுரை சொல்வனத்தில் மார்ச் மாதம் எழுதப்பட்டது. அதில் 'வான் பிழை' என்ற ஒரு சொல் பற்றி குறிப்பிட்டு இதில்
கம்பனில் வருவதாக ஒருவர் சொன்னார். ஆனால் பாடல் கிட்டவில்லை என்று எழுதி
இருக்கிறார். வெளிவந்த பிறகு ஒரு வாசகர் அது கம்பன் இல்லை வில்லிபுத்தூரார் என்று
சொல்லி இருக்கின்றனர். தொகுப்பாக கட்டுரையை வெளியிடும் சிறுவாணி DTP ல் விட்டு கல்யாண பத்திரிகை போல அடித்து தள்ளாமல், இறுதியில் குறிப்பு என்று போட்டு வான் பிழை
சொல் தெளிவு பற்றி சொல்லி கட்டுரையை நிறைவு செய்துள்ளனர். சிறுவாணியின்
தரத்திற்கும், அர்பணிப்புணர்வுக்கும்
பொறுப்புணர்வுக்கும் ஒரு சோறு பதம். வெல்டன் சிறுவாணி !
சரி. சோறு பற்றிய
கட்டுரையிலேயே ஆரம்பிப்போம். தொல்தமிழ்
நாடு சோறுடைத்து கட்டுரையில் சோறு என்ற சொல்லை தேடி பயணம். ரைஸ் சாதம் என்ற
வார்த்தை நாகரிகம் ஆகி வரும் நிலையில் அம்பரமே தண்ணீரே சோறே என்கிறாள் ஆண்டாள்.
வித விதமான சோறு பற்றி சொல்லி கீரனூர் ஜாகிர்ராஜா பழனி பக்கத்தில ஆட்டின்
தலைப்பகுதி கலவை பிரியாணியை தலைச்சோறு என்பதை சொல்வதை குறிப்பிடுகிறார். சோறு
மலர்ந்தது , சோறு பொலிந்தது
போன்ற சொற்களை அடையாளமிடுகிறார். சங்கம் முதல் சோறு என்ற சொல் இருந்தாலும்
திருக்குறளில் 'சோறு' என்ற சொல் இல்லை என்ற ஒரு ஆச்சரியமான விஷயத்தை
சொல்கிறார். பிள்ளைச்சோறு என்ற வார்த்தைக்கு இப்போதைய தலைமுறைக்கு பொருளே
தெரியாது. அதில் மனிதத்தின் ஈரம் உண்டு.
'சொல்லாழி '
கட்டுரையில் ஆட்சியர்
என்ற வார்த்தை கம்பனில் உள்ளது என்கிறார். இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என
நான்கையும் செய்யுளுக்கு பயன்படுத்தலாம் என தொல்காப்பியம் சொல்வதை எழுதுகிறார்
என்பதை ஜெனேகிளாஸோபோபியா உள்ளவர்கள் அறியக்கடவது. மக்கள் புழங்கும் சொல்லை ஏற்பது
முக்கியம் என்கிறார். ஆப்பிள் என்ற வார்த்தைக்கு அரத்தை என்ற தமிழ்ச்சொல்
பொருத்தமின்மையை சுட்டுகிறார். Coffee என்ற பிரேசில் சொல்லுக்கு குளம்பு
என்று பொருள். காப்பிக்கொட்டையின் வடிவம்
ஆடு மாடுகளின் குளம்பை ஒத்து இருப்பதால் அந்த பெயர். அதை
அறிந்து தேவநேயப்பாவாணர் குளம்பி என்று சொன்னார். ஆனால் அதை நாம் கேலிசெய்து
தவிர்த்தோம் என்று - பொருத்தமற்ற வார்த்தையை சொல்வதும், பொருத்தமான வார்த்தையை தவிர்ப்பதுமான நமது
மனத்தை சொல்லிப் போகிறார். 27 மொழிகளில்
இருந்து சுமார் 2000 வார்த்தைகள் 2% புழங்குவதால் அழிந்து போகும் அளவுக்கு
நொய்மையானதா எம் தமிழ் மொழி என்று கேட்கிறார் !
நண்பர் ஒருவரின்
மகள் அமாவாசை என்பதற்கு தமிழ் சொல் என்ன என்று கேட்க அவர் இவரை தொலைபேசியில் கேட்க
- இந்த கட்டுரை உண்டாகி இருக்கிறது. திங்கள் என்பது நிலவு என்பதில் துவங்கி
புறநானூறு பேரகராதி ஆண்டாள் தேவாரம் திருவாசகம் நாலடியார் பரிபாடல் கலிப்பாடல்
சிலம்பு என பல இலக்கிய வாசனைகளை தேடிப்பிடித்து - கருத்த வாவு என்ற சொல்லை கண்டு
பிடித்து சொல்கிறார்.
சில்லென்று பூத்த
சிறுநெருஞ்சி யில் பங்கயம் என்பதற்கு பங்கேருகம் என்ற வார்த்தை குமரகுருபரர்
சொல்கிறார் . வெள்ளைத் தாமரையை வெள்ளைக்
கொஞ்சம் என்கிறார். பருவப்பெண்ணின் வாய்க்கு ஆம்பல் மலரை உவமையாக சங்கம்
சொல்கிறது. புதரில் இருந்து தாழையை பறித்து வருவதை 'அடர்த்து வந்து' என்ற அழகான சொல்லை நாஞ்சில்நாடன் எழுதுகிறார்.
தாழை மடலில் விளிம்பில் முட்கள் எதிரெதிர் இருக்கும். அதை 'மடல் விளிம்புகளில் அரம் போல் எதிர்ப்பந்தியில்
முட்கள் இருக்கும்' என ஒரு அருமையான
பிரயோகத்தை செய்கிறார். (இப்பிடியெல்லாம்
எளுதினா எங்களுக்கு தமிள் எளுதற ஆசையே போயிடும் போலிருக்கே சார். Envious )
செத்த பிணம்
தொழும் சாகும் பிணங்கள் - ல் சொற்கள் பற்றி எழுதும்போது இடையே ஒரு வரி - இவர்
பம்பாயில் இருக்கும்போது அப்பா தவறிப்போகிறார். வர முடியவில்லை. வந்து
சேர்வதற்குள் அஸ்தி முடிந்து போயிருக்கிறது. பெற்ற தகப்பனின் முகத்தை கடைசீயாக
கணக்கு கொடுத்து வைக்காமல் போனதன் காரணம் நான் செய்த பாவம் அன்று. சேர்க்க முடியாத
பணம் என்ற வரி இம்சை தந்துவிடுகிறது.
அப்பாவை பெற்ற ஆத்தா இறந்தபோது கோலிவாடா அறையில் குளிக்க மட்டுமே செய்தேன்
என்கிறார். சட்டென ஒரு புதினத்துக்கான மனலயத்தை உருவாக்கி விடுகிறது. இரங்கல்
வாசகங்கள் என்ற ஒரு 27 சொல்கிறார்
கிண்டலாக. (நாந்தான் அநேகமா அதிகமான இரங்கல் கட்டுரை எழுதி இருப்பேன் னு
நினைக்கிறேன். ரொம்ப நாள் இருந்தா இப்பிடி ஆயிடுது என்ற அசோகமித்திரன் குரல்
நினைவுக்கு வருகிறது)
மெய்ப்பொருள்
காண்பது அறிவு - ல் ருடாலி என்ற இந்தி சினிமாவை சொல்லி ஒப்பாரி பாடல் பாடுபவரின்
பெயர் (டிம்பிள் கபாடியா) அது என்கிறார்.
கூலிக்கு மாறடித்தல் என்ற வழக்கத்தை குறிப்பிட்டு கூலிக்கு அழுதாலும் அவர்களுக்கு
என்று ஒரு சொந்த சோகம் இருக்கும்தானே என்று ஏறக்குறைய ஒரு கவிதைக்குரிய வரியை
உதறிவிட்டு போகிறார்.
கள்ளமௌனம் என்ற
சொல்லை தானே முதலில் உபயோகப் படுத்தி இருக்கக்கூடும் என்ற humble செய்தி ஒன்றும் உண்டு.
நாமமும் நாஞ்சில்
என்பேன் - ல் நாமம் என்பது மூன்று கோடுகள் அல்ல. இறைவன் பெயரை சொல்லி உடலின் 12 இடங்களில்
இடப்படும் வைணவக்குறி நாமம் சொல்லி இடுவது.நாமம் என்று ஆகியதை சொல்கிறார்.
புதுத்தெளிவு. நாமா என்ற வடமொழிச்சொல்லின் தமிழ்ச்சொல் நாமம். (அயற்சொல் அகராதி
அருளி ஐயா) "வடமொழி நாமமும் தமிழ் நாமமே !". திருமண தரித்தல் என்பதே
சரியான சொல் என்கிறார். பக்கம் 56-ல் அது அ'று'கம்புல்லா அ'ரு'கம்புல்லா ?
தூங்குதல் என்ற
வார்த்தை தொங்குதல் எனும் பொருள் குறித்து வரும் இடங்களை உத்தமர் உறங்கினார் ..
கட்டுரையில் சொல்கிறார். மதுரைக்காஞ்சி யில் நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து
என்பதில் துயில் என்பதை கலவி கூடல் முயக்கம் உவத்தல் என பொருள் கொள்ள முடிவதை
குறிப்பிடுகிறார். 'உவத்தல்' என்ற சொல்லே மருவி மருவி இன்று ஒரு பிரபலமான
கெட்ட வார்த்தையாக ஆகி விட்டதை பேரா.அருளி குறிப்பிடுவதை கவனப்படுத்துகிறார்.
(அந்த வார்த்தையை உருட்டியுருட்டி சொல்லிப்பார்த்தால் beep song போலாகி விடுகிறது. அருளி ஐயா கரெக்ட்தான்.
சிம்புவுக்கு ஏதாவதுக்கு சங்கப்பாடல் தெரிந்துதான் பாடி இருப்பாரோ என்ற கவலையும்
வந்தது )
வடதிசை இமயம் ஆக
- வில் இமை என்ற சொல் இமைத்தல்
கண்சிமிட்டல் என்ற பொருளில்தான் பல இடங்களில் வழங்கி வருகிறது. ஆகவே இமயம் என்பதை
நிறுவுகிறார். இதில் புறநாறுபாடலில் அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் என்பதில் அருங்கடன் என்பது சந்தியாவந்தனம்
என்று கொள்ளலாம் என குறிப்பிடுகிறார்.
ஓங்கு நிலை ஒட்டகம் - நல்லதொரு கட்டுரை. பாலை நிலம்
இல்லாத இங்கே தமிழில் ஒட்டகம் எப்படி வந்திருக்க கூடும் என்று ஐயத்தை எழுப்பி பல
பாடல்களை உதாரணம் சொல்கிறார். தொல்காப்பிய பொருளதிகாரம், சிறுபாணாற்றுப்படை, அகநானூறு இளநாகனார் - இவற்றில் ஒட்டகம்
சொல்லப்பட்டிருக்கிறது.
இஸ்லாமியர்கள்
பக்ரீத் நாளில் ஆடு மாடு போல ஒட்டகம் குர்பானி செய்யப்படுவது பற்றி கசாப்பின்
இதிகாசம் சிறுகதையில் கீரனூர் ஜாகீர் ராஜா எழுதுவதை குறிப்பிடுகிறார். சமணம்
பவுத்தம் நீங்கலாக பிற அனைவரும் பலியிட்டு வழி பட்டிருக்கிறார்கள். ஆனாலும்
தமிழகத்து அறிவு ஜீவிகள் இந்து மத சடங்கை மட்டும் தேர்ந்தெடுத்து கண்டனமும்
இளக்காரமும் செய்வார்கள் என்று ஒரு 'குட்டு' வைத்து, யானையை துளைக்கும் அம்பு பஞ்சின் மேல் பாயாது
என்று அவ்வையார் சொல்வதை களிம்பாக தடவுகிறார். (சமீபமாக இந்து திருமண மந்திரங்கள்
புரியாது என்று தமிழக தலைவர் ஒருவர்
சொன்னதும் அவருக்கு உருது ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகள் தெரியும் போலிருக்கிறது
என ஒருவர் பதிவிட்டதும் சமகால உதாரணமாக கொள்ளலாம் ).
உயிர்பலியை விலக்கிய நாகரீகத்தில்தான் மாவுப்
பொருட்களால் உருவம் செய்து பலியிடுதல் எலுமிச்சை பூசணியை உடைத்தல் போன்றவை
நீட்சியாக இருக்கிறது என்று அவதானிக்கிறார். யசோதரகாவியம் எனும் சமணக்காப்பியம்
பாவனைக்கொலைகள் (அழகான வார்த்தை !) கூட
கூடாது என்பதை குறிப்பிடுகிறார். பெட்டை என்ற சொல் ஒட்டகத்தின் பெண்ணினத்துக்கு
பொருந்தும் என தொல்காப்பியம் சொல்வதை சொல்கிறார். ஆகவே ஒட்டகம் என்ற சொல்
பண்டைக்காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது. பார்த்தே இராத ஒன்றைப் பற்றி பாட
சங்கப்புலவன் என்ன பின்நவீனத்துவ எழுத்தாளனா என்று ஒரு நக்கல் வரியும் உண்டு.
வெள் என்பு
கடுங்கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் என்ற அகநானூற்று வரியை எடுத்து என்பு
என்றால் எலும்பு. ஒட்டகம் எலும்பையா
தின்றது ? என்று சொல் தேடி
அலைகிறார். சென்னைப் பல்கலைக்கழக அகராதி - எலும்பு , உடம்பு , புல் என மூன்று பொருள் தருகிறது. இதில் விசேஷம்
என்னவென்றால் இந்த பாடலுக்கு உரை எழுதிய ஆறு தமிழ் அறிஞர்களில் ஐந்து பேர் ஒட்டகம்
எலும்பை தின்றதாகவே உரை எழுதி இருக்கிறார்கள். (ஆறாவது நபர் நாஞ்சில் அல்ல.
அவர்தான் முறையாக தமிழ் படிக்காதவன் என்று அறிவித்துக் கொண்டுவிட்டாரே). ஒருவர்
மட்டும் வெள்ளை எலும்பை போன்ற சுள்ளிகளை தின்றது என எழுதி தப்பித்திருக்கிறார்.
இத்தனை எழுதி
மற்றுமொரு அருமையான தகவலை சொல்கிறார். அது ஆங்கில கலப்பான தமிழ் பற்றியது. ஊசி
முனை காதில் ஒட்டகம் நுழைந்தால் என்பது தமிழில் ஒரு வழக்கு. ஊசி முனையில் ஒட்டகம்
ஏன் நுழையவேண்டும் ? உயரமாக
இருப்பதாலா ? சேக்கிழார்
அடிப்பொடி T.N.ராமச்சந்திரன்
ஐயா அவர்கள் சொன்னதை குறிப்பிடுகிறார். பைபிளில் வரும் Camel என்ற சொல் யாராலோ ஒட்டகம் என்று மொழிபெயர்க்க பட்டு விட்டது.
ஆனால் camel என்ற சொல்லுக்கு
தடித்த கயிறு என்று பொருள். இப்போது நமக்கு எல்லாம் விளங்கி விடுகிறது.
ஒட்டகம் பற்றி
வடநாட்டில் வழங்கும் சுவாரசியமான ஒரு கதையை சொல்கிறார். கடவுள் உயிரினங்களை
படைத்துவிட்டு பிறகு அவற்றுக்கு ஆண்குறிபெண்குறி களைப் பொருத்தி அனுப்புகிறார்.
அவர் வேலை முடிந்து கிளம்பும்போது தூங்கி கொண்டிருந்த ஒட்டகம் அவசரமாக ஓடிவந்து
நிற்கிறது . அப்போது கடவுள் என்ன செய்கிறார்
என்றால் .. (புத்தக விலை இந்திய ரூபாய் 160. சிறுவாணி பதிப்பகம் )
தொகுப்பில்
சிந்தியுள்ள உதிரி பூந்திகள் -
சந்திரகாசம்
என்பது சிவன் ராவணனுக்கு கொடுத்த வாள்
மகப்பேறு முடிந்த
தீட்டு நாட்களாய் புனிறு என்றனர்
விடுமுறை என்பதை
குறிக்க வாவு என்றனர்
மணலுக்கு நாம்
கண்ணை மூடிக்கொள்வது போல ஒட்டகம் நாசியை மூடிக்கொள்ளும்.
ராகு கேது
கோள்களுக்கு மதியுணி என்று பெயர்
உணங்குதல்
என்றால் வெயிலில் காய்தல்
புரட்சி என்ற
சொல்லை பாரதியார்தான் அறிமுகம் செய்கிறார்
அழனம் என்றால் பிணம் என்பதன் மாற்றுச்சொல்
கனலி என்றால்
சூரியன்
சிவனின் வில்
பினாகம் - எனவே பிநாகபாணி
உடையில் உள்ளே
மிருதுவாக வைத்து லைனிங் தைக்கும் துணியை camel cloth என்பர்
திருக்குறளில்
அனிச்ச மலர் நான்கு இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அருமையான பதிவு.
எவ்வளவு ஆழமாக
உள் வாங்கி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது.
வாசிப்பின்
அழகும் அருமையும் இதில்தான் இருக்கிறது.
இது போன்ற
வாசகர்கள்தான் எழுத்தாளர்களின் கொண்டாட்டம்!
அதனால்தான்
சொல்கிறார்களோ , எழுதி
முடித்தபின் அது வாசகனுக்குச் சொந்தம் என்று
Ramesh Kalyan 🙏...'நாமமும் நாஞ்சில் என்பேன்' குறித்த அருமையான, செறிவான அறிமுகம்...நாஞ்சில் நாடன்ன் மெனக்கெடல் நாமமும் நாஞ்சில் என்பேன் படிக்கும் போது வியக்க வைக்கிறது...
வாசிப்பு தொடர்கிறது... இந்நூலை சாதரணமாகக் கடந்து செல்ல முடியவில்லை.
நானும்
"நாமமும் நாஞ்சில் என்பேன்" படித்து வருகிறேன்.
நாஞ்சில் நாடன்
அவர்களின் புலமை பிரமிப்பை
உண்டாக்குகிறது.
இந்த எழுத்து ஒரு
தனி ரகம். எல்லோராலும் எழுத முடியாது.
அவர் எங்கோ
உயரத்தில் இருக்கிறார்.
அண்ணாந்து
பார்த்தால் கூட கழுத்து வலிக்கும்.
அவருடன் சேர்ந்து
நானும் இந்த குழுவில் இருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமை தான்.
Nandhu-sundhu
நாமமும் நாஞ்சில்
என்பேன் reading. இந்த மனுஷனுக்கு சாப்பாடு தண்ணீர் தூக்கம்
இதெல்லாம் ஏதாவது உண்டா? What a treasure !!
படித்ததில்
பிடித்தது
ஐ என்ற
சொல்லுக்கு இருபத்து நான்கு பொருள்கள் கூறுகின்றது தமிழ்ப் பே ரகராதி. தலைவன், தந்தை, கணவன், அரசன், கடவுள், மனைவி, தமையன்,சந்தேகம்,
அழகு, வியப்பு, நுண்மை, கோழை, இருமல், பெருவியாதி,
சவ்வீரம் எனும் நஞ்சு,
மந்தாரம், ஊன், கை, திசா முகம்,
மலை உச்சி, கடுகு, தும்பை, சர்க்கரை,
ஐந்து முதலியன
.
என்னை முன்
நில்ல்ன்பின் தெவ்வீர்
பலரென்னை
முன்னின்று
கல்நின் றவர்
இத்திருக்குறளில்
ஐ எனும் சொல் தலைவன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது
இதில் எங்கே ஐ
என்ற சொல் வருகிறது என்று கேட்பீர்கள், திருக்குறளை சொல் பிரித்தால் நாம் அறியலாம்
என் ஐ முன்
நில்லன்பின் தெவ்வீர் பலரென் ஐ
முன்னின்று
கல்நின் றவர்
என்று எழுதலாம்
இங்கு ஐ எனில் தலைவன் ,தெவ்வீர்
எனில் பகைவன்,கல் எனில் நடுகல். .நடுகல் என்றால் இறந்த வீரர்களின் புதைகுழி மேட்டில் நடப்படும் கல்.
படைச் செருக்கு
என்பது அதிகாரத்தின் தலைப்பு. தன்
முன்னால் போருக்கு தயாராக நிற்கும் பகைவர்களை பார்த்து வீரன் ஒருவன் பெருமிதத்துடன் அறை கூவிச் சொல்கிறான். தன் தலைவனின் வீரத்தைத் திறனை
மெச்சி சொல்கிறான். ‘ என் தலைவன் முன்னால் வந்து நிற்காதீர்கள்,
பகைவர்களே ! அங்கே தொலைவில் பாருங்கள், பல நடுகற்கள்
தெரிகின்றன அல்லவா.? அந்த நடுகற்கள் யாவும் என் தலைவன் முன்னால் முன்பு போருக்கு வந்த நின்ற பகைவர்கள். இன்று நடுகற்களாக நின்று கொண்டிருக்கிறார்கள்‘
அற்புதமான
திருக்குறள், திருக்குறளை இலக்கியம் அல்ல நீதி நூல் என்று
வாசிக்காமலேயே வாதாடி அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய குறள்வெண்பா, செய்யுளின்
உணர்ச்சியையும் பாவத்தையும் சொற்களின் நேர்த்தியான கட்டமைப்பையும்
கவனியுங்கள். எத்தனை வியத்தகு விதத்தில் ஐ எனும்
ஓரெழுத்து சொல் தலைவன் என்ற
பொருளில் ஆளப்பட்டிருக்கிறது.
எங்கே தொலைத்தோம், ஏன் தொலைத்தோம், யாருக்காக
தொலைத்தோம், என்று தொலைத்தோம்
இந்த ஆழமான சொல்லை. குறைந்தபட்சம்
’ தல’ எனும்
சொல்லுக்கான மாற்றுச் சொல்லாக வேணும் ‘ஐ’
என்று சொல்லக்கூடாதா?
இதைத்தான் ‘ தன் படைவெட்டி சாதல்’ என்கிறார்கள் போலும்
நன்றி -- நாமமும்
நாஞ்சில் என்பேன்.
'நாமமும் நாஞ்சில்
என்பேன்' - எவ்வளவு அழகான
பனுவல்.
நாஞ்சில் நாடன்
ஐயா சொல்வழியில் தமிழ் கொஞ்சி விளையாடுவதையும், சமூகத்தின் மீது அவருக்கு இருக்கும் கோபங்களும்
மனதார உணரமுடிகிறது.
'நாமமும் நாஞ்சில்
என்பேன்' மூலம் அருமையான அனுபவத்தைக் கொடுத்த
உங்களுக்கும் ஐயா அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
உங்களது பணி
எப்பொழுதும் தொடரட்டும்.
Nithyanandan
முகநூல், நிறைய எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது,(அது பல எழுத்தாளர்களுக்கு கோபத்தையும் உண்டாகியிருக்கிறது)
நான் முகநூல்
புரட்சிக்கு சற்று முன்னால் கட்டுரைகள் எழுத தொடங்கினேன்.ஆனால்,தொடர்ந்து எழுதுவதற்கு முகநூல் உதவித்தான் இருக்கிறது என்பதில்
சந்தேகமேயில்லை.
இதுவரை நிறைய கட்டுரைகள்
எழுதியிருக்கிறேன்.அச்சுப்புத்தகத்தில் ஒன்று கூட வந்ததில்லை. ஏனோ,அச்சு இதழ்களுக்கும் நான் கட்டுரைகள்
அனுப்பியதேயில்லை.ஒரே ஒரு கட்டுரை அலமாரி எனும் இதழில் வந்தது.ஆனால்,அதுவும் ஒரு இணைய இதழில் வந்ததுதான்.
இந்நிலையில்,ஒரு அச்சுப் புத்தகத்துக்கென்றே நான் எழுதிய
முதல் கட்டுரை,நாஞ்சில் நாடன்
சாரின்,'நாமமும்
நாஞ்சில் என்பேன்',என்ற கட்டுரை நூலுக்கான முன்னுரை,முதன் முதலாக ஒரு அச்சுப் புத்தகத்தில் பெயரை
பார்ப்பதும், நன்றாகத்தானிருக்கிறது.
இந்த
நல்வாய்ப்பினை அளித்த நாஞ்சில் சாருக்கும், சிறுவாணி வாசகர் மையத்துக்கும் நன்றி.
சுரேஷ்
வெங்கடாத்ரி
01.05.2019
----------------------------------------------------------------------------------------------------------------
இந்து தமிழ்திசை ‘படைப்பாளி’யில் 4.6.2019
இன்று: ‘வீரநாராயணமங்கலம் - கோவை, வழி: மும்பை..!’
எழுத்தாளர்
நாஞ்சில் நாடனின் இலக்கியப் பயணம்
------------------------------------------------------------------------------------
பேசிக்
கொண்டிருந்தால் நேரம் போவதே தெரிவதில்லை. எம்.எஸ்.சி., ‘மேத்ஸ்’ படித்தவருக்குள் இத்தனை தமிழ் இலக்கிய, இலக்கணப் புலமையா? சொற் தேடலா? தமிழ் பண்டிதர்களை மிஞ்சும் ஆற்றல், யதார்த்தக் கூறுகளிலிருந்து எங்கிருந்துதான்
வெளிப்படுகிறதோ என வியக்கத்தக்க மனிதராகவே தோற்றம் கொள்கிறார் நாஞ்சில் நாடன்.
பிறந்தது
நாகர்கோயில் வீரநாராயண மங்கலம் கிராமம். புலம்பெயர்ந்தது மும்பை. அங்கிருந்து
வந்து முப்பது ஆண்டுகளாக கோவையில் வசித்து கொங்கு மண்டலவாசியாகவே மாறிவிட்டார்.
அந்த நன்றியை பறைசாற்றும் முகமாகவோ என்னவோ, இங்குள்ள சிறுவாணி வாசகர் மையம் என்ற அமைப்பு
‘நாஞ்சில் நாடன் விருது’
என்ற பரிசினை
இரண்டாண்டுகளாக இலக்கிய அன்பர்களுக்கு வழங்கி வருகிறது. கோவை புதூர் பேரூர்
சாலையில் வ.உ.சி தெருவில்தான் நாஞ்சில் நாடனின் வீடு. இளமைக்காலம் பற்றி கேட்டவுடன் குழந்தை போல் பேச
ஆரம்பித்து விடுகிறார்.
‘‘அஞ்சாம் வகுப்பு
வரை எங்க கிராமத்து பள்ளி. 8வது வரை எறச்சகுளம் நடுநிலைப் பள்ளி. எஸ்.எஸ்,எல்.சி தாழக்குடி உயர்நிலைப் பள்ளி. எறச்சகுளம்,
தாழக்குடி ரெண்டுமே
ஒன்றரை மைல். நடந்தேதான் போகணும். அப்பவெல்லாம் பள்ளிக்கூடத்துல படிக்கிற பசி
எனக்கு சுத்தமா இல்லை. வயித்துப் பசிதான் அதிகம். எங்க அப்பா கணபதியாப்பிள்ளை.
எனக்கு சுப்பிரமணியப் பிள்ளைன்னுதான் சர்டிபிகேட்டுலயே பேரு. பின்னாலதான் அதை
கெஜட்ல போட்டு ரேசன்கார்டு முதல் பாஸ்போர்ட் வரை மாத்தினேன். கல்லூரி படிப்பு
கன்னியாகுமரியில பிஎஸ்சி மேத்ஸ், திருவனந்தபுரத்துல
எம்எஸ்சி மேத்ஸ்.
‘‘1970ல் படிப்பு
முடிச்சு டிஎன்பிஎஸ்சியில எத்தனை வகை தேர்வுகள் உண்டோ அத்தனையும் எழுதி
முடிச்சேன். பலனில்லை. எனக்கு தெரிஞ்சவர் நேவியில வேலை பார்த்துட்டு மும்பையில்
இருந்தார். அவர் கூப்பிட்டார். 2 சட்டை, பேண்ட், 2 லுங்கி, 2 உள்ளாடைகள்னு எடுத்துட்டு போனவன் அங்கே
கலெக்ட்ரேட்ல தினக்கூலியில பார்த்தேன். அப்ப எங்க ஊர்ல குத்தகை நிலம் பார்த்தவர்
கிடைச்சார். அவர் மூலமா டபிள்யு எச் பிராடி நிறுவனத்தில் சேர்ந்தேன். அதுவும் ரூ. 7 தினக்கூலிதான். அப்ப மார்க்கெட்ல கிடைக்கிற
பழைய ஆங்கிலப் புத்தகங்கள் குறைஞ்ச விலைக்கு வாங்கிப் படிக்கிறது வழக்கம். என்
சாப்பாட்டு நேரத்துல அப்படி ஒரு ஆங்கிலப் புத்தகத்தை படிச்சுட்டு இருக்கேன்.
‘‘அதை அலுவலக
அதிகாரி பார்த்துட்டார். ‘அந்த புத்தகம் படிக்கிற அளவு என்ன
படிச்சிருக்கே?’ன்னு மாற்றிக் கேட்டார்.
சொன்னேன். ‘அப்புறம் எதுக்கு
இந்த வேலைக்கு வந்தே?’ன்னு அடுத்த
கேள்வி. ‘வேற வேலை
கிடைக்கலை. அதுதான்!’ என்றேன். உடனே
அவர் உதவியாளரை அழைத்தார். என்னை குடோன் கிளார்க்காக ரூ.210 மாத சம்பளத்தில் அப்பாயிண்ட்மெண்ட் செய்ய
உடனடியாகவே ஆர்டரை போட்டுட்டார். இப்படியாக
தொடங்கியதுதான் என் பிழைப்பு வாழ்க்கை ஆபீஸ் இன்சார்ஜ், மார்க்கெட்டிங், சேல்ஸ் எக்ஸ்க்யூட்டிவ் என்றெல்லாம் நீண்டது!’’
என்றவர்
அடுத்ததாக தன் இலக்கியப் பயணத்திற்கான ஆரம்ப விதை முளைத்த அனுபவத்திற்குள்
புகுந்தார்.
‘‘நான் பிறந்தது 1947 டிசம்பர் 31. எனது 12-13 வயசிலேயே வாசிப்பு ஆரம்பமாயிருச்சு. காமிக்ஸ்,
துப்பறியும், மா யாஜாலக் கதைகளில் ஆரம்பித்து கல்கி, ஜெகசிற்பியன், நா.பா, ஜெயகாந்தன் எல்லாமே படிக்க ஆரம்பிச்சுட்டேன்.
1965ல்ன்னு
நினைக்கிறேன். ஒரு கவிதை எழுதி குமுதத்திற்கு அனுப்பினேன். அது வருமான்னு சொல்லி
வாராவாரம் லைப்ரரியில் குமுதத்தை புரட்டிப் புரட்டிப் பார்ப்பேன். என் கவிதை
வராட்டியும் அதுல வர்ற கவிதை, கதை, ஜோக்ஸ், துணுக்கு எல்லாம் எப்படியிருக்குன்னும்
படிப்பேன். வேடிக்கையா இருக்கும்.
‘‘ஒரு
கட்டத்துலதான் இவங்க பிரசுரிக்கிற எழுத்து நம்ம நினைக்கிற மாதிரியான
வாழ்க்கையில்லைன்னு புரிஞ்சுது. எழுதறதை அப்போதைக்கு ஒத்தி வ ச்சுட்டேன்னுதான்
சொல்லணும். மும்பை போன பின்பு அங்கே தமிழ்சங்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது.. அங்கே
நிறைய புத்தகங்கள் இருக்கும். ஒரு ஆள் ரெண்டு புத்தகம் வாசிக்க எடுத்துப் போகலாம்.
ஞாயிறுதோறும் இலக்கிய கூட்டங்கள் நடக்கும். மாதம் ஒரு எழுத்தாளர் வெளியூரிலிருந்து
வெளி மாநிலத்திலிருந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வார்கள்.
‘‘இச்சங்கம் ‘ஏடு’ன்னு 32 பக்கம்
புத்தகத்தை வெளியிட்டு வந்தது. அதில் இந்த இலக்கிய நிகழ்ச்சிகள் குறித்த செய்திகள்
எல்லாம் இடம் பெறும். கவிஞர் கலைக்கூத்தன் அதை கவனித்து வந்தார். அந்த இதழை சென்னை
தீபம் ஆபீஸ்லாதான் அச்சடிச்சு தந்தாங்க. அதில் என்னை சங்க நிகழ்வுகள் பற்றி அரைப்
பக்கம் எழுதிக் கொடுக்கச் சொல்லுவாங்க. செய்வேன். இந்த ஏடு இதழ் வரும்போது தீபம்
இதழும் சென்னையிலிருந்து வரும். அதை வாசிக்கும்போது நாமும் ஏன் கதை எழுதக்கூடாது
என தோணும். அப்படி ‘விரதம்’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதி அனுப்பினேன். 1975ல் அது என் முதல் கதையாக பிரசுரமானது.
அப்ப அந்த
கதைக்கு வண்ணதாசன் பாராட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் காலத்தில் இலக்கிய
சிந்தனை அமைப்பை ப.சிதம்பரமும், ப.லட்சுமணனும்
நேரடியா நிர்வகிச்சு வந்தாங்க. ப.லட்சுமணனுக்கு சொந்தமாக பஞ்சாலைகள் உண்டு. அதற்கு
பஞ்சு வாங்க பாம்பே வருவார். அப்படி அந்த மாதம் வந்தவர் சங்கத் தலைவரிடம் என் கதை
பற்றி பேசி, என்னை விசாரித்து
வரவழைத்தார். ‘இந்த மாசம் இலக்கிய
சிந்தனை சிறந்த சிறுகதை உன்னோடதுதான் !’ என்று சொல்லி பரிசுத்தொகை ரூ.50 ஐ தன்
பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தார். ஆக, என் முதல் சிறுகதையே இலக்கிய சிந்தனை பரிசு
பெற்றது. அதற்குப் பிறகும் 3 முறை அந்த
பரிசினை வாங்கியிருக்கிறேன்!’’
நாஞ்சில் நாடனின்
முதல் நாவல் ‘தலைகீழ்
விகிதங்கள்’. அது அச்சாகி
பதிப்பகத்தாரிடம் சுமந்து அழைந்து தானே புத்தகம் போட்ட அனுபவத்தை அவர் விவரித்த
விதமே ஒரு நாவல் போல் இருந்தது. அந்த நூல் வெளியான பிறகே, ‘தெய்வங்கள், ஓநாய்கள், ஆடுகள்’ என்ற முதல் சிறுகதைத் தொகுதி
வெளிவந்திருக்கிறது. அதுவே தங்கர் பச்சனின் சினிமாவாகவும் வந்தது. நாஞ்சில் நாடன் 1989 ஆண்டு மும்பையிலிருந்து கோவைக்கு பணியிட
மாறுதலாகி வந்திருக்கிறார். அப்போது வரை 2 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள்
மட்டுமே வெளியாகியிருக்கிறது.
கோவைக்கு வந்த
பிறகு அந்த நூல்களின் எண்ணிக்கை 48 ஆக
உயர்ந்திருக்கிறது. சாகித்ய அகாடமி விருது ‘சூடிய பூ சூடற்க!’ பெற்றதும், 2009ல் கலைமாமணி வாங்கியதும், 2012ல் இயல் விருது கிடைத்ததும் கோவை மண்ணில்
இருந்து எழுதிய எழுத்துக்கள்தான் என்பதை நெகிழ்ச்சி ததும்ப விவரித்தார் நாஞ்சில்
நாடன்.
‘‘நான் நாகர்கோயிலில் 26 வருடம், மும்பையில் 13 வருடமும், கோவையில் 30 வருடமும் வாழ்ந்திருக்கிறேன். கோவைக்கு
வரும்போது எனக்கு புவியரசு, சிற்பியை தவிர
யாரையும் தெரியாது. இங்கே வந்த பின்புதான் விஜயாபதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சி,
ஞானி, அமரநாதன், செந்தலை கெளதமன், ஆறுமுகம், வேனில் கிருஷ்ணமூர்த்தி எல்லாம் அறிமுகம்
ஆனாங்க. நான் வேலை செய்த அலுவலகத்திற்கு பக்கத்திலேயே ஞானியின் வீடு. அதனால் அவரை
அடிக்கடி சந்தித்து இலக்கிய பரிவர்த்தனை செய்து கொள்ள முடிந்தது. திரும்பின
பக்கமெல்லாம் இலக்கிய கூட்டங்கள், நிறைய
வாசிப்புகள், அதுவெல்லாம்தான்
என்னைப்புடம் போட்டிருக்கின்றன. என் மகன், மகள் டாக்டர், எஞ்சினியர் என
வாழ்க்கையில் செட்டில் ஆகவும் இந்த மண்ணே உதவியிருக்கிறது. இங்கே வராமல்
மும்பையிலேயே இருந்திருந்தால் என் இலக்கிய பயணம் மிதவை நாவலுடனே அஸ்தமித்தும் கூட
இருக்கலாம்!’’ என்றும்
நெகிழ்கிறார்.
‘மேத்மேடிக்ஸ்
முதுகலை படித்தவரான உங்களுக்குள் சொற்களின் மீதான கரிசனம் உட்புகுந்தது எப்படி?’’
என்று கேட்டதும்
அதற்குள்ளே புகுந்து விளையாட ஆரம்பித்து விட்டார்.
‘‘non fixen எழுத
ஆரம்பித்தபோது கதை, நாவல் எழுதற
மாதிரி அல்ல அது என்று உணர்ந்தேன். வந்த
சொல்லே திரும்பத் திரும்ப வருவதில் அர்த்தமில்லை, சுவாரசியமுமில்லை என தோன்றியது. அந்த சொற்களை
தேடி திருக்குறள், நாலடியார்,
திவ்யபிரபந்தம், சிலப்பதிகாரம், கம்பன், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என எங்கே புறப்பட்டாலும்
சொற்களின் கிடைத்தது. ‘ஓணான்’ என்ற சொல்லை நாகர்கோயில்காரங்க ‘ஓந்தான்’னும், கோவைக்காரங்க ‘ஒடக்காயி’ன்னும் சொல்றாங்க. இதை இலக்கியத்தில் தேடும்போது ஓந்து, ஓதி, ஒடக்கா, ஒடுக்கான்னு
போயிட்டே இருக்கு. இதேபோல் உறக்கம், துயில், துஞ்சுதல் ஒரே
பொருள். ‘சோறு’ நம் அசல் தமிழ் சொல். சாதம், ரைஸ், சாப்பாடு, சாவல்ன்னு
சொல்றோம். புருஷ்டம் என்றால் புட்டம். அதற்கு ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு
தமிழ் வார்த்தைகள் உண்டு.
‘‘இதையெல்லாம்
பேராசிரியர்கள் வட்டார வழக்கு என கொச்சைப் படுத்தி ஒதுக்கித் தள்ளுகிறார்கள். அந்த
சொற்கள் எல்லாம் நம் மொழிக்கு பாமர மக்கள் எழுப்பிய கட்டுமான பொருட்கள். அதை நாம்
தவற விடக்கூடாது. தொலைக்கக்கூடாது. பொது மொழி என்பதும், அதன் சொற்களும் அழகுபடுத்தப்பட்ட கட்டிடம்
அல்லது சுவர் என்றால் அதற்குள் இருக்கும் மண், மணல், செங்கல் எல்லாம் வட்டார வழக்கு சொற்களே. செங்கல் இல்லாமல் கட்டிடம் ஆகுமா?
எனவே பேராசிரியர்கள்
தமிழ் பண்டிதர்கள் அந்த செங்கற்களை காப்பது என்பது நம் மொழியையும் காப்பது
என்கிறேன். அதில் கொங்குமொழி, நாஞ்சில் மொழி,
மதுரை மொழி எல்லாமே கட்டுமானக்களஞ்சியம்தானே?’’
‘‘இந்த அளவு தமிழ்
சொற்களை தேடும் உங்களுக்குள் கல்லூரிப் படிப்பான ‘மேத்தமெடிக்ஸ்’ இருக்கிறதா?’’
‘‘இல்லாமல்?
இப்பவும் கூட ஒரு
சீதாபழத்தை சாப்பிட்டால் அதில் உள்ள கொட்டைகளை 68, 70 என எண்ணி விடுகிறேன். பழாப்பழக் கொட்டைகளையும்
எண்ணுகிறேன். இந்த பழங்களின் கொட்டைகள்
அத்தனைக்கும் இங்கே விதைந்து முளைக்கும் உரிமை இருக்கிறதுதானே? நாம் சாப்பிட்டு விட்டு வெளியே எறிந்த பின்,
அதில் சில முளைத்தால் கூட
அவற்றில் எத்தனை மரங்களை வளர அனுமதிக்கிறோம். அப்படி மட்டும் விட்டிருந்தால் இந்த
உலகு காடு சூழ் உலகாக இருந்திருக்குமே. அதற்கான அந்த உரிமையை மறுத்தது யார்,
அபகரித்தது யார்? என கேள்வி எழும்பும்போது கணிதம் இலக்கிய அறிவாக,
சமூக அறிவாக
வெளிப்படத்தானே செய்கிறது?’’
என்று
சுவாரஸ்யத்துடன் சொல்லும் நாஞ்சில் நாடனின் புனைப் பெயர் பற்றி கேட்டபோதும்
சுவாரஸ்யம் மாறாமலே அதையும் விளக்கினார்.
‘‘நான் எழுத
வரும்போது க.நா. சுப்பிரமணியம், சுகி.சுப்பிரமணியம்ன்னு
நிறைய சுப்பிரமணியங்கள். அதில் நானும் க.சுப்பிரமணியம் ன்னு பேர் வச்சுகிட்டா
நல்லா இருக்காது . அப்ப எங்க ஊர்ப் பேரோட இருக்கிற நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள்
மீது ஓர் ஈர்ப்பு வந்தது. இப்படி பெயருடன் ஊரை இப்படி சேர்த்துக் கொண்டால்
நல்லாயிருக்குமே. அப்படி தேடியதில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை சில பல
காரணத்தால் ஒரே ஒரு நூலை நாஞ்சில் நாடன் என்ற பெயரில் எழுதி வெளியிட்டு விட்டு,
பிறகு அப்பெயரையே பயன்படுத்தவில்லைன்னு தெரிஞ்சுது.
அந்த பேரை அப்படியே எடுத்து வச்சுட்டேன். அதுதான் இன்னெய்க்கு வரைக்கும்!’’
சந்திப்பு,
கா.சு.வேலாயுதன்
--------------------------------------------------------------------------------------------------------------------------
நாம் ஏன் ஒரு
மிகப்பெரும் பொக்கிஷத்திலிருந்து எடுத்து செலவழிக்க இப்படி கஞ்சத்தனம் செய்கிறோம்?
இந்தக் கேள்விதான் இந்தக்
கட்டுரைத் தொகுப்பில் நாஞ்சில் நாடன் நம்மை நோக்கி வீசிடும் முக்கியமான, அடிப்படையான கேள்வி. ஒரு கவிதையில் தமிழ்க்
கவிஞனை சோற்றுக்கு செத்தாலும் , சொல்லுக்கு
சாகாதே என்று எழுதியவர் அவர். நாய் பெற்ற
தெங்கம் பழம்போல நம்மிடம் தமிழ் இருக்கிறது என்பதை எண்ணி ஆறாத துயர் கொள்கிறது
அவர் மனம். …(வெ.சுரேஷ்)
----------------------------------------------------------------------------------------------------------------------