வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி ஆர்த்ரா ஹால்(அண்ணா சிலை அருகில்)நடைபெறும் விருது விழா பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
**
விருது பற்றி சிறு அறிமுகம் ;
சிறுவாணி வாசகர் மையம் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் விருது வழங்கி வருகிறது .
கலை, இலக்கியம் சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது பரிசுத் தொகை ரூபாய் 50,000/- ,கேடயம் மற்றும் சான்றிதழ் அடங்கியது .
முந்தைய ஆண்டுகளில் விருது பெற்றவர்கள்;
ஓவியர் ஜீவா (2018),
முனைவர் ப. சரவணன் ( 2019) ,
பத்திரிகையாளர்,எழுத்தாளர் கா.சு.வேலாயுதன் (2020),
மணல்வீடு திரு.ஹரிகிருஷ்ணன்
(2021)
சமூகச் செயற்பாட்டாளர் 'கௌசிகா' திரு. செல்வராஜ்(2022)
-------
கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ,சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது .
இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் தலைவராக
தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளராக ஜி. ஆர். பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.
கௌரவ ஆலோசகர்களாக திரு.நாஞ்சில் நாடன், திரு.வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC)ஆகியோர் வழிநடத்துகின்றனர்.
கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
தொடர்புக்கு -
9940985920
8778924880
-------------------------------------------------------------
சிறுவாணி வாசகர் மையம் வழங்கும் நாஞ்சில்நாடன் விருது-2023 விருதாளர்
திரு.அருட்செல்வப்பேரரசன்.
46 வயதாகும் இவர் சென்னை,திருவொற்றியூரில் வசித்து வருகிறார். கணினி வரைகலை அலுவலகம் நடத்தி வருகிறார். இந்தியாவின் மாபெரும் இதிகாசமான மஹாபாரதம் இதுவரை நல்லா பிள்ளை பாரதம், வில்லிப்புத்தூரார் பாரதம் மற்றும் ம.வீ.ராமானுஜாச்சாரியார், திருக்கள்ளம் நரசிம்ம ராகவாச்சாரியார், புரிசை கிருஷ்ணமாச்சாரியார் ஆகியோர் மொழிபெயர்த்துள்ளனர்.அவற்றைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் அதற்கான முழுமையான மொழிபெயர்ப்பைச் செய்துள்ளவர் அருட் செல்வப் பேரரசன். பல்கலைக்கழகங்களும் மாபெரும் வல்லுனர் குழுக்களும் இணைந்து செய்ய வேண்டிய ஒன்றை தனியே ஒருவராக செய்துள்ளார்.
அதுமட்டுமன்றி இவர் தனது மொழிபெயர்ப்பை ஒலிக்கோப்பாகவும், காணொளி கோப்பாகவும் தன்னலமின்றி வெளியிட்டுள்ளார். அச்சு நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
கிசாரி மோகன் கங்குலி என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததை எடுத்துக்கொண்டு தமிழில் இவர் மொழிபெயர்க்கும் பணியைச் செய்துள்ளார். இந்த மொழிபெயர்ப்பை பொறுத்தவரை புத்தக வடிவில் உள்ள பதிப்புகளிலும் ஸ்லோக எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளது மட்டுமன்றி அனைத்தும் ஒருவராலேயே மொழிபெயர்க்கப்பட்டது என்பது இது ஒரு சாதனை.
மகாபாரதத்தைத் தொடர்ந்து ஹரி வம்சத்தையும் நிறைவுசெய்து ராமாயணத்தையும் மறுஆக்கம் செய்துவருகிறார்.
கடும்உழைப்பைச் செலுத்தி முழுமையான மூல மஹாபாரதத்தை மொழிபெயர்த்துள்ள அருட்செல்வப்பேரரசன் அவர்களுக்கு இந்த ஆண்டின் (2023) நாஞ்சில்நாடன் விருது வழங்கப்படுகிறது.
--------------------------------------------------------------
முழுமஹாபாரதம், ஹரிவம்சம் ஆகியனவற்றையும், இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டம் 18ம் சர்க்கம் வரையும் முழுமையாக, பர்வ, காண்ட வாரியாக, அத்தியாய வாரியாக www.arasan.info என்ற வலைப்பூவில் படிக்கலாம். இவையனைத்தும் அனைவருக்கும் திறந்த நிலையிலேயே இருக்கிறது.
No comments:
Post a Comment