Monday, July 13, 2026

எழுத்தும் சிந்தனையும் AI to Zero - மது ஸ்ரீதரன் ஜனவரி-2026

 




எழுத்தும் சிந்தனையும்

AI to Zero 

-மது ஸ்ரீதரன்

விலை ரூ 300/-+(50/- அனுப்பும் செலவு)

--------------------

நமக்குப் பிடித்த பாடல் ஒன்றை நாமாக யூ-டியூப்பில் தேடிப் பிடித்துக் கேட்பதற்கும், எதிர்பாராத நேரத்தில் ஒரு டீக்கடையிலோ, டவுன் பஸ்ஸிலோ கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது அல்லவா? இரண்டாவதில் அந்தப் பாடல் இன்னும் இனிமையாக ஒலிக்கும். இதை Serendipity என்கிறார்கள்.


அதே போல இந்த நூல் நீங்கள் தேடிப் பார்க்காமலேயே சில புதுத் தகவல்களை உங்களுக்குக் கொடுக்கக் கூடும். இதில் உள்ள சில விஷயங்கள் நீங்கள் ஏற்கனவே அறிந்ததாக இருக்கலாம், சில விஷயங்கள் புரியாமல் இருக்கலாம். எது எப்படியோ, எதிர்பாராமல் கேட்க நேரிடும் டீக்கடைப் பாடல் போல இந்த நூல் உங்கள் வாசிப்பு அனுபவத்தை சற்று மேம்படுத்தும். 

----------------------------


நவீன அறிவியல் கருத்துக்களையும் தொழில்நுட்பங்களையும், தமிழ் இலக்கியங்களையும் இணைத்து எழுதிய எழுத்தாளர்களின் தொடர்ச்சி தமிழில் உண்டு. பெ.நா. அப்புசாமி முதல் சுஜாதா வரை ஒரு  பட்டியல் தரலாம்.  நான் சமீபத்தில் படித்த புத்தகம்  

தமிழ் இலக்கியம், பாடல்கள், ஆன்மீகம், வானியல் போன்ற பல தகவல்களோடு சுவாரசியமான களஞ்சியமாக  எழுத்தாளர் மதுஸ்ரீதரன் அவர்களின் ‘எழுத்தும் சிந்தனையும்’. சிறுவாணி வாசகர் மைய வெளியீடு.

ஆங்கில எழுத்துக்கள் 26 க்கும் தலா ஒரு கட்டுரை என நூல் முழுவதும் படிக்க எடுத்தால் கீழே வைக்க இயலாத ரகம்.

AI செயல்பாடுகளைப் பற்றித் தெளிவாகவும் எளிமையாகவும் கூறும் கட்டுரை, நுகர் கலாச்சாரம் பற்றிய கட்டுரை, பழந்தமிழ் இலக்கியம், புராணம் முதல் திரைப்பாடல் வரிகள் உள்ளிட்ட எடுத்துக்காட்டுகள் அடங்கிய பல கட்டுரைகள் என நூலில் மேலும் சுவாரஸ்யம் கூட்டுகின்றன.

மதுஸ்ரீதரனின் பலமாக நான் எண்ணுவது எடுத்துக்கொண்ட தலைப்பின் கருப்பொருளை எளிமையாக உதாரணங்கள் மூலம் வாசகருக்குக் கடத்துவதுதான்.

நுகர்பொருள் கலாசாரம் பற்றிய கட்டுரையில், ‘வாங்குவதால்தானே விற்கிறோம்' என்கிறது ஒரு கூட்டம். ‘விற்பதால்தானே வாங்குகிறோம்' என்கிறது ஒரு கும்பல்.

சுற்றுச் சூழலை, மற்றவர்களை விட்டு விடுவோம். ‘வாங்கிக் குவித்தல்' நம் சேமிப்பைப் பதம் பார்த்து விடுகிறது. நம் பாதுகாப்பான எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்குகிறது.

‘இன்றைக்கு இந்த நொடியை அனுபவிப்போம், நாளை வெறும் கனவு, அதை நாம் ஏன் நம்பணும்?' என்பதெல்லாம் கவிதைக்குச் சரிப்படும். நாளைக்கு ரிட்டையர் ஆகி, பென்சன் இல்லாத போது யாரிடம் சென்று கையேந்துவது? கண்டதை வாங்கிக் குவிக்காமல் கொஞ்சம் சேமித்து வைத்திருக்கலாம் என்று தோன்றுமே!  

எதை நாம் துறக்கிறோமோ அதைச் சார்ந்த துன்பங்களில் இருந்தும் விடுதலை பெறுகிறோம் என்பது இக்காலகட்டத்தில் அவசியமான அறிவுரை.


கருந்துளை பற்றிய ஒரு கட்டுரையில் மரணமும் ஒரு கருந்துளை போன்றதே. உள்ளே நுழைந்தவர்கள் மீண்டும் திரும்புவதில்லை எனச் சொல்லும்போது ஞான மார்க்கத்தில்  ரிடர்ன் டிக்கெட் கிடையாது எனும் ஓஷோவின் கருத்தை இணைக்கிறார்.


தொடுவானம் போல மனிதனின் ஆசை அவன் அதை நெருங்க நெருங்க விலகிச் செல்கிறது.அடைதல் பிழை. அடைந்துவிட்டால் சந்தோஷமாக இருக்கலாம் என்பது தப்புக்கணக்கு. நாம் அனைவருமே கனியை உண்டபிறகும் ஏமாறும் டான்டலஸ்தான் என கிரேக்க புராணத்தையும் ஒப்பிடுகிறார்.


இளவயதில் நிறைய நேரம்,உடல் வலிமை இருக்கிறது.ஆனால் பணம் இல்லை.

நடுத்தர வயதில் நேரம் இல்லை.

முதுமையில் வலிமை இல்லை.

ஆக ஏதாவது ஒரு நிச்சயமின்மை இருந்துகொண்டேதான் இருக்கிறது. மூன்றில் இரண்டுதான் தேர்ந்தெடுக்க முடியுமென ஒரு கட்டுரை.

அரிதினும் அரிதான உயிரினமான நாம் நம் இருப்பை கொண்டாடிக் களிக்க வேண்டாமா? நம் பூமியை, நம் வானை, நமக்கு வழங்கப்பட்ட இந்த காலத் துணுக்கை நொடிக்கு நொடி அனுபவிக்க வேண்டாமா? ஆராதிக்க வேண்டாமா? வேற்றுமைகளை மறந்து ஒன்று கூடி நடனமாட வேண்டாமா? ஆனால், உலகத்தின் நிலையை எண்ணிப் பாருங்கள். அதிகாரம். வன்முறை, பிரிவினை, அடக்குமுறை...

வாசிப்பவரை நோக்கி எழுப்பப் படும் இக்கேள்வி சிந்தித்துத் திருந்துவதற்கானது.

‘நான் சந்தோஷமாக இருப்பேன்' என்பது உண்மையில் ஒரு மிகச்சிறந்த குறிக்கோள் என்கிறார்கள் ஞானிகள். ‘பைலட் ஆவேன்', ‘பில்லியனர் ஆவேன்', ‘உலகம் சுற்றுவேன்', ‘முதல்வன் ஆவேன்' இவைகளைக் காட்டிலும் இந்த குறிக்கோள் சிறந்தது, எளிதில் அடையக்கூடியது. நடைமுறை சாத்தியம் உள்ளது.

‘இந்த நிமிடம் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்' என்ற எளிய குறிக்கோளை நமக்குள் வைத்துக் கொண்டால் அதை யாராலும், ஒட்டுமொத்த உலகத்தாலும் மாற்ற முடியாது என்பதைக் கவனியுங்கள். நமது மற்ற குறிக்கோள்கள் சிக்கலானவை, பலகீனமானவை, பிறரின் சார்புள்ளவை.

‘எதிர்காலம் ஒவ்வொரு நாளாக அல்ல, நொடியாக நம்மிடம் தரப்படுகிறது. ஒவ்வொரு நொடியும் வாழ்பவனுக்கு எதிர்காலம் அர்த்தமற்றுப் போகிறது. மரண பயம் உட்பட எல்லா பயங்களும் அவனுக்குப் பொருளற்றுப் போய் விடுகின்றன.

முதல் முறை கொடுக்கும் போது நன்றியுணர்வை உருவாக்குகிறோம்.

இரண்டாம் முறை கொடுக்கும் போது எதிர்பார்ப்பை. மூன்றாம் முறை நமக்கு இவர் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை, நான்காம் முறை இவர் கொடுப்பதும், நாம் பெறுவதும் சகஜம் என்ற எண்ணத்தை உருவாக்குகிறோம். ஐந்தாம் முறை நாம் ஒருவேளை கொடுப்பதை நிறுத்தினால் வெறுப்பையும், பகைமையையும் உருவாக்குகிறோம்.

கொடுப்பவர்தான் எல்லையை நிர்ணயிக்க வேண்டும். ஏனெனில், வாங்குபவர்களுக்கு எந்த எல்லையும் இல்லை!

மதுஸ்ரீதரனின் முந்தைய சிறுவாணி வாசகர் மைய வெளியீட்டு நூலான ‘எண்ணும் எழுத்தும்' போலவே இந்த ‘எழுத்தும் சிந்தனையும்' (AI to Zero) நூலும் நம்மை வியக்கவும், சிந்தனையிலாழ்த்தவும் செய்கின்றன என்றால் மிகையில்லை.

வாசிப்பவரின் எண்ணஓட்டத்தை விரிவாக்கி, மரபைப் போற்றி, புதியன காணும் போக்கைக் கைக்கொள்ளத் தூண்டுமாறு நம்மையெல்லாம் வியக்க வைக்கின்றன மதுஸ்ரீதரனின் கட்டுரைகள்.  

அனைத்து வயதினரும் படிக்கவேண்டிய செறிவான புத்தகம்.


 21.06.2026 தினமலர் கோவைப் பதிப்பில்

'நான் படித்த புத்தகம்' பகுதியில் வெளிவந்துள்ள  

செய்தியின் முழுவடிவம் இது.




ஒத்தைக் காளை வண்டியும் முத்துசாமி ராவும்- அ.கா.பெருமாள் டிசம்பர்-2025

 



ஒத்தைக் காளை வண்டியும் முத்துசாமி ராவும்-
அ.கா.பெருமாள்

விலை ரூ 250/-+(50/- அனுப்பும் செலவு)
--------
ஆய்வாளர் அ.கா.பெருமாள்  நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்.

இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள்  களஆய்வில்
சேகரித்தவை.கிராமியக் கலைகளைப்  பற்றிய செய்திகள்,  வரலாறு, பண்பாடு தொடர்பானவை. இந்தக் கட்டுரைகள் எல்லாவற்றிலும் நாட்டார் வழக்காற்றுச் செய்திகள் இழையோடுகின்றன.


எருமைச் சீமாட்டி- பெருமாள் முருகன் / அக்டோபர் -2025

 



எருமைச் சீமாட்டி-

பெருமாள் முருகன் சிறுகதைகள்

Pages:200 

விலை 250/-+(50/- அனுப்பும் செலவு)

-------

பெருமாள் முருகன், கொங்குப் பகுதியின் நிலத்தையும் வீட்டையும் ஆவினங்களையும் ஆளும் பெண்களின் புறவுலகைப் பேசியவாறே மறைவாய் அவர்களது அகவிரிவை அறியத் தருகிறார். வாசிப்பின் தொடக்க நிலையில் இருப்பவர்க்கும் இடையூறு அளிக்காத நடையும் கதைக் களங்களும் ஆசிரியருடையவை என்பதால் இக்கதைகள் சகலருக்குமானது.


திட்டமான சிறுகதை ஒழுங்கமைவைக் கற்கவும், ஒரு கதையில் நேர்த்தியான உரையாடலை உருவாக்கவும், பலரது பார்வைக் கோணங்களை முன்வைக்கவும் தமிழில் பெ.முவை வாசிப்பது இன்றியமையாதது.


இக்கதைகள் வாசிப்பின்பத்தை மெருகூட்டுபவை என்பதில் ஐயமில்லை.

- ஜார்ஜ் ஜோசப்


-------------

மணல் உதறும் அணில்

பேரிலக்கியச் செல்வம் கொண்ட தமிழில் வாசிப்போர் எண்ணிக்கை வெகுகுறைவு. இது சமூக முரண். வாசகர் குறைவாக இருந்தும் எப்படி நூல்கள் பல்கிப் பெருகுகின்றன, இலக்கிய வளம் செழுமை பெற்றுக் கொண்டேயிருக்கின்றன என்பதுதான் வியப்பு. இந்த வியப்பிற்கு விடை காண வேண்டுமானால் புத்தகச் சந்தை, நிறுவனங்கள், அரசு முயற்சிகள் ஆகியவற்றைக் கணக்கெடுத்துப் பார்த்தால் போதாது. அப்படிக் கணக்கெடுத்தால் சிலசமயம் மனக்கஷ்டத்திற்கு ஆளாகவும் நேரலாம். ஆனால் தனிமனித முயற்சிகள் ஒருபோதும் சோர்வு தருவதில்லை. தமிழும் தமிழ் இலக்கியம் இத்தனை வளம் பெற்றிருக்கத் தனிமனிதர்கள்தான் காரணமோ என்றுகூடத் தோன்றும். 

வாசிப்பின்பத்தை அனுபவித்த ஒருவர் தம்மைப் போல இன்னொருவரைக் காண்கையில் அடையும் பரவசத்தை நம் சூழலில் நிறையக் காணலாம். வாசித்தவற்றைப் பற்றிப் பேசுவதும் நூல்களைப் பகிர்ந்து கொள்வதும் இயல்பாக நடந்தேறும். கடன் வாங்கிய பணத்தைக் கேட்டுச் சண்டையிடுவோர் உண்டு. கடன் வாங்கிய நூலைப் ‘போனால் போகட்டும்’ என்று விட்டுவிடுவோரே அதிகம். வாங்கிய நூலை வாசித்தததும் யாருக்காவது கொடுத்துவிடும் வழக்கம் கொண்டோரும் உள்ளனர். கோவை, பூசாகோ (பிஎஸ்ஜி) கலை அறிவியல் கல்லூரியில் முதுகலைத் தமிழிலக்கியம் படித்தேன். என் ஆசிரியர் ச.மருதநாயகம் தனிநூலகம் வைத்திருந்தார். ஒருவர் தம் வீட்டில் அத்தனை பெரிய நூலகம் வைத்திருக்க முடியும் என்பதைக் கண்டு பெரும்பரவசம் அடைந்தேன். நூல்கள் சேகரிக்கும் ஆர்வம் பெருகியதற்கும் அதுதான் காரணம். 

சேகரித்து வைத்திருந்தது மட்டுமல்ல, என்னைப் போன்ற மாணவர்கள் தடையின்றி நூல்களை எடுத்துச் சென்று வாசிக்கவும் உதவினார். வாசிக்கக் கொடுத்த நூலை ‘படிச்சிட்டயாப்பா?’ என்று எப்போதாவது கேட்பார். அவர் அப்படிக் கேட்டால் பதறிப் போவேன். ‘நாளைக்குக் குடுத்துருவங்கையா’ என ஏதோ பதில் சொல்வேன்.  ‘பொறுமையாப் படிப்பா. படிச்சிருந்தா உங்க கருத்தத் தெரிஞ்சுக்கலாமுன்னு கேட்டன்’ என்பார். போகப்போகத்தான் அவர் மனோபாவம் புரிந்தது. அவர் விசாரிப்பு நூலைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லும் நினைவூட்டல் அல்ல. படித்த என் கருத்தை அறிய வேண்டும் என்பதற்காகத்தான். அது வாசிப்பின்பத்தை முழுமையாக அனுபவிக்கும் மனநிலை.
 
நான் கல்லூரி ஆசிரியர் பணியில் சேர்ந்தபோது என் சேகரிப்பிலிருந்து பத்திருபது நூல்களைக் கல்லூரிக்கு எடுத்துப் போய் வைத்திருப்பேன். பாடநூலைத் தவிர வேறு புத்தகங்களையே அறியாத முதல் தலைமுறை மாணவர்களை வாசிப்பில் ஈர்க்க அவற்றைப் பயன்படுத்துவேன். தொடக்க நிலை வாசிப்புக்கு உகந்த நூல்கள். குறிப்பேட்டில் மாணவர் பெயரை எழுதி வைத்துக்கொண்டு நூலைக் கொடுப்பேன். அதிகபட்சம் ஒருவாரத்தில் திருப்பிக் கொடுக்கும்படி சொல்வேன். கொடுக்கவில்லை என்றால் கேட்டுப் பெறுவேன். சிலரைக் கடுமையாகத் திட்டவும் வேண்டியிருக்கும். புத்தக அருமை தெரியாமல் எங்கோ போட்டுவிட்டுத் தேடுவோர் உண்டு. கிழித்து எடுத்து வருவோர் உண்டு. புத்தகத்தைக் கையாளுதல், சேகரித்தல், பாதுகாத்தல் ஆகியவற்றைப் பற்றி வகுப்பெடுக்கவும் செய்வேன்.  ‘அறிவுச்சொத்து புத்தகம்’ என்பதை மனதில் பதிய வைக்க என்னென்னவோ செய்ய வேண்டியிருக்கும். 

வாசிப்பு ஆர்வம் மட்டுமல்ல, புத்தகத்தைப் பாதுகாக்கும் கவனமும் கொண்டோருக்கு என் நூல்களைத் தருவதில் ஒருபோதும் சுணக்கம் காட்டியதில்லை. எனக்கு உதவியாக ஒருவேலையைச் செய்து தரும் மாணவருக்குப் புத்தகத்தைக் கொடுப்பேன். திருமண நிகழ்வுகளுக்கு நான் கொடுக்கும் ஒரே பரிசு புத்தகம்தான். முதல் பக்கத்தில் என்  வாழ்த்துப்பாவும் இடம்பெற்றிருக்கும். நம்மைப் போல இன்னொருவர் இருப்பதைக் கண்டால் மகிழ்கிறோம். நம்மைப் போலச் சிலரை உருவாக்கவும் முயல்கிறோம். வாசிப்புச் சுவை கண்டோரிடம் இவ்வியல்பு மிகுந்திருக்கும். 

வாசிப்புப் பண்பாட்டை உருவாக்கப் பலவித முயற்சிகள் நடைபெறும் காலம் இது. மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகள், புதிய நூலகங்கள், நூல் கொள்முதலில் புதிய கொள்கை, பன்னாட்டுப் புத்தகக் காட்சி என அரசு ஒருபக்கம் வாசிப்பைக் கூட்டச் செய்யும் முயற்சிகள் போற்றத்தக்கவை. அதேசமயம் எந்தப் பின்புலமும் அற்றவர்கள் செய்பவை அனேகம். உடலில் ஒட்டிய மணலை உதறி உதவும் அணில் போல வாசிப்புப் பண்பாட்டிற்குப் பலரும் பங்களிக்கின்றனர். அவ்வகையில் சிறுவாணி வாசகர் மையத்தின் ‘மாதம் ஒருநூல்’ என் மனதைக் கவர்ந்த திட்டம். தம் செயல்பாட்டு எல்லைக்கு உட்பட்டு என்ன செய்ய முடியும் என்று சிந்தித்த வாசக உள்ளத்தின் திட்டம். 

நூலார்வம் கொண்டோரை உறுப்பினர்களாகச் சேர்த்து  வீடு தேடி மாதம் ஒருநூலைக் கொண்டு சேர்ப்பது சாதாரணம் போலத் தோன்றும். நூல் தேர்வு, வாசகர் தேர்வு,  அதை அச்சிடும் பணிகள், அனுப்புதல் என்று தொடர்ந்து ஓர் இயக்கமாகச் செயல்படுவது எளிதல்ல. நூல்களைப் பெறுவோர் பாக்கியவான்கள். ஒருநூல் கைக்கு வந்து சேர்வதில் இருக்கும் கஷ்டமும் சேர்ந்த பின் கிடைக்கும் மகிழ்வும் என் தலைமுறையினருக்கு நன்றாகத் தெரியும். நல்ல நூலைத் தேடி நூலகங்களுக்கும் எங்கோ அரிதாகப் பெருநகரங்களின் சிறுசந்தில் இருக்கும் புத்தகக் கடைக்கும் அலைந்த தலைமுறை. இன்றோ நாம் இருக்கும் இடத்திற்கு நூல் வந்து சேர்கிறது. முகம் தெரியாத ஒருவர் நூலைக் கொண்டு வந்து நம் கையில் வைக்கிறார். இதைத் தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தியிருக்கிறது. தொழில்நுட்பம் எத்தனை வளர்ந்தாலும் அதைப் பயன்கொள்ளும் திறம் நம்மைப் பொருத்ததுதான். அத்திறம் கொண்ட அமைப்பாகிய சிறுவாணி வாசகர் மையம் வாசிப்புப் பண்பாட்டிற்குச் செய்யும் பங்களிப்பாகவே இத்திட்டத்தைக் காண்கிறேன். அதற்கு என் பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள். 

சிறுவாணி மூலம் என் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளியாவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. என் அறுபதாம் வயதுத் தொடக்கத்தை ஒட்டி இப்படி ஒருநூலை வெளியிட்டுப் பெருமைப்படுத்துவதைக் கண்டு நெகிழ்கிறேன். சாத்தியப்படுத்திய நண்பர் பிரகாஷ் அவர்களுக்கும் சிறுவாணி நண்பர்களுக்கும் நன்றி. என் பணியை எளிமையாக்கிக் கதைகளைத் தேர்வு செய்து கொடுத்தவர் இளவல் ஜார்ஜ் ஜோசப். வாசிப்பிலும் எழுதுவதிலும் தீரா வேகம் கொண்டவர் அவர். இந்தத் தொகுப்பை உருவாக்குவதிலும் அவ்வேகத்தைக் கண்டேன். நினைவுபடுத்த வேண்டிய தேவையே இல்லாமல் பணியை முடித்துத் தரும் இயல்புடைய அவருக்கு நன்றி. 

என் சிறுகதை நூலொன்றுக்கு ‘எருமைச் சீமாட்டி’ எனத் தலைப்பிட வேண்டும் என்பது நெடுநாள் அவா. எருமைகளைப் பற்றிப் பிரமாதமான சித்திரங்கள் நம் பழைய  இலக்கியத்தில் இருக்கின்றன. அழகிய உருவமும் கம்பீரமும் வலிமையும் கொண்ட வளர்ப்பு விலங்கு எருமை. அதன் கனைப்பே எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் குடும்பத்திற்குப் பால்மாடு ஆகாது என்று சில சம்பவங்களால் முடிவுசெய்து எருமை வளர்த்தோம். அதனால் எருமைகளோடு எனக்கு நல்ல பழக்கமுண்டு. நான் விரும்பிய வகையில் தலைப்பு மட்டுமல்ல, எருமைச் சித்திரம் கொண்ட அட்டை அமைந்திருக்கிறது. இதை உருவாக்கிய ஓவியர் ஜீவா அவர்களுக்கு நன்றி. நூல் தயாரிப்பில் பங்களித்த அனைவருக்கும் நன்றி.

13-09-25                                                 
நாமக்கல்                                                                                                   பெருமாள் முருகன்



Friday, September 19, 2025

9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்) இதுவரையிலான புத்தகங்கள்.2025-2026




 


சிறுவாணி வாசகர் மையம் 9 ஆம் வருடத்தில்
(மாதம் ஒரு நூல்) 
உறுப்பினர்களுக்கு

இதுவரை அனுப்பியுள்ள புத்தகங்கள்.









நாஞ்சில் -50 & நாஞ்சில்நாடன் விருது விழா Videos 24.08.2025

 





சிறுவாணி வாசகர் மையம்
வழங்கும் நாஞ்சில்-50
- எழுத்துலகில் 50 ஆண்டுகள்
(நாஞ்சில்நாடன் அவர்களை சிறப்பித்தல்) 
&
நாஞ்சில்நாடன் விருது - 2025 பெறுபவர் 
வே.முத்துக்குமார் 

திரு.பிரவீண் விப்ரநாராயணன்
இசைநிகழ்ச்சி


சங்கரா கண் மருத்துவமனை
பத்மஸ்ரீ.
டாக்டர்.R.V. ரமணி விருதுரை

 
சங்கரா கண் மருத்துவமனை
டாக்டர்.ராதா ரமணி விருதுரை


முனைவர்.பேராசிரியர்  ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் உரை


"சொல்வனம்"
வ.ஸ்ரீநிவாசன் உரை


எழுத்தாளர் நாஞ்சில்நாடன் சிறப்புரை


விருதாளர் வே.முத்துக்குமார் 
ஏற்புரை

இறைவணக்கம்












பனுவல் போற்றுதும் - நாஞ்சில்நாடன் 2025


பனுவல் போற்றுதும்

           நாஞ்சில்நாடன்

கட்டுரைகள்

                ரூ. 250/-


படிக்கப் படிக்கத் தெரிகிறது. இன்னும் ஒன்றுமே  படித்திருக்கவில்லை என்பது. அவ்வையே சொன்னாள், 'கற்றது  கை மண்ணளவு, கல்லாதது உலகு அளவு' என்று. மீதி வாழ்நாளில் இன்னும் எத்தனை புத்தகங்களை வாசித்து விட இயலும்? அதற்காக 'எட்டுக் கருப்பட்டியை ஒண்ணா முழுங்கீரவும்' முடியாது.

‘பனுவல் போற்றுதும்’ நூலின் பல கட்டுரைகள் எனது வழக்கமான பாணி யிலானவை அல்ல. எனது ஆய்வு முடிவுகளும் அல்ல. என்னை வசீகரித்த
 நூல்களை வாசகருக்கு அறிமுகம் செய்கிறேன். அவ் வளவே!

நாஞ்சில் நாடன்





 

பவித்ரா பதிப்பகத்தின் புதிய /பிற வெளியீடுகள் 2025

      பவித்ரா  பதிப்பகத்தின் 

புதிய /பிற வெளியீடுகள்


Whatsapp 9940985920


இமயம் கண்டேன் இறை கண்டேன்

க.சிவசுப்பிரமணியன்
ரூ 170/-

காசியைப்போல ஒவ்வோர் ஹிந்துவும் சென்று தரிசிக்க வேண்டியவை 'சார்தாம்' எனப்படும் நான்கு புண்ணிய ஸ்தலங்கள்.

'சார்தாம்' எனில் இறைவனின் நான்கு இருப்பிடங்கள்.

யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் ,பத்ரிநாத்  என்பவை அவை.
அத்தலங்களுக்கும் மற்றும் பல திருத்தலங்களுக்கும் சென்று தரிசித்து வர முழுமையான பயண வழிகாட்டி இந்நூல்.

நூலாசிரியர், பெரியபுராண உரையாசிரியர் சிவக்கவிமணி சி.கே.எஸ் அவர்களின் பேரர் என்பது நூலின் மற்றொரு சிறப்பு.




பொய்மான்கரடு 

கல்கி 

(கொங்குப் பகுதி நாவல்-2)

         ரூ 150/-

நான் எழுதுகிற கதைகள் அமர இலக்கியங்கள் என்பது அடியேனுடைய தாழ்மையான அபிப்பிராயம். மற்றக் கதைகள் விஷயம் எப்படியிருந்தாலும், இந்தப் ‘பொய்மான் கரடு' என்கிற கதை, அமர இலக்கியம் என்பது பற்றிச் சிறிதும் ஐயம் இல்லை.

நம்மில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்பட்ட கடமையை உணர்ந்து அதை நன்கு நிறைவேற்ற முயல்வோமானால், அதில் மனத்திற்கு உண்டாகும் திருப்தியும் நிம்மதியும் வேறெதிலும் ஏற்படுவதில்லை. இந்த உண்மையைப் ‘பொய்மான் கரடு' என்னும் இக்கதையை எழுதும் போது நான் நன்கு உணர்ந்தேன்.

கல்கி



நான்

லா..ரா  

(கட்டுரைகள்-நேர்காணல்-சிறுகதைகள் சில.)

                ரூ 180/-


நிகழ்ச்சி சரித்திரமாகி சரித்திரம் நினைவாகி நினைவு கதையாகி, கதையைச் சொல்லிச் சொல்லி, சொல்லின் பிசிர்விட்டு விஷயம் மெருகேறி நம் ரத்தத்தில் தோய்ந்து. பரம்பரைக்கு மாண்பை ஊட்டி வளர்க்கும் காவியமாகி விடுகிறது. உயிரின் காரியம் இழுக்க இழுக்க ஓயாத சரடு, புரியாத ஜாதுவில், கழலக்கழல்ல அதில்தான் எத்தனை வர்ணங்கள், பொலிவுகள் , நூல் நயங்கள், நளினங்கள். ஆனால் எந்த இடத்திலும் அற்றுப் போகாத ஒரே சரடு. இந்த ஆச்சர்யத்தைத்தான் கலைகள் பாடுகின்றன.

ஆண்டவனே, உன்னை வேண்டிக் கொள்கிறேன் ஆச்சர்யம் குன்றாமலிருக்க  வேணும்.

லா .ச-.ரா



மகுடபதி 

கல்கி 

கொங்குப் பகுதி நாவல்-1

                ரூ 250/-

"கல்கி" ஆசிரியருக்குச் சொந்த ஊர் மாயவரம் பக்கத்திலுள்ள கிராமம். நானும் அங்கே போய்த்தான் இருக்கிறேன். "மகுடபதி"யை வாசித்த பிறகு, ஆசிரியர் பிறந்து வளர்ந்து சுகதுக்கங்களை அனுபவித்த இடம் கோயமுத்தூர் ஜில்லாதான் என்று சொல்லத் தோன்றுகிறது.

ஆசிரியர் ஏதோ சொற்ப காலந்தான் கொங்கு நாட்டில் வாழ்ந்திருக்கிறார். ஆனாலும், அங்குள்ள மக்களோடு இதயங் கலந்தவாறாக வாழ்ந் திருக்கிறார். மக்களோடு மாத்திரமல்ல ; கொங்கு நாட்டு நிலத்திலும் புழுதியாடத் திளைத்திருக்கிறார்.

டி .கே .சிதம்பரநாத முதலியார்



இரு நாவல்கள் 

.ரத்னம்

         ரூ 300/-

நினைவின்நிழல்,   கனவுமாலை

ஒன்றுக்கொன்று கதைத் தொடர்புடைய இந்த இரண்டு நாவல்களும் ஒரே நூலாக……..




உருவகக் கதைகள்

.ரத்னம்

                ரூ 150/-

தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உயிர் அற்றனவும் விலங்குகள் பறவைகள், அஃறிணை உயிர்கள் முதலியன அறிவொடு பட்டனவாகப்  பேசுவதாகவும், மற்றவர் பேசுவதைக் கேட்பதாகவும் படைக்கப்பட்ட  பஞ்சதந்திரக் கதைகள், புத்த ஜாதகக் கதைகள் இருந்திருக்கின்றன .
இத்தொகுதியில் அமைந்த கதைகள் பலவும் இவ்வகையினவே. இவற்றை ‘உருவகக் கதைகள்’ எனப்  பெயரிடக் காரணம், பேசும் திறன் அற்றனவும் பேசுவதாக உருவகப்படுத்தப் பட்டிருப்பதே. 

க.ரத்னம்




தரங்கிணி

லா.ச.ரா சிறுகதைகள்

                ரூ 250/-   

 “எப்படி எனக்கு நேர்ந்ததெல்லாம் இந்தக் கதையில் நேர்ந்திருக்கின்றது? எனக்கே கூட தெரியாதபடி என்னுள் பூட்டி வைத்திருந்த என் அந்தரங்கங்கள் எப்பிடி இங்கு அம்பலமாயின. எனக்கு எழுத வராததனால் நான் எழுதாத குறை. என் எண்ணங்கள் எப்படி அவருடைய எழுத்தானது?"  என்பது லா.ச. ரா.வின் மீதான வாசகனின் வியப்பு.

இந்தத் தொகுப்பிலும் இதனை உணரலாம்

-சப்தரிஷி லா -ச- ரா          




பூர்வா 

லா.ச.ரா சிறுகதைகள்

    ரூ 220/-


எத்தனை விதங்களில் எழுதினாலும் நான் எழுதவது நான் என் பிறவியுடன் கொண்டு வந்திருக்கும் என் கதைதான். இதைச் சொல்கையில் உயிரின் சாசனத்தை வாசகர்களின் நெஞ்சில் நித்தியமாய் செதுக்கிக் கொண்டிருக்கிறேன். இதுவே என் விதி. என் விதியே என் பெருமிதம். இதுதான் நான் தேடும் என் சொல் - என் சொல்தான் என் உளி என்கிறார் லா.ச.ரா.

இக்கதைகளை வாசிப்பவர்கள் அதனை உணர்வார்கள்.

– சப்தரிஷி.லா.ச.ரா-



கங்காதரனும் குழந்தை ராமனும்

.சிவசுப்பிரமணியன்

பயண நூல்

   ரூ 180/-

'மனித வரலாறு தோன்றுமுன்பே தோன்றிய நகரம் காசி' என்பார் மார்க் ட்வைன். ஸ்ரீ ராமருக்கும் முன் பிறந்தது அயோத்தி, காசியும், அயோத்தியும் ஹிந்து மதத்தின் உயிர். இரண்டுமே ஆயிரம் வருஷங்களாகப் பல்லாயிரம் பிரச்சினைகளை எதிர் கொண்டு இன்று பொலிவுடன் நிற்பவை.

காசி. அயோத்தி, பிரயாகராஜ். கயா,புத்தகய ஆகிய பாரதத்தின் பெருமிதமிக்க தலங்களின் வரலாறுகளை, ஆன்மீகத் தொடர்பை விரிவாக சொல்லும் இந்நூல் காசி, அயோத்தி புனிதப் பயணத்துக்குச் சிறந்த வழிகாட்டியும் கூட.


வில்லியும் சிவனும் 

  இராய.சொ

ஆய்வு நூல்

                ரூ 300/-

கம்பர், வில்லி போன்ற பெருங்காப்பியப் புலவர்கள் தம் காப்பியத்துக்கு உரிய கடவுள் எதுவாயினும், தாம் வழிபடு கடவுள் எதுவாயினும், அக்கடவுளைப் பாடும்போது தமிழ்மக்கள் வழிபடும் ஏனையக் கடவுளர்களையும் மதித்துப் பாடியுள்ளனர். பாடும்போது அச்சமய மக்கள், தம் கடவுளரைப் போற்றிப் பாடும் அளவிற்கு, ஏற்றிப் பாடியுள்ளனர்.

அதனால் அவர்கள் யாத்த காப்பியங்கள், சமயப்பொது நூலாகவும், எல்லா மக்களும் கற்றற்கு உரிய பொதுவிலக்கியமாகவும் விளங்குகின்றன.
 
இந்த இலக்கிய மரபை விரிவாக அறிந்து கொள்ள  இவ்வெளியீடு துணை செய்யும் என்பது என் கருத்து.

டாக்டர் வ.சுப. மாணிக்கம்


கம்பனும் சிவனும் 

             இராய.சொ

ஆய்வு நூல்

                ரூ 400/-

ராய. சொ. அவர்கள் தமிழ்க்கடலும் சிவமணியும் ஆதலின் கம்பன் காப்பியக் கடலிடைச் சிவமணிகளைக் கண்டு எடுத்துக் காட்ட முன்வந்தார். 

இத்துறையில் இப் பதிப்பு தமிழாராய்வார்க்கு ஒரு புதிய பாதை என்று கூற விழைகின்றேன். ஒரு பெருமரத்து ஆங்காங்கு இலை மறையக் கிடந்த பழங்களை ஒருவர் பறித்துத் தொகுத்துக் குவித்துக் காட்டுங்கால் உண்டாகும் மகிழ்ச்சியை இப் பதிப்பில் பெறுகின்றோம்.

டாக்டர் வ.சுப. மாணிக்கம்




டாக்டர்.ரங்காச்சாரி

           ராஜம் கிருஷ்ணன்

வாழ்க்கை வரலாற்று நாவல்

 ரூ 450 /-

மிகக் கருத்தோடும் பொறுப்போடும் முனைந்து ஓடிஓடி நோய் தீர்த்த டாக்டர். ரங்காச்சாரி அவர்களின் கடமையுணர்ச்சியையும், உயிர் காக்கும் அருளுணர்ச்சியையும், ஓய்வற்ற தொண்டையும், உதவியையும், அக்காலத்தார் பெற்றுப் பிழைத்த உண்மை நிகழ்ச்சிகளையும் படிப்போர் நெஞ்சம் குழையும்! மருத்துவத் தொண்டின் மாண்பும் புலப்படும்!

டாக்டர் ரங்காச்சாரி ஒருவர் போதுமா? தொடர்ந்து மனித சமுதாயத்திற்கு உதவ எண்ணற்ற ரங்காச்சாரிகள் தேவை, தேவை! நோயகற்றி வாழ்வளிக்கும் நாயகர்களை நாடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது!

புதிய ரங்காச்சாரிகள் வருக, வருக என்ற வரவேற்புடன் காத்திருக்கிறோம்.

----------

ராஜம்கிருஷ்ணன் நூற்றாண்டு வெளியீடு




ஔவை பாடல் திரட்டு-

.சரவணன்

ஆய்வு நூல்

 ரூ 250/-

"தமிழ்நாட்டின் மற்ற செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியமா? ஔவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா?" என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், 'மற்ற செல்வங் களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மட்டும் சமைத்துக்கொள்ள வல்லது. ஒளவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்பட மாட்டோம். அது மட்டும் சமைத்துக்கொள்ள முடியாத தனிப் பெருஞ்செல்வம்' என்று நாம் மறு மொழி உரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

-மகாகவி பாரதியார்


சிரஞ்சீவிக் கதை  

கல்கி சிறுகதைகள்

  ரூ 200/-


தமது சரித்திர நாவல்களாலும் சமூக நாவல்களாலும் எண்ணற்ற சிறுகதைகளாலும், கவிதை, கட்டுரைகள் போன்ற படைப்புகளாலும் தாம் எழுதிய தலையங்கங்களாலும் தற்கால தமிழ் இலக்கியத்தில் சிரஞ்சீவித் தன்மை பெற்றவர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

கல்கி அவர்களின் நகைச்சுவைக் கதைகளின் தொகுப்பு




தக்கான் திருமொழி

108 திவ்யதேசங்கள் - தலா இரு பாடல்கள் 




கம்பனில் காத்திருப்பு

நண்பர், பேராசிரியர் ஜகந்நாத் அவர்களின் கம்பராமாயண வாசிப்பு ரசனை, ஆய்வு, சமயம் ஆகிய மூன்று கண்ணோட்டங்களையும் உள்ளடக்கியது. இவற்றுக்கிடையில் முரண்பாடுகளை அவர் காண்பதில்லை. இவை மூன்றையும் இணைத்துச் செல்வதாகவே அவரது பார்வை அமைந்துள்ளது என்பதை இந்தத் தொகுப்பை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

-ஜடாயு




எழுத்தும் சிந்தனையும் AI to Zero - மது ஸ்ரீதரன் ஜனவரி-2026

  எழுத்தும் சிந்தனையும் AI to Zero  -மது ஸ்ரீதரன் விலை ரூ 300/-+(50/- அனுப்பும் செலவு) -------------------- நமக்குப் பிடித்த பாடல் ஒன்றை நாம...