Thursday, January 21, 2021

உறுப்பினராக , கட்டணம் செலுத்த..சிறுவாணி வாசகர் மையம்







 அனைவருக்கும் வணக்கம். 

2017ஆம் வருடம் பொங்கல் நாளில் சிறுவாணி  வாசகர் மையத்தின் "மாதம் ஒரு நூல்" திட்டத்தை அறிவித்து,துவங்கிய முயற்சிக்குத் தாங்கள் அளித்துவரும் ஆதரவு க்கு முதலில் நன்றி.

 மார்ச்--2020 உடன் கடந்த வருடச் சந்தா முடிவடைகிறது.

(12 புத்தகங்கள்)

 2021 ஏப்ரல்- 2022 மார்ச் கான ஆண்டுக் கட்டணம்

ரூ 1600 /- ,

பிற மாநிலங்களுக்கு

ரூ 2000/-

 இத்தொகையை அனுப்பி சந்தாவைப் புதுப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 சிறுவாணி  வாசகர்  மையம் வணிகநோக்கின்றி முழுக்கச் சிறந்த படைப்புகளை வாசகர்களிடம் கொண்டுசெல்லும் வகையில் செயல்படுவது தாங்கள் அறிந்ததே.

 வாசகர் வட்டம், இலக்கியச் சிந்தனை அமைப்புகளை முன்மாதிரியாகக்கொண்டு துவங்கிய சிறுவாணி வாசகர் மையம் தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரும் என உறுதியளிக்கிறோம்.

 

இப்போதிலிருந்தே தங்கள் ( ஏப்ரல் 2020-மார்ச் 2021) சந்தாவைப் புதிப்பித்துத்  தொடர்ந்து ஆதரவு தருவதோடு தங்கள் நண்பர்களையும் சிறுவாணி வாசகர் மைய உறுப்பினர்களாகச்  சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 தங்கள் அன்புக்கும், துணையிருப்புக்கும் மீண்டும் மனமார்ந்த

நன்றி.

 சிறுவாணி வாசகர்  மையம்.

**********

சிறுவாணி வாசகர் மையத்தின் "மாதம் ஒரு நூல்"திட்டத்தில் உறுப்பினராக ,

கட்டணம் செலுத்த...

 2021 ஏப்ரல்- 2022 மார்ச் கான ஆண்டுக் கட்டணம்

ரூ 1600 /- ,

பிற மாநிலங்களுக்கு

ரூ 2000/-

 

NEFT / RTGS மூலம் பணம் அனுப்ப.....

 

Canara Bank(Syndicate Bank), Avinashi Road Branch, 

Coimbatore - 641018,

Current A/c no. 61211010003590

IFSC :  CNRB0016121

Beneficiary : Siruvani Vasagar Maiyam.

****

8778924880

Google pay (siruvani vasagar maiyam) number

*****

சிறுவாணி வாசகர் மையம்,

24-5, சக்தி மஹால், சின்னம்மாள் தெரு,

கே. கே. புதூர்,

கோவை - 641038

 

                      9940985920 / 8778924880/  9488185920 (ஜி.ஆர்.பிரகாஷ்)

 siruvanivasagar@gmail.com

                                            https://siruvanivasagarmaiyam.blogspot.com/?m=1


--------------------------------------------------------------------------------------------------------------


"முடிவுகள்: சிறுவாணிவாசகர் மையம் - "ரா.கி.ர நினைவுச் சிறுகதைப் போட்டி"

 

"சிறுவாணிவாசகர் மையம்" 

வழங்கும்

"ரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் 

போட்டி 2020" முடிவுகள் 

வணக்கம்.

சிறுவாணி வாசகர் மையம்-ரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டி-2020 முடிவுகள் இன்று வெளியாகின்றன.

கடந்த டிசம்பரில் வெளியிடுவதாக அறிவித்துக் காலதாமதமானதற்காக மன்னிப்பைக் கோருகிறோம்.

நன்றி.









பரிசு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

 

தி.சுபாஷிணி தலைவர்

ஜி.ஆர்.பிரகாஷ்

ஒருங்கிணைப்பாளர்

சிறுவாணி வாசகர் மையம்,கோவை

----------------------------------------------------------------------------------

அனைவருக்கும் வணக்கம்.

 சிறுவாணி வாசகர் மையம்- ரா.கி ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும்  போட்டி பற்றிய சில நினைவலைகள்......

****

கடந்த ஆண்டு நாஞ்சில்நாடன் விருது விழாவில் சிறுகதைப் போட்டி நடத்துவதற்கான யோசனையும், அறிவிப்பும் சொல்லப்பட்டாலும் covid-19 பரவல் காலத்தில் சிறுகதைப் போட்டி நடத்த வேண்டுமா என்று நாங்கள் தயக்கத்தில் இருந்தபோது,

 ரா.கி. ரங்கராஜன் அவர்களின் பேரர் ஆடிட்டர் சீனிவாசராகவன் நமது தாத்தா பெயரில் நடத்தலாம் எனவும் பரிசுத்தொகையைத் தானே தருகிறேன் எனவும் உற்சாகமூட்டினார். 

ஆலோசனைக் குழுவினரிடமும் எங்களை வழி நடத்திக்கொண்டிருக்கும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களிடமும் தெரிவித்த போது அவர்களும் மகிழ்வோடு ஒப்புக்கொண்டனர். இவ்வாறுதான் ரா.கி. ரங்கராஜன் பெயரில் சிறுகதைப் போட்டி நடத்த முடிவானது.

-------------------------------------

சிறுகதைப் போட்டி நினைவுகள் 2

சிறுவாணி வாசகர் மையம்-ரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டியை அறிவித்துவிட்டு சரியாக இரண்டரை மாதங்கள் (செப்டம்பர் 30 வரை) கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

நாங்கள் எதிர்பார்க்காத வகையில் தமிழகம் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் மொத்தம் 525 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வந்திருந்தன .கடைசி தேதிக்குப் பிறகும் சிலர் ஆர்வத்தால் கதைகளை அனுப்பிக் கொண்டிருந்தனர்.

வந்திருந்த அனைத்து மின்னஞ்சல்களுக்கும் உடனுக்குடனே பதில்கள் அனுப்பப்பட்டன.

--------------------------------------------

சிறுகதைப் போட்டி நினைவுகள் 3

சிறுகதைப் போட்டிக்கு வந்திருந்த 525 கதைகளில்  முதற்கட்டமாகப் பரிசீலிக்கப்பட்டுத் தேர்வு செய்தவை 220 கதைகள்.அவற்றை 

நடுவர்கள் எழுத்தாளர் லா.ச.ரா. சப்தரிஷி

எழுத்தாளர் வே. முத்துக்குமார்,

சீரிய வாசகர்  திருமதி சுஜாதா சஞ்சீவி மற்றும் அவரின் தந்தையாரும் மூத்த வாசகருமான திரு.மாதவன்(90),

சிறுவாணி வாசகர் மையத் தலைவர் திருமதி சுபாஷிணி 

திருமலை ஆகியோர் தீவிரமாக பரிசீலித்தும் விவாதித்தும் தேர்வு 

செய்தவை மொத்தம் 51 கதைகள்.

 ---------------------------------------------

சிறுகதைப் போட்டி நினைவுகள் 4

நடுவர்கள் தேர்வு செய்து தந்த 51 சிறுகதைகள் சிறுவாணி வாசகர் மையத்தின் ஆலோசகர் "சொல்வனம்" திரு.வ. ஸ்ரீநிவாசன் 

அவர்களிடம் மூன்றாம் கட்டத் தேர்வுக்காக அனுப்பப்பட்டதில் அவர் 

பரிசீலித்துத் தேர்வு செய்த கதைகள் மொத்தம் 25 .

 

இறுதியாக இந்த 25 கதைகள் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் 

அவர்களிடம் பரிசுக்குரிய  கதைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக 

வழங்கப்பட்டன. பல்வேறு எழுத்துப் பணிகளுக்கு இடையில் அவர்

 தேர்ந்தெடுத்துக் தரும் கதைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

 

சிறுவாணி  வாசகர் மையம் துவக்கப்பட்டு நான்கு வருடங்கள் நிறைவடையப் போகும் சமயத்தில் முதல்முறையாக சிறுகதைப் போட்டி நடத்துகிறது.ஆகவேதான் அந்த அனுபவங்களை விரிவாகப் பகிர்ந்துகொள்ளவே இந்தத் தொடர் பதிவுகள்.

--------------------------------------------

சிறுகதைப் போட்டி நினைவுகள் 5

சிறுவாணி வாசகர் மையம்-ரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப்போட்டி பற்றிய தகவலை முகநூல்,வாட்ஸ்அப் மூலம் பரவலாகக் கொண்டு சென்ற நண்பர்கள்,

போட்டியில் கலந்து கொண்ட அனைத்துப் படைப்பாளிகள்,பிரபல எழுத்தாளர்கள், வெளிநாடுவாழ் எழுத்தாளர்கள் மற்றும்  படைப்புகளை ஒவ்வொரு கட்டமாக பரிசீலித்து கொடுத்த நடுவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

 கடந்த வருடம் நாஞ்சில்நாடன் விருது விழாவில் போட்டி பற்றிய அறிவிப்பு வந்த உடனேயே திரு சீனிவாச ராகவன் மற்றும்  தாங்களும் இதில் பங்களிப்பதாக உறுதியளித்த  திரு. ஜான் பீட்டர்திரு. ரிஷபன் சீனிவாசன், திரு சத்தியப்பிரியன்  ஆகியோர்க்கு நன்றி.

 திரு சீனிவாச ராகவன் அனைத்துப் பரிசுகளுக்கான தொகைகளையும் அளித்து விட்டதால் மற்றவர்கள் அளித்த தொகைகள் சிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்ற கதைகள் நாஞ்சில்நாடன் விருது 2021 விழாவில் புத்தகமாக வெளிவரும் போது புத்தகத் தயாரிப்புச் செலவுகளுக்காக பயன்படுத்தப்படும்.

 சிறுவாணி வாசகர் மையம்-ரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். நன்றி

 ***

(பரிசு விவரங்கள்)

முதல் பரிசு 10,000/-,  இரண்டாம் பரிசு ரூ 7500/- ,மூன்றாம் பரிசு ரூ 5000/- ,

ஊக்கப்பரிசு 10 பேருக்குத் தலா ரூ1000 /-..

 

முந்தைய பதிவுகளின் லிங்க் கள்.

 

https://m.facebook.com/story.php?story_fbid=2971978259699406&id=100006617824711

 

https://m.facebook.com/story.php?story_fbid=2972539579643274&id=100006617824711

 

https://m.facebook.com/story.php?story_fbid=2973253979571834&id=100006617824711

----------------------------------------------------------------------------------------------------------------

சிறுவாணி வாசகர் மையம்-ரா.கி.ரங்கராஜன் 

நினைவுச் சிறுகதைப் போட்டி முடிவுகள்-2020

 

முதல் பரிசு ரூ10,000/-        தவிப்பூ

மகேஷ்குமார் செல்வராஜ்(ம.செ)

**************************************************************************************

இரண்டாம் பரிசு ரூ 7500/- வெயில் அணிந்தவன்-

இராம.பாலஜோதி

******************************************************************************************

மூன்றாம் பரிசு ரூ 5000/-     பெருந்தீ

மணிமாலா,சிங்கப்பூர்

 ***************************************************************

ஊக்கப்பரிசு 10+2 பேருக்குத் தலா ரூ1000 /-..

 

1.பாதுகா-மீரா செல்வக்குமார்

 2.அம்மாவின் கட்டில்-நந்து சுந்து

 3.தீர்ப்புகள்-வெ.சுரேஷ்

 4.பெண்ணானவள்-தமிழ்ச்செல்வி

 5.வெள்ளரி ஓடை-துரை அறிவழகன்

 6.கர்ண மந்திரம்-எஸ்.ஸ்ரீதுரை

 7.மெல்போமின்&டயோனிசஸ்-விஜயராவணன்

 8.கோட்டம்-ஆர்.கே.அருட்செல்வன்

 9.எங்கே என் நிம்மதி?-பூபதி பெரியசாமி

 10.கடைசிப் பிண்டம்-பாமதி நாராயணன்

 11.பஜகோவிந்தம்-ஜெ.பாஸ்கரன்

 12.ஸ்தம்பனம்-ந.கணேஷ்

-------------------------------------------------------------------------------------------------------------------------------


 





நிலை நிறுத்தல்-கி.ரா

 







கரிசல் மண்ணின் எழுத்துலகப் பேராளுமை

கி.ரா ஐயா அவர்களின்

"நிலை நிறுத்தல்"

காற்றின் திசை-சத்தியப்பிரியன்

 













காற்றின் திசை-

சத்தியப்பிரியன் சிறுகதைகள்

கிணற்றுக்குள் காவிரி-ஜெ.பாஸ்கரன்

 





வெளியீடு

கிணற்றுக்குள் காவிரி-

டாக்டர் ஜெ.பாஸ்கரன் சிறுகதைகள்

---------------------------------------------------------------------------------------------------------------------

டாக்டர் ஜெ. பாஸ்கரன்.

• சென்னை இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி- அதிக மதிப்பெண்கள் பெற்றதால் மத்திய அரசின் ‘நேஷனல் மெரிட் ஸ்காலர்ஷிப்’ கொடுக்கப்பட்டது.

• சென்னை மருத்துவக் கல்லூரியில் எம் பி பி எஸ், மற்றும் டிப்ளமா இன் டெர்மடாலஜி (தோல் மருத்துவம்)  , லண்டன் நேஷனல் ஹாஸ்பிடல் (QUEENS SQUARE), டிப்ளமா இன் கிளினிகல் நியூராலஜி (DIP IN CLINICAL NEUROLOGY) 

• 1982 முதல் தோல் சிறப்பு மருத்துவம் (இன்று வரை),  1992 முதல் நரம்பியல் சிறப்பு மருத்துவம் (இன்று வரை)

• 2002 முதல் மேற்கு மாம்பலம் சுகாதார மையத்தின் மெடிகல் சூப்பரிண்டெண்டெண்ட் , சென்னையில் தனியார் இயன்முறை (PHYSIOTHERAPY) கல்லூரிகளில் கடந்த 15 வருடங்களாக நரம்பியல் துறை வருகைப் பேராசிரியர் மற்றும் தேர்வாளர் (examiner).

• தமிழில் எழுதுவது மனதிற்குப் பிடித்தமானது. முகநூல், இணையம், வார, மாதப் பத்திரிகைகளில் அவ்வப்போது கதை, கட்டுரைகள் எழுதி வருவது. இதுவரை ஐந்து புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார். 

• சரும நோய்கள் (2008) , வலிப்பு நோய்கள் (2010), தலைவலியும் பாதிப்புகளும் (2014), அப்பாவின் டைப்ரைட்டர் (2016) , 'தேடல்' சிறுகதைத் தொகுப்பு (2017), 'அது ஒரு கனாக்காலம்' - கட்டுரைத் தொகுப்பு, ‘குவிகம்’ கடைசிப் பக்கம் - கட்டுரைத் தொகுப்பு.         

• தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறையினால், வலிப்பு நோய்கள் புத்தகம், மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் 2010 ஆம் ஆண்டின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள், ரூபாய் முப்பதாயிரம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிக் கௌரவித்தார்கள்.(2012)

• பவித்ரம் தொண்டு நிறுவனம் ‘சேவா சக்ரா’ விருது வழங்கிக் கௌரவித்தது. (2015). உரத்த சிந்தனை - வாசக எழுத்தாளர் சங்கம் ‘தலைவலி’ புத்தகத்துக்கு என்ஆர்கே விருதும் (சிறந்த கட்டுரைத் தொகுப்பு), ‘அப்பா என்னும் உன்னதமான உதாரண மனிதர்’ கட்டுரைக்கு  சிறந்த கட்டுரைக்கான விருதையும் வழங்கிக் கௌரவித்தது.(2014 - 2015).

• அப்பாவின் டைப்ரைட்டர் - வாழ்வியல் சார்ந்த கட்டுரைகள் கொண்டது. அவ்வப்போது முகநூல், இணைய தளம், மாதப் பத்திரிகைகள், சிற்றிதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. இப்புத்தகத்தை அமெரிக்காவின் 'உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம்' சிறப்பு விருது வழங்கிக் கவுரவித்தது.

• சிறுகதைகள் - கலைமகள், தினமணிக் கதிர், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம், உரத்த சிந்தனை இதழ்களில் வெளியாகின. கலைமகளின் கி.வா.ஜ நினைவுச் சிறுகதைப் போட்டியில் (2018) இவரது 'காப்பு' முதற்பரிசு பெற்றது. லேடீஸ் ஸ்பெஷல் சிறுகதைப் போட்டியில் (2018)  'நப்பின்னையாகிய நான்' ஆறுதல் பரிசு பெற்றது.

• நூற்றுக்கும் மேலான பொதுக் கட்டுரைகள், மருத்துவக் கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள், கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி, நம் உரத்த சிந்தனை, லேடீஸ் ஸ்பெஷல், இலக்கிய பீடம், மக்கள் முழக்கம், தினமணி.காம், விருட்சம்.இன், குவிகம்.காம், இன்றைய செய்தி.காம் மற்றும் முகநூல் தளங்களில் வெளியாகி உள்ளன. தமிழ் இந்துவில் தலைவலி, வலிப்பு நோய்கள் குறித்து தொடர்கள் 10 வாரங்களுக்கு வெளியிடப்பட்டன. மக்கள் குரல் (திருநெல்வேலி பதிப்பு) பத்திரிகையில், 'ஆட்டிசம்' மற்றும் நரம்பியல் கேள்வி - பதில்கள் வெளியாயின. 

• டெக்கான் க்ரானிக்கல் 'துரித உணவுகள்' பற்றிய கட்டுரையை வெளியிட்டது.  இசை, மூளை, மனம் பற்றிய ஆங்கிலக் கட்டுரைகளை 'நாத பிரம்மம்' என்ற இசை இதழ் வெளியிட்டது.

• பொதிகை, ராஜ், ஜெயா, கலைஞர், சங்கரா மற்றும் பெப்பர்ஸ் தொலைக்காட்சிகளில் மருத்துவம் மற்றும் இலக்கிய சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றது.

• சின்னத் திரையில் ....

 ராஜ் டிவி / ராஜ் டிவி ப்ளஸ்- ல் - மக்கள் மேடை, மருத்துவக் கேள்வி பதில் நிகழ்ச்சி (நேரடி ஒளிபரப்பு) , சங்கரா டிவியில் - டயல் a doctor (நேரடி ஒளிபரப்பு),  ஜெயா டிவியில் - ஹலோ டாக்டர்  (நேரடி ஒளிபரப்பு - இருமுறை).  சிறப்புத் தேன்கிண்ணம் (2016),  கலைஞர் டிவியில் - சந்தித்த வேளையிலே, இன்றைய விருந்தினர் (விடியல் வா நிகழ்ச்சியில்),

 பெப்பர்ஸ் டிவியில் - படித்ததில் பிடித்தது (2014),  வேந்தர் டிவியில் -உணவும் உணர்வுகளும் , நியூஸ் 7 சானல் - நேர்காணல்,   பொதிகை டிவியில் - எந்தையும் தாயும்- பேச்சு (2017). நூல் நயம் - 'தேடல்' புத்தகம் பற்றி உரையாடல் (2018), குட் நியூஸ் டிவியில் (shubvarththa) - வலிப்புகள், ஸ்ட்ரோக் பற்றிய பேச்சு.

• கைபேசி எண்: 09841057047.

-----------------------------------------------------------------------------------------------------

கிணற்றுக்குள் காவிரி....!

-(-ஜெ. பாஸ்கரன்.)

---------அன்புடன் ஆர்க்கே...!

வெளியீடு: சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம்,24 -5 சின்னம்மாள் வீதி, கே கே புதூர் கோவை 38.         விலை 160/- 

தொலைபேசி:ஜி ஆர் பிரகாஷ் 8778924880/9940985920

ஜெ. பாஸ்கரனின்   21 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. எழுத்துச் செல்வர் திருப்பூர் கிருஷ்ணனின் காத்திரமான முன்னுரை, கதைகளின் 

வளத்தையும், களத்தையும், திரட்சியையும் தீர்க்கமாகவே கோடிட்டு காட்டுகிறது. 

"தற்கால இலக்கியத்தில் தடம் பதிக்கும் சிறுகதைகள்" என அவரால் முன்மொழியப்படுகிற அச்சசல் அசல் வாழ்வுநிலை வெளிப்பாடு "கிணற்றுக்குள் காவிரி!".

நூலின் வடிவமைப்பும், ஓவியர் ஜீவாவின்  கண்கவர் அட்டைப்படமும் (சொக்க வைக்கும் அழகுச் செவ்வானம், கரைபுரளும் நதி, கரை கடக்க உதவக் காத்திருக்கும் பரிசல்கள், நதிக்கரை நாணல்) அதன் நுட்பமும் ஒரு நல்ல கதைகளின் அத்தாணி மண்டபத்தின் எழில் தோரணவாயில் போல அமைந்திருக்கிறது.

"வாழ்க்கைக்கு அடிப்படையான என்றும் நிலைபேறுடைய கருத்துக்களை வைத்துக் கதை எழுதுவது குறைந்து வரும் காலம் இது.சுவாரஸ்யத்திற்காக எழுதப்படும் பொழுதுபோக்கு கதைகளே மலிந்து விட்டன. நிரந்தரமான உண்மைகளை வைத்து எழுதும்போது அந்த இலக்கியம் சாகாவரம் பெற்றுவிடுகிறது"  என்கிற திருப்பூர் கிருஷ்ணனின் விமர்சனத்தராசில் 

ஹால்மார்க்  தரம் பக்கம் நிற்கிற சிறுகதைகள்.

ஒவ்வொரு சிறுகதையின்  தரம் உரைத்துப் பார்க்குமுன் அவற்றின் பொதுவான தன்மையைப்பற்றி குறிப்பிடுகையில் கதைமாந்தர்களும் கதைக்களமும் நடைமுறை வாழ்வியல் அனுபவங்களை ஒட்டியே அமைந்திருக்கிறது என்பது பரவலாக காணக்கிடக்கிறது. அதுவும் விக்ரமன் படங்களைப்போல எல்லோரும் நல்லவரே.  ஒரு எம் என் நம்பியார்வகை பாத்திரத்தைக்கூட கிணற்றுக்குள் காவிரிக்குள் பாதாளக்கரண்டி போட்டு தேட வேண்டியிருக்கிறது.

கதைகள் லேடீஸ் ஸ்பெஷல்,நவீன விருட்சம்,கலைமகள்,அமுதசுரபி,

கல்கி,தினமணிகதிர், வலம் இதழ்களில் வெளிவந்தவை.  சில பரிசுகள் பெற்றவை.

ஆசிரியரின் எழுத்துத்திறனின் வீச்சிற்கு அவரின் என்னுரையில் நல்ல முகாந்திரம் தென்படுகிறது. 


###"சிதம்பரம் தாண்டி, கொள்ளிடம் பாலத்தின்மேல் மெதுவாகச் செல்லும் ரயிலில் கன்னம் பிதுங்க, கீழே கரைபுரண்டோடும் காவிரியை விழிகள் அகலப் பார்த்துச்

சென்றிருக்கிறேன்.  சமீபத்தில் காவிரி புஷ்கரத்திற்கு சென்றபோது, ஆற்றுமணலில் ஆழ்துளையிட்டு, நீர் இறைத்து, தொட்டி போல் கட்டிய துலாக்கட்டத்தில் முதுகு நனையாமல் மூழ்கி எழுந்தபோது, கண்களில் மட்டும்

நீர் வழிந்தோடியது. "###


காவிரியின் கையறுகோல இன்றைய வறட்சியை இதைப்படிக்கிறபோது எவ்வளவு மனவலியுடன் வாசகனுக்குள் கடத்த முடிகிறது பாருங்கள். அதுதான் தொகுப்பின் அத்தனை கதைகளிலும் பரவிக்கிடக்கிறது. படிக்கிறபோது வாசகனையும் உணர்வு ரீதியாக உடன் பயணித்து லயிக்க வைக்கிறது.


எல்லாக்கதைகளிலும் புகுந்து புறப்படுவதைவிட சில கதைகளை பகிர்வது விமர்சன பார்வைக்கும் வாசகத் தேடலுக்கும் நல்ல வாய்ப்பாக அமையும் எனத் தோன்றுகிறது. 


அண்ணாசாமியும் ஜீரா ரசமும் சிறுகதை நல்ல ருசித்தேடலுக்கான நகைச்சுவை ருசி ரகத்தீனி. கடைசி வரி முத்தாய்ப்பில் இருக்கிறது அந்த உரைப்பின் ருசி.கதையை வாய்விட்டுச் சிரிக்காமல் கடப்பது கடினச்சவால். 


இடது கை சிறுகதையில் உளவியல், மனக்கிலேசம் , கூடவே மருத்துவப் பார்வை பங்களிப்பும் இருக்கிறது.  கதையின் த்வனி "இடது கை எந்த விதத்தில் வலதுகையைவிட குறைந்தது? வலது என்ன ஒசத்தி?" என்கிற கேள்வியில் தீர்க்கமாகிறது.


உடைந்த உண்டியல் சிறுகதை ஆதர்ச ஹீரோவை உபாசனை செய்யும் தீவிர ரசிகனைப் பற்றியது. நிழல் ஹீரோ யார் நிஜ ஹீரோ யார்  எனும் எளிய முடிச்சுதான். நடையால் தனித்துவம் பெறுகிறது.  கதையின் மொத்த புள்ளியும் ஹீரோவின் தாய் சொல்லும் "உனக்குத்தான் அவன் தலைவன். நான் அவனுக்கு வேண்டாத அம்மா" எனும் வ(வி)சனத்தில் குவிகிறது. 


எமெர்ஜென்சி ஒரு குறியீட்டுக்கதையின் கூறுகளை உள்ளடக்கியது.  வாங்கிய புதிய காருக்குள் அதன் சாவி எடுக்கப்படாமல் விடப்பட்டு பூட்டிக்கொண்ட காரினுள் சிக்குண்ட குழந்தையா,  மைல்ட் அட்டாக்  வந்த அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்க்கும் பரபர நொடிகளா, இரண்டும் சமகாலத்தில் எதிர்கொள்ள நேர்கிற நாயகன் ரமேஷ்.  Well handled knot.  இரண்டிற்குமான தீர்வு கதைக்கு மட்டுமல்ல நமக்கும் மனநிறைவைத் தருவது. 


"ஓ.." கதையின் களம் இந்தக்கால(!!??) ஒருபால் ஈர்ப்பை பூடகமாக சொல்ல முயல்கிறது.  கத்திமுனையில் நடப்பதுபோன்ற கவனத்துடன் கையாளப்பட்டிருக்கிறது.   ஷபானா ஆஸ்மி, நந்திதா தாஸ் நடித்து 1996ல் வெளிவந்த தீபா மேத்தாவின் "ஃபயர்"

போல வெளிப்படையாக இல்லாமல் வர்ணைனை, வசனக்குறிப்புகளால் தாமரை இலைத்தண்ணீர்போல பட்டும்படாமலும் -ஆனால் அதன் குணாம்சத்தை குறிப்பிடும் அர்த்தபுஷ்டியுடன் தொட்டுச்செல்வது ஆசிரியரின் எழுத்துவன்மைக்கு நல்ல உதாரணம்.


மனிதனுக்கும் இயற்கைக்குமான பிணைப்பை, தொடர்பை காலம் கடந்தும் நிறுவ விழைகிற "ஆவி" வந்த கதை. கதையில் காப்பாக வருகிற வேப்பமரம்தான் பிரதான பாத்திரம். உள்ளீடாக வரும் பார்வதி குமரேசனும் கதைக்குள் காப்புநிலையிலேயே பங்களிக்கிறார்கள். 


தொகுப்பின் தலைப்புக்கதை கிணற்றுக்குள் காவிரி மகாபுஷ்கரத்திற்கு போகும் சுந்தராம்பாள் பற்றியது. தான் வாழ்ந்த வாழ்க்கையையும் தன் உதிர வித்தான சீமாச்சுவையும் அவன் நொறுங்கிப்போன வாழ்நிலையையும் நினைந்து மறுகும் அவள் மனம். 


"நம்ம ஊர் கிணத்துக்குள்ள கங்கையே வரும்போது காவிரி வரமாட்டாளா என்ன?" என்கிற கும்பகோண, தஞ்சை மண் வாசனையில் கமழ்கிறது எழுத்தோட்டம்.


குங்குமம்-தொகுப்பின் முக்கியமான சிறுகதைகளில் ஒன்று. சமூக அடையாளத்தின் அங்கீகார ஏற்பு, மறுப்பு,மறுதலிப்பு இவற்றால் ஒரு மனம் படும் அவஸ்தைகளை மனித சந்நிதிகளில் தரிசனப்படுத்துகிறது.  தொகுப்பின் ஆகச்சிறந்த கதையென இதைக் குறிப்பிடத் தோன்றுகிறது. 


ஞானம் மெட்ராஸ் பாஷையில் வரிந்துகட்டுகிற (கீதோ) உபதேசக்கதை. பெரும்பாலும் உரையாடல்களில் நகர்கிற பாணியில் எழுதப்பெற்றிருக்கிறது. சுவாரஸ்யத்திற்கு சென்னைத் தமிழ் பேச்சு வழக்கு நன்கு உதவியிருக்கிறது. 


நப்பின்னையாகிய நான் பொருளியல் தேடும் மாடர்னிச உலகை நம்முன் முழுதாக உலவவிட்டு வேர்களைத்தேடும் வேல்யூ சிஸ்டத்தை ஜெனரேஷன் நெக்ஸ்ட் மூலம் மீட்டெடுத்து தாத்தாவை பெருமிதம் கொள்ள வைக்கும் நானில் நிறைவுறுகிறது.


பிரமை உரையாடல்களற்ற உத்தியில் எழுதப்பெற்றிருக்கிற கதை. அந்தக்காலத்தில் அதிக பயன்பாட்டில் கிராமப்புறங்களில் அதிகம் உலா வந்த டெஸ்க் கம் பெட்டி தன் கதையைச்சொல்கிற வடிவத்தில் செல்கிறது. ஒரு கட்டத்தில் வீடுகளின் கட்டமைப்பு மாற்றங்களில்   மரப்பெட்டி பொருந்தா பொருளாகிறது. வேண்டாத சாமான்கள் பட்டியலில் சேர்ந்து வெளியேற்றம் பெருகையில் அதற்குள்ளிருக்கும் மரமனது வருந்துவதாக காட்சியுறுகிறது.


விசும்பல்கள்- தனியாய் தவிக்க விதிக்கப்படுகிற திருமணமான பெண்ணின் வாழ்க்கையுள் நிகழ்கிற வாழ்நிலை, அவளின் வறுமை நிலையையும் அவளின் மீது விழுகிற ஆணாதிக்க ஆளுமை பார்வை அவஸ்தையும் அதனால் அவளுக்குள் ஏற்படுகிற மனக்குமைவும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. 


புறஉலகின் தாக்குதல்கள் அவளை தன் பிள்ளையிடம் சீறுவதில் அறச்சீற்றமுறுகிறது. 


"மானத்தை விற்று ஊர் சுற்றலா? போதும் நீ படித்தது. மூட்டை தூக்கி பிழைத்து உன் சம்பளத்தில் ஊர்  சுற்று " அறைகிறது நம் மனதுள். 

சில விசும்பல்கள் ஆறுதல்படுத்த முடியாதவைதான்.


மாரி கதை அதன் முடிவில் வருகிற மாதிரி வேற மாறி கதைதான். 


பொதுவாக கதைகள் அதனதன் கருப்பொருளையும் அதை கதையாக்கம் செய்யும் உருவாக்கத்திலும் ஒரு தேர்ந்த படைப்பாளியின் கூறுகளை வெளிப்படுத்துகிறது. 


குங்குமம், துணை ,தொலைத்தவன், விசும்பல்கள், முடிவு போன்ற கதைகள் குறுநாவல் அல்லது நெடுங்கதைக்கான நீட்சித்தன்மையை உள்ளடக்கி இருப்பது அந்தந்த கதைகளின் வலுவான வேர்களின் ஆழத்தை காட்டுகிறது. 


துவங்கிய உடனே வாசிப்பவனை கதைக்குள் ஈர்ப்பது, செரிவான அளவான காட்சிபடுத்துதல் மற்றும் உரையாடல்கள் எதிர்பாராத அல்லது வித்தியாசமான முடிவு முடிச்சு என்று ஆரோக்கியமான விஷயங்களாக சொல்லலாம். கதைமாந்தர்கள் கதைக்களத்துக்கு தகுந்த பாஷைகளில் உரையாடல் செய்வது கவனச்செதுக்கல் ரகம். 


கதை சொல்லும் நேர்க்கோட்டு பயணிப்பில் கதைகள் நாலைந்து பக்கங்களுக்கு தாண்டாமல் இருந்துவிடுவது முடிவு முனைப்பு சுவாரசியம்தான் என்றாலும் சில கதைகள் ஏழெட்டு பக்கங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டிருக்கலாமோ எனவும் தோன்றத்தான் செய்கிறது. 


கிணற்றுக்குள் காவிரி சிறுகதைத் தொகுப்பு,நெடுங்கதை, நாவல் என்று இன்னும் விஸ்தீரணமான கங்கா நதியாக பெருக்கெடுத்தோடுவதற்கான முன்னத்தி ஏராக இருக்கட்டும் என நூல் ஆசிரியரை வாழ்த்தலாம்.!

-------அன்புடன் ஆர்க்கே...!

-------------------------------------------------------------------------------------------------------------------------

#வாசிப்பு அனுபவம்

புத்தக வாசிப்பு அரிதான இன்றைய காலகட்டத்தில் நல்ல கதைகளைப்  படிப்பது கூட ஒரு பூர்வ ஜென்ம புண்ணியம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. நல்ல கதைகளை படிப்பது, கொளுத்தும் வெயிலில் திடீரென்று பெய்யும் குளிர் மழையைப்  போல. அந்த விதத்தில் இந்த இரண்டு நாளாக நான் மெதுவாகப் பொழியும், அழகான மழையில் ஆனந்தமாக நனைந்தேன். 


சிறுவாணி வாசகர் மையம் மாதம் ஒரு நூல் திட்டத்தில் இந்த மாதம் வெளியிட்ட டாக்டர் திரு J. பாஸ்கரன் அவர்கள் எழுதிய "கிணற்றுக்குள் காவிரி என்ற சிறுகதைத் தொகுப்புதான் எனக்கு இத்தகைய உணர்வைத. தந்தது. இன்னும் இரண்டு புத்தகங்கள் இருக்கிறது என்றாலும் இதை முதலில் கையில் எடுத்தேன். புத்தகத்தின் வடிவமைப்பு,  இந்தக் கதைகளைப் பற்றிய திரு .திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் முன்னுரை என்னைப் படிக்கத் தூண்டியது.


ஒரு வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும், சாதாரணமான சூழ்நிலைகளில் ஏற்படும் அசாதாரணமான சம்பவங்களை தைரியமாக எதிர் கொள்வது எப்படி ? என்பதை எளிய மனிதர்கள் இதில் நமக்கு கற்றுக்கொடுக்கிறார்கள்.ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர்கள் எடுக்கும் அற்புதமான முடிவுகள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. கலங்காத மனம், இது இப்படித்தான் என்று ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்க்கச் சொல்லித் தருகிறது. போதனை என்று இல்லாமல் இயல்பான வார்த்தைகளே வாழ்க்கையின் ரகசியத்தை நமக்கு கற்றுக் கொடுத்து விடுகிறது. அசத்துகிறது ஒவ்வொரு கதைகளும்.


ஒவ்வொரு கதைகளும் மிகச் சிறப்பாக இருந்தாலும் ஒரு மூன்று கதைகள் மட்டும் எனக்குள் சுற்றிக்கொண்டிருக்கிறது அதில் ஒன்று "கிணற்றுக்குள் காவிரி"


சுந்தராம்பாள் பாட்டியிடம் தான் எத்தனை ஒரு தீர்மானம்? யாரும் இல்லாமல் ஒற்றையாக வாழ்ந்தாலும், வழிதவறிய தன் மகனை ஏற்றுக்கொள்ள அவள்  மனம் துணியவில்லை. . மாயவரத்தில் அன்னதான கூடத்தில் குடிகாரனாகத் தன் மகனைப் பார்த்த வேதனை அவளுக்குள் இருந்தாலும், அவனை ஒதுக்கி விட்டு வந்து விடுகிறாள். அவனைத்  தலை முழுகும் ஆவேசமும் பாட்டியிடம் இருக்கிறது. அதே சமயம் பெற்ற வயிறும் குலுங்குகிறது. ஒரு குடம் தண்ணீரை தலையில் ஊற்றிக் கொண்டு வந்தவள்  அவனுக்காக தூணுக்கடியில் அலர்ந்து ஓவென்று பாட்டி அழும்போது. நமக்கும் ஒருதுளி கண்ணீர் துளிர்க்கிறது.


அடுத்து "துணை".வாழ்வில் நம்மைத் தவிர நமக்கு வேறு யாரும் துணை இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக நமக்கு உணர்த்துகிறது. துணை என்று எதுவுமே இல்லை. இந்த உலகில்  நீயோ நானோ நிரந்தரமில்லை.  எனவே நிரந்தரமானவற்றை நேசிப்பது தான் வாழ்வின் ஆதார சுருதி என்ற அந்த தாத்தா கூறுவதுபோல்  இயற்கையும் நமக்குள் இருக்கும் மனிதநேயமும் தான் இந்த வாழ்க்கையில் நமக்குத் துணை.  இயற்கையை நேசிப்பதும் மனித நேயத்துடன் நடமாடுவதும்தான் வாழ்வதக்கான அர்த்தத்தைத் தருகிறது எனப் பளிச்சென்று கூறுகிறது இந்தக் கதை. என் மனதில் தங்கி விட்ட வார்த்தைகள்.


அடுத்து தன்னுடைய கதையைச் சொல்லும் சாய்வு மேஜை. "பிரமை". ஸ்கூல் படிக்கும்போது என்னிடமும் இப்படி ஒரு மேஜை இருந்தது. கல்லூரி வரை இருந்தது. அதில் அமர்ந்து எழுதிதான் முதல் கதை ஆனந்த விகடனில் வந்தது. எனக்கு ரொம்ப ராசியான மேஜை. ஒரு காலத்தில் உளுத்துப் போய் ,உடைந்து போய், ஊரை காலி செய்து வரும்போது அதையும் தூக்கி போட்டு விட்டு வந்தோம். இப்படித்தான் காலப்போக்கில் நம்மிடம் இருப்பதெல்லாம் மறைந்துவிடுகிறது. ஆனால் அது தரும் இனிமையான நினைவுகள் மட்டும் நம்மை விட்டுப் போவதில்லை. அதை மிக அழகாகக்  கூறியது மேஜை பெட்டி. மரத்திற்கும்  உணர்வுகள் உண்டு. உண்மைதான். நம் மனதின. வடிகால் அல்லவா சில ஜடப் பொருள்கள்.


நிறைவான கதைகளைப் படித்த திருப்தி மனதிற்குள்.  நான் இவரின் கட்டுரைகளைப் படித்து இருக்கிறேன். முகநூலிலும் சங்கப்பலகையிலும்  எழுதும் பதிவுகளையும் படித்திருக்கிறேன். அனைத்திலும் ஒரு ஆழ்ந்த, சமூகத்தின் மீதான ஆதங்கமும், சின்ன எள்ளலும், லேசான நகைச்சுவை இழையோடி  படிப்பவர்களைத் தனக்குள் இழுத்துக் கொள்ளும். அந்த வகையில் கிணற்றுக்குள் காவிரி நம்மை ஜிலுஜிலுவென்று இழுத்துக் கொள்கிறது.


எளிய,தெளிவான எழுத்து. படிப்பவர்களை அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது.. திருப்பூர் கிருஷ்ணன் சார் சொல்லுவது போல் ஒரு மருத்துவரின் படைப்பு ஆரோக்கியமான படைப்பாகத் திகழ்கிறது. ஒவ்வொரு கதைகளும் சிறப்பான தளத்தில் அமைந்திருக்கிறது. மனதில் தங்கியவை என்றால் புத்தகம் முழுவதையும் சொல்லலாம். காப்பு,விருது,ஓ, என்று 21 கதைகள். நான் சொல்வதை விட வாங்கிப் படியுங்கள். கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு, அதன் வாசனையோடு படிக்கும் சுகம் வேறு எதிலும் கிடையாது. படித்து, ரசிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு.

ஜி ஏ பிரபா Fb

-------------------------------------------------------------------------------------------------------------

"தேனருவியின் ருசியனுபவம் » Vimarsanam Web"

  http://vimarsanam.in/siruvani-sirukathaikal-2020-review/

-------------------------------------------------------------------------------------------------------------

















கலைமகள் ஜூன் 2021 இதழில்.....




தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் பாரதி வண்ணப்படம் -

 



11.12.2021

பாரதியார் பிறந்தநாளான இன்று முதல் சிறுவாணி வாசகர் மைய உறுப்பினர்கள் மற்றும் 2000 பேருக்கு ஓவியர் ஜீவா வரைந்த பாரதி வண்ணப்படம் (A4)வழங்கவுள்ளோம்.

 தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் பாரதியார் படம் இருக்கவேண்டுமென்ற நோக்கத்தில் எங்களால் இயன்ற சிறு முயற்சி இது.

 இந்நோக்கம் உருவாகக் காரணமான திரு.சோ.தர்மன் ஐயா அவர்களின் சிலநாட்களுக்கு முந்தைய பதிவு கீழே.

--------------------

"என் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தும் போதே கண்ணில் தெரியும் மகாகவி பாரதியாரின் போட்டோ.வெள்ளிக் கிழமை தோறும் என் மனைவி பூ போடுவாள்.1980லிருந்து இருக்கிறது.தற்போது வீட்டைக் கொஞ்சம் மாற்றியமைத்தேன்.ஆகவே புதியதாக ஒரு போட்டோ வாங்கி மாட்டலாம் என்று கோவில்பட்டியிலுள்ள அனைத்து போட்டோ பிரேம் கடைகளிலும் கேட்டேன்.எங்கேயுமில்லை.படம் வாங்கி வாருங்கள் பிரேம் பண்ணித் தருகிறோம் என்று சொன்னார்கள்.எல்லா புத்தகக் கடைகளிலும் கேட்டேன்.பாரதியார் படமில்லை.எட்டயபுரத்தில் கிடைக்கும் என்றார்கள்.அங்கேயுமில்லை.

      நேற்று திருநெல்வேலியில் போட்டோ பிரேம் கடை முழுவதும் அலைந்தும் கிடைக்கவில்லை.

கடைசியில் ஒரு ஸ்டேஷனரி கடையில் இந்த ஒரு படம் மட்டுமே கிடைத்தது.வாங்கி போட்டோகடையில் கொடுத்து லாமினேஷன் பண்ணி வாங்கினேன்.

     எல்லா போட்டோ பிரேம் கடைகளிலும் விதவிதமான போஸ்களில் நிறைந்து கிடக்கின்றன ஜாதித்தலைவர்கள் அரசியல் தலைவர்களின் போட்டோக்கள்.அவற்றில் எழுதியிருக்கும் வாசகங்களைப் படித்தால்  தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.அடைமொழிகளும் பட்டங்களும் அடேங்கப்பப்பா.

       கடைக்காரர் சொன்னார்.பாரதி படமெல்லாம் விற்காது சார்.யார் வாங்குவாங்க.உங்களை மாதிரி வாத்தியார்மாருங்க யாராவது வாங்கி பள்ளிக்கூடத்தில் மாட்டுவாங்க என்றார்.

 ஒரு மகாகவி.

சுதந்திரப்போராட்டத் தியாகி.

ஜெயில்தண்டனை, தலைமறைவு வாழ்க்கை.

எட்டயபுரம் மன்னர் கொடுத்த ராஜ வாழ்க்கையை உதறிவிட்டுப் போனவர். 

சாஸ்த்திர சம்பிரதாயங்களை நிராகரித்த முற்போக்குவாதி..

பிராமணன் என்று ஏனையோரும் நிராகரிக்கிறார்கள்.ஆனால் காலம் பாரதியை ஒரு போதும் நிராகரிக்காது.

தமிழ் வாழ்க.

நன்றி- திரு சோ.தர்மன்,ஓவியர் ஜீவா,




தன்னை வரைந்தவரிடம் சென்று சேர்ந்த பாரதி.
(ஓவியர் ஜீவா அவர்கள்)

------------------------------------------------------------------------------------------------------------------------

எல்லா உயிரும் இன்பமெய்துக.
எல்லா உடலும் நோய்தீர்க.
எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க.
'தான்வாழ்க.
அமுதம் எப்போதும் இன்ப மாகுக.
 

பாரதி  (காட்சி)


                                                                

பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர்,முனைவர் சி.சித்ரா அவர்களிடம் வழங்கிய 

சித்திர பாரதியும், "சித்திர"பாரதியும்.

------------------------------------------------------------------------------------------------------

                      "அனைவர் இல்லத்திலும் பாரதி படம்"

என்கிற பேராசை மட்டுமல்லாது "பெரிதினும் பெரிது" கேட்கச் சொன்ன பாரதியின் படத்தை எங்களது சிறு முயற்சியாக சிறுவாணி உறுப்பினர்கள் மற்றும் பாரதி அன்பர்களுக்குக் கொடுக்கத் துவங்கிவிட்டோம்.

 

நன்றி-

ஓவியர் ஜீவா,விலையின்றி அச்சிட்டுக் கொடுத்த திரு.ரவி அவர்கள்.

 

மேலும் விவரங்களுக்கு-

https://m.facebook.com/story.php?story_fbid=2958842047679694&id=100006617824711

-------------------------------------------------------------------------------------------------------

மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி

டாக்டர் உ.வே.சாமிநாதையர் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள்                                                                                                           

 6     சுப்பிரமணிய பாரதியார்

                                                                             பிறந்ததேசம், பழகும் மனிதர்கள் முதலிய தொடர்புகளால் ஒருவருடைய வாழ்க்கையில் சில பழக்கங்கள் அமைகின்றன. ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் எட்டையபுரத்திற் பிறந்தவர். இவர் பிறந்த பாண்டி நாடு தமிழுக்கு உரிய நாடு. தமிழ் நாடென்று பழைய காலத்தில் அதற்குத்தான் பெயர். கம்பராமாயணத்தில் ஆஞ்சநேயர் முதலியவர்கள் சுக்கிரீவனால் தென்தேசத்துக்கு அனுப்பப்பட்ட போது அங்கே உள்ளவற்றைச் சுக்கிரீவன் சொல்லுவதாக உள்ள பகுதியொன்றுண்டு; அங்கே ஒரு பாட்டில்,

தென்றமிழ்நாட் டகன்பொதியிற் றிருமுனிவன்

                தமிழ்ச்சங்கம் சேர்கிற் பீரேல்

என்றுமவ ணுறைவிடமாம்

என்று அவன் கூறியதாக இருக்கிறது; “நீங்கள் பாண்டிய நாட்டை அடைந்தால், அங்கே உள்ள பொதியில் மலைக்கருகில் செல்லும் பொழுது போகும் காரியத்தை மறந்துவிடக்கூடாது; ஏனென்றால் அம்மலையில் அகத்தியருக்குரிய தமிழ்ச் சங்கத்தை அணுகினால் தமிழ் நயத்தில் ஈடுபட்டுவிடுவீர்கள்என்று அவன் சொன்னதாகத் தெரிகிறது. இதனால் பாண்டி நாட்டின் பெருமை வெளிப்படுகிறதல்லவா?

பாரதியார் பிறந்த எட்டையபுர ஸமஸ்தானத்தில் பல வித்துவான்கள் இருந்தார்கள். அந்த ஸமஸ்தானத்து வித்துவானாகிய கடிகைமுத்துப் புலவருடைய பெருமையை யாரும் அறிவார்கள். அவருடைய மாணாக்கருள் ஒருவராகிய உமறுப் புலவ ரென்னும் முகம்மதிய வித்துவான் முகம்மத் நபியின் சரித்திரமாகிய சீறாப் புராணத்தை இயற்றியிருக்கிறார். அந்நூல் ஒரு தமிழ்க் காவியமாக இருக்கிறது. எட்டையபுரத்தில் அங்கங்கே உள்ளவர்கள் தமிழ்ப் பாடல்களைச் சொல்லியும் கேட்டும் இன்புற்று வருபவர்கள். இதனால் பாரதியாருக்கு இளமை தொடங்கியே தமிழில் விருப்பம் உண்டாயிற்று. அது வர வர மிக்கது.

இவர் இளமையில் ஆங்கிலக் கல்வி கற்றார். தம்முடைய தமிழறிவை விருத்தி செய்துகொள்ளும் பொருட்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்திற் சேர்ந்து சில காலம் படித்தார். சிறு பிராய முதற்கொண்டே இவருக்குச் செய்யுள் இயற்றும் பழக்கம் உண்டாயிற்று. அக்காலத்திலேயே தேசத்தின் நிலைமை இவருடைய மனத்திற் பதிந்தது. தெய்வத்தினிடத்திலும், தேசத்தினிடத்திலும், பாஷையினிடத்திலும் அன்பில்லாதவர்களைக் கண்டு இவர் மிக வருந்தினார். முயற்சியும் சுறுசுறுப்பும் இல்லாமல் வீணாகக் காலத்தைப் போக்குபவர்களை வெறுத்தார். புதிய புதிய கருத்துக்களை எளிய நடையில் அமைத்துப் பாடவேண்டுமென்ற உணர்ச்சி இவருக்கு வளர்ந்து கொண்டே வந்தது.

இவர் சிலகாலம் சேதுபதி ஹைஸ்கூலில் பண்டிதராக இருந்ததுண்டு. பிறகு, சென்னைக்கு வந்தார். இங்கே ஸ்ரீ

ஜி. சுப்பிரமணிய ஐயர் இவரிடத்தில் ஈடுபட்டுச் சுதேசமித்திரன் ஆசிரியர்களுள் ஒருவராக இருக்கச் செய்தார். கட்டுப்பாடான வேலைகளைச் செய்வதிற் பிரியமில்லாத பாரதியார் அந்த வேலையில் அதிக காலம் இருக்கவில்லை.

சென்னையில் இவர் இருந்த காலத்தில், நான் இவரோடு பலமுறை பழகியிருக்கிறேன். பிரசிடென்ஸி காலேஜில் வாரந்தோறும் நடைபெறும் தமிழ்சங்கக் கூட்டத்துக்கு வருவார்; பேசுவார்; புதிய பாட்டுக்களைப் பாடுவார். வருஷ பூர்த்திக் கொண்டாட்டங்களில் புதிய செய்யுட்கள் செய்து வாசிப்பார். ஒரு முறை, வி. கிருஷ்ணசாமி ஐயர் தலைமையில் அச்சங்கத்தில் ஜி.ஏ. வைத்தியராமையர் பேசினார். கிருஷ்ணசாமி ஐயருடைய தமிழபிமானமும், தமிழ் வித்துவான்களை ஆதரிக்கும் இயல்பும் தெரியாத பலர், ‘இவருக்குத் தமிழ்ப் பாஷையில் பழக்கம் இல்லையே; தமிழில் என்ன பேசப் போகிறார்?’ என்று நினைத்தனர். அவரோ, “தமிழைப் பற்றி அதிகமாகப் பேசுவானேன்; உலகத்திலுள்ள பல பாஷைகளில் மொழிபெயர்க்கப்பட்டு விளங்கும் திருக்குறளைத் திருவள்ளுவர் இயற்றிய பாஷை இந்தப் பாஷை. நவரஸமும் பொருந்திய இராமாயணத்தைக் கம்பர் செய்த பாஷை இது. எல்லோருடைய மனத்தையும் கரைத்து உருக்கித் தெய்வ பக்தியை உண்டாக்கும் தேவாரத்தை நாயன்மார்கள் இயற்றிய பாஷை இது. ஆழ்வார்கள் திவ்வியப் பிரபந்தத்தைப் பாடிய பாஷை இதுஎன்று உத்ஸாகத்தோடு பிரசங்கம் செய்தார். கேட்ட யாவரும் ஆச்சரியமுற்றார்கள். அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த பாரதியார், அந்தப் பிரசங்கத்தில் மிகவும் ஈடுபட்டார். பின்பு கிருஷ்ணசாமி ஐயர் பாஷையின் பெருமையையும், தேசத்தின் பெருமையையும் வெளிப்படுத்தி யாவருக்கும் விளங்கும்படியான  பாட்டுக்களைப் பாடியனுப்ப வேண்டுமென்று என்னிடம் சொன்னார். எனக்கு அவகாசம் இல்லாமையால் வேறொருவரை அனுப்பினேன். அவருடைய பாட்டுக்கள் அவருக்குத் திருப்தியை அளிக்கவில்லை. பிறகு பாரதியாரே அவருடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்தார். ஸ்ரீ கிருஷ்ணசாமி ஐயரது பிரசங்கத்தில் இருந்த கருத்துக்களே பாரதியார், “கம்பன் பிறந்த தமிழ் நாடுஎன்பது போன்ற பகுதிகளை அமைத்துப் பாடுவதற்குக் காரணமாக இருந்தன.

தேசத்தின் பெருமையை யாவரும் அறிந்து பாராட்டும் படியான பாட்டுக்களைப் பாடவேண்டுமென்ற ஊக்கம் இவருக்கு நிரம்ப இருந்தது. அதனால் இவர் பாடிய பாட்டுக்கள் மிகவும் எளிய நடையில் அமைந்து படிப்பவர்களைத் தம்பால் ஈடுபடுத்துகின்றன. இவர் உண்மையான தேச பக்தியுடன் பாடிய பாட்டுகளாதலின் அவை இவருக்கு அழியாத பெருமையை உண்டாக்குகின்றன.

பாரதியார் தேசீயப் பாட்டுக்களைப் பாடியதோடு வேறு பல துறைகளிலும் பாடியிருக்கிறார். இசைப் பாட்டுக்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார். இவர் சங்கீதத்திலும் பழக்கம் உடையவர்.

கவிகளின் தன்மையை உபமானமாக அமைத்து ஒரு புலவர்,

கல்லார் கவிபோற் கலங்கிக் கலைமாண்ட கேள்வி

வல்லார் கவிபோற் பலவான்றுறை தோன்ற வாய்த்துச்

செல்லாறு தோறும் பொருளாழ்ந்து தெளிந்து தேயத்

தெல்லாரும் வீழ்ந்து பயன்கொள்ள இறுத்த தன்றே

என்று சொல்லியிருக்கிறார். அதற்கேற்ப விளங்குபவை இவருடைய செய்யுட்கள். இப்பாட்டில், “தேசத்து எல்லாரும் வீழ்ந்து பயன் கொள்ளஎன்றது இவருடைய பாட்டுக்களுக்கு மிகவும் பொருத்தமுடையதாகும்.

பாட்டுக்களின் பாகம் ஐந்து வகைப்படும். அவை நாளிகேர பாகம், இக்ஷு பாகம், கதலீ பாகம், திராக்ஷா பாகம், க்ஷீர பாகம் என்பனவாம். நாளிகேர பாக மென்பது தேங்காயைப் போன்றது. தேங்காயில் முதலில் மட்டையை உரிக்க வேண்டும்; பிறகு ஓட்டை நீக்க வேண்டும்; அதன் பிறகு துருவிப் பிழிந்து வெல்லம் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இந்த வகையிலுள்ள பாட்டுக்கள் சில உண்டு. அதைப் பாடுபவர்கள் தம்முடன் அகராதியையும் எடுத்துக் கொண்டு போக வேண்டும். சில சமயங்களில் அவர்களுக்கே தாங்கள் செய்த பாட்டுக்களுக்கு அர்த்தம் விளங்காமற் போய்விடும்.

இக்ஷு பாக மென்பது கரும்பைப் போன்றது. கரும்பைக் கஷ்டப்பட்டுப் பிழிந்து ரஸத்தை உண்ணவேண்டும். கதலீ பாக மென்பது வாழைப் பழத்தைத் தோலுரித்து விழுங்குவது போலச் சிறிது சிரமப்பட்டால் இன்சுவையை வெளிப்படுத்துவது. திராக்ஷா பாகம் முந்திரிப் பழத்தைப் போல எளிதில் விளங்குவது. க்ஷீர பாகம் அதனிலும் எளிதில் விளங்குவது; குழந்தை முதல் யாவரும் உண்பதற்குரியதாகவும், இனிமை தருவதாகவும், உடலுக்கும் அறிவுக்கும் பயன் தருவதாகவும் இருக்கும் பாலைப்போல இருப்பது. பாரதியாருடைய கவிகள் க்ஷீர பாகத்தைச் சார்ந்தவை. சிலவற்றைத் திராக்ஷா பாகமாகக் கொள்ளலாம்.

ஆங்கிலம், வங்காளம் முதலிய பாஷைகளிற் பழக்கமுடையவ ராதலால் அந்தப் பாஷைகளிலுள்ள முறைகளை இவர் தம் கவிகளில் அமைத்திருக்கிறார். இவருடைய கவிதைகள் ஸ்வபாவோக்தி யென்னும் தன்மைநவிற்சி யணியை யுடையவை. பழைய காலத்தில் இருந்த சங்கப் புலவர்கள் பாடல்களில் தன்மை நவிற்சிதான் காணப்படும். அனாவசியமான வருணனைகளும் சொல்லடுக்குகளும் கவியின் ரஸத்தை வெளிப்படுத்துவனவல்ல. சில காலங்களில் சில புலவர்கள் தங்கள் காலத்திலிருந்த சில ஜமீன்தார்கள், பிரபுக்கள் முதலியவர்களுடைய வற்புறுத்தலுக்காக அனாவசியமான வருணனைகளை அமைத்ததுண்டு.

பாரதியாருடைய பாட்டுக்களில் தெய்வ பக்தியும் தேச பக்தியும் ததும்புகின்றன. தனித்தனியாக உள்ள பாட்டுக்கள் இயற்கைப் பொருள்களின் அழகை விரித்தும், நீதிகளைப் புகட்டியும், உயர்ந்த கருத்துக்களைப் புலப்படுத்தியும் விளங்குகின்றன.

இவருடைய வசனத்தைப்பற்றிச் சில சொல்ல விரும்புகிறேன். பாட்டைக் காட்டிலும் வசனத்திற்குப் பெருமை உண்டாயிருப்பதன் காரணம், அது பாட்டைவிட எளிதில் விளங்குவதனால்தான். பாரதியாருடைய பாட்டும் எளிய நடையுடையது; வசனமும் எளிய நடையுடையது. வருத்தமின்றிப் பொருளைப் புலப்படுத்தும் நடைதான் சிறந்தது. பாரதியாருடைய வசனம் சிறு வாக்கியங்களால் அமைந்தது; அர்த்தபுஷ்டி யுடையது. இவருடைய கவிகளின் பொருள் படிக்கும்போதே மனத்துக்குள் பதிகின்றது. வீர ரஸம், சிருங்கார ரஸம் ஆகிய இரண்டும் இவருடைய பாட்டுக்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. பாரதியார் அழகாகப் பேசும் ஆற்றல் வாய்ந்தவர்.

இவருடைய பாட்டுக்கள் எல்லோருக்கும் உணர்ச்சியை உண்டாக்குவன; தமிழ்நாட்டில் இவருடைய பாட்டை யாவரும் பாடி மகிழ்வதனாலேயே இதனை அறிந்து கொள்ளலாம். கடல் கடந்த தேசங்களாகிய இலங்கை, பர்மா, ஜாவா முதலிய இடங்களிலும் இவருடைய பாட்டுக்கள் பரவியிருக்கின்றன. அங்கே உள்ளவர்களில் சிலர் இவரைப் பற்றி எழுத வேண்டுமென எனக்குக் கடிதங்கள் எழுதியதுண்டு. மணவைமன் கூத்தன் வகுத்தகவி, தளைபட்ட காலுட னேகட லேழையுந் தாண்டியதேஎன்று ஒரு புலவருடைய கவியைப் பற்றி வேறொரு புலவர் பாடியிருக்கிறார். ஸ்ரீ ராமனுடைய கவியாகிய ஆஞ்சநேயர் ஒரு கடலைத்தான் தாண்டினார்; மணவைக் கூத்தன் கவியோ ஏழு கடல்களையும் தாண்டிவிட்டது. ஸ்ரீ ராமனுடைய கவி தளையில்லாமல் தாண்டியது; அங்ஙனம் செய்தது ஆச்சரியமல்ல. இந்தப் புலவர் கவியோ, தளையுடைய காலோடு ஏழு கடலைத் தாண்டியது என்கின்றார். தளை யென்பதற்கு விலங்கென்றும் கவிக்குரிய லக்ஷணங்களுள் ஒன்றென்றும் பொருள். இந்தப் பாட்டுக்கு இப்போது இலக்கியமாக இருப்பவை பாரதியாருடைய கவிகளாகும்.

பாரதியார் தாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், ஜனங்களுக்கு நன்மை உண்டாக வேண்டுமென்ற கொள்கையை யுடையவர். தைரியமுடையவர். இவருடைய புகழ் தமிழ்நாட்டின் புகழாகும்.

1936இல் அகில இந்தியக் காங்கிரஸின் பொன்விழாவில்

சென்னைக் காங்கிரஸ் மண்டபத்தில் பாரதியாருடைய

படம் திறக்கப்பட்டபோது செய்த பிரசங்கம்.

-------------------------------------------------------------------------------------------------------------------

பாரதியார் இறந்தபிறகு 34 ஆண்டுகள் செல்லம்மா உயிர் வாழ்ந்து இருக்கிறார். அந்தக் காலகட்டத்தில்தான் தனது இரண்டாவது மகள் சகுந்தலாவிற்குத் திருமணம் செய்து வைத்தார். பாரதி ஆஸ்ரமத்தை உருவாக்கி அவரது பாடல்களின் முதல் தொகுதியை புத்தகமாக வெளியிட்டார். தனது இரண்டாவது மகளுக்கு கடன் வாங்கித்தான் திருமணம் செய்து வைத்தார். பாரதி பிரசுராலயம்நிறுவனத்தை நான்காயிரம் ரூபாய்க்கு விற்று, மகள் திருமணக் கடனுக்காக 2,500 ரூபாயை அடைத்து விட்டார். இறுதியாக, பாரதியார் கவிதைகளை விற்று வெறும் 1,500 ரூபாய் மட்டுமே செல்லம்மா பெற்றார்.கயிற்றுக் கட்டிலில் படுத்தபடுக்கையாக, சுயநினைவு இல்லாத சூழ்நிலையிலும் வாயைத் திறந்தால் பாரதி பாட்டு... குறிப்பாக கண்ணன் பாட்டு வரும்.

"திண்ணை வாயில் பெருக்க வந்தேனெனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்".

இந்த வரிகளை திரும்ப, திரும்பச் சொல்லி வந்தார்.பாரதியின் எழுத்துக்களை பிரசுரமாக்கிய செல்லம்மா முன்னுரை யில் எழுதினார்:

‘‘தமிழ்நாட்டு மக்களே, நான் படித்தவளல்ல, இந்த நூலுக்கு முகவுரை எழுதவும் நான் முன்வரவில்லை. அதற்கு எனக்கு சக்தியும் இல்லை.அவர் உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச

கைங்கரியத்துக்காக, முழுமனத்துடன் அர்ப்பணம் செய்தார். நமது நாடு இன்னது, நமது ஜனங்கள் யாவர், நமது சக்தியும், உணர்ச்சியும் எத்தகையது? இவைகளைப் பற்றிய விவகாரங்களும்,சண்டைகளும்தீர்மானங்களும் அவர் ஜீவனுக்கு ஆதாரமாக இருந்தன.

எதுவும் யோசித்தாக வேண்டியதில்லை. திடீர் திடீர் என்று அவருடைய புதிய எண்ணங்கள், புதிய புதிய பாட்டுக்கள், புதிய புதிய கொள்கைகள் என் இரு காதுகளும் மனமும் இருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன். இந்த பாக்கியத்தை மறுபடி பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் பெறத் தயாராக இருக்கிறேன். அவரது தேகத்தில் ஜீவன் போய்விட்டது. அவரது ஜீவனுக்கு ஆதாரமாக இருந்த பாரத மாதாவின் ஜீவசக்தி என்றென்றும் அழியாதது. தமிழ்நாடு உள்ளளவும், தமிழ்நாட்டில் ஒரு மனிதனோ, குழந்தையோ தமிழ் பேசிக் கொண்டிருக்குமளவும் பாரதியின் மூலமாக நமக்குக் கிடைத்த ஜீவசக்தி என்றென்றும் நிலைத் திருக்கும் என்று என் இருதயம் சொல்கிறது. இதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல வந்தேன். நீங்கள் நீடூழி வாழ்க.பாரதியாரின் நூல்கள் முழுமையும் அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை என் ஜீவன் உள்ளவரை நான் வகித்து பிற்பாடு தத்தம் செய்துவிட்டுப் போகத் தீர்மானித்திருக்கிறேன்.

வந்தேமாதரம்.’’

 ----------------------------------------------------------------------------------------------------

உயர்திரு பாரதியார்

(ஞானக்கூத்தன்)

 

சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்

ஆடினார் இளம் பெண்கள் இருவரேதோ

பாட்டுக்கு. எவெரெழுதித் தந்தா ரந்தப்

பாட்டென்று நான் கேட்டேன், உம்மைச் சொன்னார்

சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்

சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்

எவெரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த

முகம் துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்

மணியறியாப் பள்ளிகளில் தண்டவாளத்

துண்டொன்று மணியாகத் தொங்கல் போலக்

கவிஞரில்லாத் தமிழகத்தில் எவெரெல்லாமோ

கவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு

அணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும்

கலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப்

பிறகவிஞர் குரல் மயங்கிக் கேட்குமின்னும்

நீர் மறைந்தீர் உம் பேச்சை முடித்துக் கொண்டு.

 ------------------------------------------------------------------------------------------------------------

1936-ல் உ.வே.சா. ஒரு நூலுக்கு எழுதிய அணிந்துரையில், ‘எட்டயபுரம்ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியாரை உலகம் நன்கறியும். பாரதியென்றால் அவரேயென்று குறிப்பிடும் பெருமை வாய்ந்தவர் அவர். பெரியோர் முதல் பாலர் ஈறாக எல்லோராலும் நன்கறியப்பட்ட தகுதிவாய்ந்தவர். எனக்கு மிக்க பழக்கமுள்ளவர்’ எனத் தனக்கும் பாரதிக்குமான தொடர்பைக் குறிப்பிட்டிருக்கிறார். உ.வே.சா.வின் அணிந்துரை பெற்ற அந்த நூலின் தலைப்பு ‘கவிச்சக்கரவர்த்தி சுப்ரமண்ய பாரதி சரிதம்’ என்பது. பாஸ்கரதாஸ் தொடங்கிவைத்த ‘கவிச்சக்கரவர்த்தி’ பட்டத்தை உ.வே.சா.வும் அங்கீகரித்திருக்கிறார். தமிழில் கம்பனுக்கு அடுத்த கவிச்சக்கரவர்த்தி பாரதிதான் என்ற உண்மை ஓங்கி ஒளிபெறட்டும்.


ய.மணிகண்டன்

https://www.hindutamil.in/news/opinion/columns/610566-bharathi.html

--------------------------------------------------------------------------------------------------------

 இப்போது 

எனது உயிரிலே வேகமும் நிறைவும் பொருந்தியிருக்கின்றன. 

எனது உடலிலே சுகமும் வலிமையும் அமைந்திருக்கின்றன. 

என் உள்ளத்திலே தெளிவு நிலவிடுகின்றது. 


இது எனக்குப் போதும்.


 பாரதி

(சக்தி)


கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து 

குமையாதீர் ! 

சென்றதனைக் குறித்துக் கவலை வேண்டாம்

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி  இன்புற்றிருந்து வாழ்வீர்;

தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.


பாரதி

(சென்றது மீளாது)

------------------------

 எடுத்த காரியம் யாவினும் வெற்றி !

எங்கு நோக்கினும் வெற்றி !

மற்றாங்கே,

விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி !


எண்ணும் எண்ணங்கள் யாவினும் வெற்றி  !

எங்கும் வெற்றி !

எதனிலும் வெற்றி !


பாரதி(வெற்றி)

—---------------

 தானம் வேள்வி தவங்கல்வி யாவும்

தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,

வானம் மூன்று மழைதரச் செய்வேன்

மாறி லாத வளங்கள் கொடுப்பேன்;

மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை

வண்மை யாவும் வழங்கறச் செய்வேன்,

நான்விரும்பின காளி தருவாள்.


பாரதி

(காளி தருவாள்)

..------------------------------------------------------------------------------------------

கண்ணம்மா-எனது குல தெய்வம்


ராகம்-புன்னாக வராளி


பல்லவி

நின்னைச் சரணடைந்தேன்-கண்ணம்மா!

நின்னைச் சரணடைந்தேன்!


சரணங்கள்


பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்

என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்)


மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்

குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்)


தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு

நின்செயல் செய்து நிறைவு பெறும் வணம்

(நின்)


துன்ப மினியில்லை. சோர்வில்லை,தோற்பில்லை,

அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட

(நின்)


நல்லது தீயது நாமறியோம் அன்னை

நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!

(நின்)


இப்பாடலுக்கான சுட்டி காமெண்ட்டில் உள்ளது 


#மகாகவி_பாரதியார்

#பாரதியார்


#பாரதியார்_கவிதை

#நின்னைச்_சரணடைந்தேன் 


#பாரதியார்கவிதைநின்னைச்_சரணடைந்தேன்


..Bombay Jeyashree-Ninnai Saran Adainthen-Bharathiyar 


https://m.youtube.com/watch?v=rSKxP_UCi7o

------------------------------------------------------------------------------------------------------

பாரதியாரின் வறுமையை போக்கிய ’சிட்டுக் குருவிகள்’: பாரதி வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

puthiyathalaimurai.com   CM Doss


'விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே' என்ற பாரதியாரின் வரிகள் மிகவும் பிரபலம். பறவைகளின் சுதந்திரம் குறித்தும் அதனிடம் இருந்து மானிடர்கள் கற்றுக்கொள்ள வேண்டி பாரதியார் எழுதிய அந்த வரிகள் இன்று காலம் கடந்து நிற்கிறது. ஆனால் அந்த வரிகள் பின்னால் நடந்த சம்பவம் மிகவும் சுவாரஸ்யமானது. வறுமையின் பிடியில், பசியின் கொடுமையில் பிறந்த புரட்சிகரமான வரிகள் அவை.


பாரதியார் 10 வருடங்கள் புதுச்சேரியில் இருந்தார். அங்கு அவர் இந்தியா என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்தார். அப்போது அந்த பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மண்டயம் சீனிவாச ஆச்சாரியார். இருவரும் சிறந்த நண்பர்கள். அவர்களின் குடும்பத்தினரும் நெருக்கமானவர்கள். சீனிவாச ஆச்சாரியாருக்கு யதுகிரி என்ற மகளும் உண்டு. 10வயது சிறுமியான யதுகிரி பாரதியாருக்கு செல்லப்பிள்ளை. அடிக்கடி தன்னுடைய கவிதைகளையெல்லாம் யதுகிரிக்கு படித்துக் காட்டுவார் பாரதி. 10வயதான யதுகிரி பாரதியாரின் பாடல்களை குறிப்பெடுத்து வைத்துக்கொள்வார். இன்று பெரிய கவியாக கொண்டாடப்படும் பாரதி, அவர் வாழ்ந்த காலத்தில் வறுமையில் இருந்தவர். பசிக்கும் பட்டினிக்கும் இடையேதான் புரட்சிகளை விதைத்தார் பாரதி.


ஒருநாள் மாலை வழக்கம் போல் யதுகிரி, பாரதி வீட்டுக்கு வருகிறார். அப்போது பாரதி வீட்டில் இல்லை. அவரது மனைவி செல்லம்மாள் சோகமாக இருக்கிறார். அவரின் சோகத்தை முகத்தில் பார்த்த யதுகிரி, சிறுமியின் குரல் மாறாமல் 'என்ன ஆச்சு?' என கேட்டுவிடுகிறார். மழலையின் அன்பால் நெகிழ்ந்த செல்லம்மாள், அவரிடம் நடந்த கதையை சொல்கிறார். ''நான் பாரதியிடம் சுதேசமித்திரன் பத்திரிகைக்கு கட்டுரை அனுப்ப சொன்னேன். அவர் அனுப்பவே இல்லை. கட்டுரை அனுப்பினால் பணம் வரும்.குடும்ப நிலவரம் அவருக்கு புரியவில்லை. பால் காசு கொடுக்கவில்லை. உணவுப்பொருட்களும் இல்லை எனக் கூறுகிறார். 


பின்னர் சமையலுக்கு இருந்த கொஞ்ச அரிசியை எடுத்து வைத்துவிட்டு, குளிக்கச் சென்றுவிடுகிறார் செல்லம்மாள். திரும்பி வந்து பார்த்தால், முறத்தில் இருந்த அரிசியில் கால்பங்கை காணவில்லை. அருகில் இருந்த பாரதி அரிசியை அள்ளி முற்றத்தில் குருவிகளுக்கு தூவிக்கொண்டு இருக்கிறார். அரிசியைக் கண்ட குருவிகள் கூட்டமாக வந்து கொத்தித் திங்கின்றன. அதனை அருகில் அமர்ந்து ரசித்துக்கொண்டு இருக்கிறார் பாரதி. அருகில் செல்லமாள் மிகவும் கோவமாக நின்றுகொண்டு இருக்கிறார். அவரைப்பாரத்து பாரதி பேசுகிறார், ''செல்லம்மா.. நாம் கோவப்பட்டு கொள்கிறோம். முகத்தை திருப்பிக்கொள்கிறோம். ஆனால் இந்த சிட்டுக்குருவிகளை பார். எவ்வளவு இணக்கமாக இருக்கின்றன. அன்பாக இருக்கின்றன. கண்கள் திறந்திருந்தும் நாம் இந்த சிட்டுக்குருவிகளை ரசிக்கவில்லை என்றால் நாம்தான் மூடர்கள். இந்த பறவைகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்கிறார்.


இருந்த அரிசியிலும் கொஞ்சம் வீணாய்போய்விட்டதே என்று கோவப்பட்ட செல்லம்மாள், ''உங்களுக்கு பொறுப்பு இல்லை. உண்மை நிலவரம் புரியவில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாதபோது சிட்டுக்குருவி பாடம் முக்கியமா? கட்டுரை அனுப்பினால் பணம் கிடைக்கும். அதை எப்போது செய்வீர்கள்? நமக்கு இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கு. ஆண்டவன் என்னை சோதிக்கிறான்'' என புலம்பித் தள்ளுகிறார். செல்லம்மாளின் வார்த்தைகளை அரைகுறையாய் காதில் வாங்கிக்கொண்டே தன்னுடைய இளையமகள் சகுந்தலாபாரதியை அழைக்கிறார், பாரதி. அந்த கணத்திலேயே ஒரு பாடலை பாடுகிறார் பாரதி. அதுதான் 'விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே' பாடல். பாடலைக் கேட்டு சிறுமி சகுந்தலாபாரதி குஷியாகி விடுகிறார். பாரதி பாட, சகுந்தா ஆட அந்த இடமே கொண்டாட்ட இடமாக மாறுகிறது. தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த செல்லம்மாளும் இந்த கொண்டாட்டத்துக்குள் ஐக்கியமாகிவிடுகிறார்.


பசியும்,கோவமுமாக இருந்த ஒரு இடம் பாரதியின் ஒரு பாடலுக்கு பின் கொண்டாட்டக்களமாக மாறிவிடுகிறது. இரவில் பாரதி, செல்லம்மாளிடம் சொல்கிறார், ''நீ கவலைபட வேண்டாம் செல்லம்மா. இந்த குருவிப்பாட்டையே நான் பத்திரிகைக்கு அனுப்புகிறேன். பணம் வரும்'' என்கிறார். இப்படியாக குருவிகளின் பசிக்கு அரிசியை தூவினார் பாரதி, பதிலுக்கு அந்த குருவிகள் ஒரு பாடலைக் கொடுத்து பாரதியின் வறுமையை போக்க உதவின என்பது வரலாறு.வறுமையிலும், பசியிலும் தமிழை கொண்டாடிய கவிஞன் பாரதி என்பதுக்கு இந்த சம்பவம் பெரிய உதாரணம்.


இந்த சம்பவம் நடந்த போது சிறுமியாக இருந்த யதுகிரி பின்னாளில் 'பாரதி நினைவுகள்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் இந்த சிட்டுக்குருவி பாடல் உருவான கதை பதிவாகியுள்ளது. சம்பவம் நடந்த அன்று சிறுமி யதுகிரியை அழைத்து தன்னுடைய சிட்டுக்குருவி பாடலை பாடிக்காட்டிய பாரதி கூறினாராம், ''யதுகிரி நீ பார்ப்பாய்.. நான் பார்க்கமாட்டேன். என்னுடைய சிறிய பாடல்களும் புகழப்படும். போற்றப்படும், தமிழகம் இன்னும் கண் திறக்கவில்லை. அப்படியே திறந்தாலும் தமிழகம் தற்போது குழந்தை பருவத்தில் இருக்கிறது'' என்று கூறுகிறார். இந்த சம்பவத்தை தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள யதுகிரி அம்மையார், பாரதியின் எதிர்கால ஞானத்தை குறிப்பிட்டு மெய்சிலிர்த்துள்ளார்.


பாடல்:


விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்

சிட்டுக் குருவியினைப் போலே


எட்டுத் திசையும் பறந்து திரிகுவை

ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை

மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்

வானொளி என்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு…)


பெட்டையோடின்பம் பேசிக் களிப்புற்றுப்

பீடையில்லாதோர் கூடு கட்டிக் கொண்டு

முட்டை தருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி

முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு…)


முற்றத்திலேயுங் கழனி வெளியிலும்

முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு

மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்

வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு…)


நன்றி: புதிய தலைமுறை

-------------------------------------------------------------------------------------------------------------------

இன்று பாரதியார் பிறந்த நாள். இந்நாளில் அவரது பாடல்கள் உருவான விதம் பற்றித் தெரிந்து கொள்வோமே!


பாரதியார் பாடல்கள் ஒவ்வொன்றும் அவரைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகளின் வெளிப்பாடாகும். ஒவ்வொரு பாடல்களும் இயற்றுவதற்கு காரணமான  சுவாரஸ்யமான நிகழ்வுகள் பல உள்ளன. 


பாரதியார் பாண்டிச்சேரியில் வசிக்கும் போது, இடி மின்னலுடன் பேய் மழை பெய்தது. இதனால் வீடு, மரம் போன்றவை பல வீழ்ந்தன. இதன் காரணமாக மக்கள் அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்து முடித்தப் பின்,  முன்பு சுற்றி வந்த மடு, தோப்பு போன்ற இடங்களைச் சுற்றிப் பார்க்கப் போனார் பாரதியார்.  ஒரு சின்னத் தோப்பு, நூறு மரங்களுக்கு மேல் இருக்காது. அதில் சில மரங்கள் மட்டுமே விழுந்து பாக்கி மரங்களெல்லாம் சீராக இருந்தன. அதைக் கண்டதும் ஏழையின் தோப்பைக் காத்த பராசக்தியைப் பாட வேண்டும் என்று அவருக்குத் தோன்றியதாம். 'பிழைத்த தென்னந்தோப்பு' என்ற தலைப்பில் ஒரு கவிதை செய்தார். "ஏழை என்றால் காற்றிற்குக் கூடக் கருணை உண்டு என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா?" என்றார். பாரதியார் பாடிய பிறகு தென்னந்தோப்பு ஒரு கண்காட்சித் தோப்பாக ஆகிவிட்டது. ஊர் மக்களெல்லாம் போய்ப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

           

           பிழைத்த தென்னந்தோப்பு


வயலிடை யினிலே செழுநீர் 

   மடுக் கரையினிலே.

அயலெவரு மில்லை, தனியே 

   ஆறுதல் கொள்ளவந்தேன்.


காற்றடித் ததிலே, மரங்கள் 

   கணக்கிடத் தகுமோ?

நாற்றினைப்போலே சிதறி 

   நாடெங்கும் வீழ்ந்தனவே.


சிறிய திட்டையிலே உளதோர் 

   தென்னஞ் சிறுதோப்பு 

வறியவ னுடைமை அதனை 

   வாயு பொடிக்கவில்லை.


வீழ்ந்தன சிலவாம் மரங்கள் 

   மீந்தன பலவாம்; 

வாழ்ந்திருக்க வென்றே அதனை 

   வாயு பொறுத்துவிட்டான்.


தனிமை கண்டதுண்டு; அதிலே 

   சார மிருக்குதம்மா!

பனிதொலைக்கும் வெயில், அதுதேம் 

   பாகு மதுரமன்றோ;


இரவி நின்றதுகாண் விண்ணிலே 

   இன்ப வொளித்திரளாய்;

பரவி யெங்கணுமே கதிர்கள் 

   பாடிக் களித்தனவே.


நின்ற மரத்திடையே சிறிதோர் 

   நிழலினில் இருந்தேன்;

என்றும் கவிதையிலே நிலையாம் 

   இன்பம் அறிந்துகொண்டேன்.


வாழ்க பராசக்தி! நினையே 

   வாழ்த்திடுவோர் வாழ்வார்;

வாழ்க பராசக்தி! இதையென் 

   வாக்கு மறவாதே!

               *****


இதே நாளில் ஜப்பானில் ஒரு புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த ராஜ்யத்தை ஒரே சமனாக பகுத்து எல்லா ஜப்பானியருக்கும் ஆளுக்கு இவ்வளவு என்று பிரித்துக் கொடுத்து விடுவது; இனி பிச்சைக்காரர்களும் சோம்பேறிகளும் தங்கள் தேசத்தில் இருக்கக்கூடாது என்று செய்தார்கள். இதைப் பார்த்த புதுவை சுதேசித் தலைவர்கள் நம் நாட்டில் ஒரு சின்னக் குடும்பம் பிழைக்க எவ்வளவு நிலம் வேண்டும் என்று ஆராய்ந்தார்கள். அதைப் பாரதியார், 'காணி நிலம் வேண்டும்' என்ற பாட்டில் பாடிக்காட்டியிருக்கிறார்.


           காணி நிலம்வேண்டும்


காணி நிலம்வேண்டும், -- பராசக்தி

காணி நிலம்வேண்டும்; -- அங்குத்

தூணில் அழகியதாய் -- நன்மாடங்கள்

துய்ய நிறத்தினவாய் -- அந்தக்

காணி நிலத்திடையே -- ஓர் மாளிகை

கட்டித் தரவேண்டும்; -- அங்குக்

கேணி யருகினிலே -- தென்னைமரம்

கீற்று மிளநீரும்,


பத்துப் பன்னிரண்டு -- தென்னைமரம்

பக்கத்திலே வேணும்; -- நல்ல

முத்துச் சுடர்போலே -- நிலாவொளி

முன்பு வரவேணும்;-அங்குக்

கத்துங் குயிலோசை-சற்றே வந்து

காதிற் படவேணும்;-என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்

தென்றல் வரவேணும்.


பாட்டுக் கலந்திடவே -- அங்கே யொரு

பத்தினிப் பெண்வேணும்; -- எங்கள்

கூட்டுக் களியினிலே -- கவிதைகள்

கொண்டு தரவேணும்; -- அந்தக்

காட்டு வெளியினிலே, -- அம்மா, நின்றன்

காவ லுறவேணும்; -- என்றன்

பாட்டுத் திறத்தாலே -- இவ்வையத்தைப்

பாலித் திடவேணும்.


யதுகிரி அம்மாள் எழுதிய 'பாரதி நினைவுகள்' நூலிலிருந்து...

----------------------------------------------------------------------------------------------------------------

 பாரதியார் இறந்தபிறகு 34 ஆண்டுகள் செல்லம்மா உயிர் வாழ்ந்து இருக்கிறார். அந்தக் காலகட்டத்தில்தான் தனது இரண்டாவது மகள் சகுந்தலாவிற்குத் திருமணம் செய்து வைத்தார். பாரதி ஆஸ்ரமத்தை உருவாக்கி அவரது பாடல்களின் முதல் தொகுதியை புத்தகமாக வெளியிட்டார். தனது இரண்டாவது மகளுக்கு கடன் வாங்கித்தான் திருமணம் செய்து வைத்தார். ‘பாரதி பிரசுராலயம்’ நிறுவனத்தை நான்காயிரம் ரூபாய்க்கு விற்று, மகள் திருமணக் கடனுக்காக 2,500 ரூபாயை அடைத்து விட்டார். இறுதியாக, பாரதியார் கவிதைகளை விற்று வெறும் 1,500 ரூபாய் மட்டுமே செல்லம்மா பெற்றார்.கயிற்றுக் கட்டிலில் படுத்தபடுக்கையாக, சுயநினைவு இல்லாத சூழ்நிலையிலும் வாயைத் திறந்தால் பாரதி பாட்டு... குறிப்பாக கண்ணன் பாட்டு வரும்.

"திண்ணை வாயில் பெருக்க வந்தேனெனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்". 

இந்த வரிகளை திரும்ப, திரும்பச் சொல்லி வந்தார்.பாரதியின் எழுத்துக்களை பிரசுரமாக்கிய செல்லம்மா முன்னுரை யில் எழுதினார்:

‘‘தமிழ்நாட்டு மக்களே, நான் படித்தவளல்ல, இந்த நூலுக்கு முகவுரை எழுதவும் நான் முன்வரவில்லை. அதற்கு எனக்கு சக்தியும் இல்லை.அவர் உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச

கைங்கரியத்துக்காக, முழுமனத்துடன் அர்ப்பணம் செய்தார். நமது நாடு இன்னது, நமது ஜனங்கள் யாவர், நமது சக்தியும், உணர்ச்சியும் எத்தகையது? இவைகளைப் பற்றிய விவகாரங்களும்,சண்டைகளும்தீர்மானங்களும் அவர் ஜீவனுக்கு ஆதாரமாக இருந்தன.

எதுவும் யோசித்தாக வேண்டியதில்லை. திடீர் திடீர் என்று அவருடைய புதிய எண்ணங்கள், புதிய புதிய பாட்டுக்கள், புதிய புதிய கொள்கைகள் என் இரு காதுகளும் மனமும் இருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன். இந்த பாக்கியத்தை மறுபடி பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் பெறத் தயாராக இருக்கிறேன். அவரது தேகத்தில் ஜீவன் போய்விட்டது. அவரது ஜீவனுக்கு ஆதாரமாக இருந்த பாரத மாதாவின் ஜீவசக்தி என்றென்றும் அழியாதது. தமிழ்நாடு உள்ளளவும், தமிழ்நாட்டில் ஒரு மனிதனோ, குழந்தையோ தமிழ் பேசிக் கொண்டிருக்குமளவும் பாரதியின் மூலமாக நமக்குக் கிடைத்த ஜீவசக்தி என்றென்றும் நிலைத் திருக்கும் என்று என் இருதயம் சொல்கிறது. இதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல வந்தேன். நீங்கள் நீடூழி வாழ்க.பாரதியாரின் நூல்கள் முழுமையும் அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை என் ஜீவன் உள்ளவரை நான் வகித்து பிற்பாடு தத்தம் செய்துவிட்டுப் போகத் தீர்மானித்திருக்கிறேன்.

வந்தேமாதரம்.’’

-----------------------------------------------------------------------------------------------------

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....