யாவுமே அவள்
மதுசூதன்
சிறுகதைகள்
விலை ரூ 150/-
----------------
இரு நாட்களுக்கு முன் திரு பரத்வாஜ் என்ற வாசகர் அம்பாசமுத்திரத்திலிருந்து என்னிடம் கைபேசியில் யாவுமே அவள் தொகுப்பைக் குறித்துப் பேசினார். குறிப்பாக மயானத்தின் ஒற்றை மரம் குறித்து ஸ்லாகித்துப்பேசினார். அந்தக் கதை அவரை நிரம்பவே பாதித்திருக்கும் போலிருக்கிறது. கதைகளில் எழுத்து நடை மிகவும் நன்றாக இருப்பதாகவும் பாராட்டினார்
நேற்று திரு விஸ்வநாதன் கோவையிலிருந்து அழைத்துப் பேசினார். மயானத்தின் ஒற்றை மரம் மிகவும் நன்றாக இருந்ததாகவும் அனிதாவின் அப்பா, உயிர் மீன் போன்ற கதைகள் பிடித்திருந்ததாகவும் பாராட்டினார். முதல் வாசிப்பு முடிந்தாலும் மறுவாசிப்பை செய்யப்போவதாகவும் கூறினார்.
இப்படி முகம் கண்டிராத வாசகர்கள் மனம் திறந்து பாராட்டுவதுதானே எழுதுபவர்க்கு கீரிடங்கள்.
----------------------------
நண்பர் Sivakumar Ganesan அவர்களுக்கு அன்பான நன்றிகள்
தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளர் பதவியில் பெங்களூரில் வசிக்கும் மதுசூதன் பிறந்து வளர்ந்தது சேலத்தில்.பொய்மசியின் மிச்சம், காகிதத்தில் மூன்றாம் பக்கம், நான் என்பதும் தோற்றப் பிழை, குறுக்கு வெட்டாய் ஓர் இறகு என்கிற நான்கு கவிதைத் தொகுப்புகளும், ஏக வெளி என்ற சிறுகதை தொகுப்பும் வெளியிட்டிருக்கிற மதுசூதனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.
இப்போது 50 களில் இருப்பவர்களுக்குள்ளும், 50 களை கடந்தவர்களுக்குள்ளும் பால்ய நினைவுகளின் நதி சதா அலையடித்துக் கொண்டேயிருக்கும். எத்தனை கவிதைகளிலும், கதைகளிலும், கட்டுரைகளிலும் சொல்லித் தீராத அழகு அது.இந்தத் தலைமுறை அறியாத எத்தனையோ அற்புதங்களை வாழ்ந்து அனுபவித்தவர்கள் அல்லவா நாம்.
இந்தத் தொகுப்பு முழுவதுமே, கிட்டத்தட்ட பால்யத்தின் நினைவுகளில் சலிப்பின்றி நீந்திக் கொண்டிருக்கிற ஒருவரைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.இந்தக் கதைகளின் வழி, தன் அனுபவங்களை அழகாக வாசிப்பவருக்குக் கடத்தியிருக்கிறார்.
நம்மைப் போல் சமுதாயத்தில் நடிக்கத் தெரியாமல் அல்லது நடிக்க விரும்பாமல், இயல்பாக இருப்பவர்களை நாம் சுலபமாக மனநிலை பிறழ்ந்தவர்கள் என்று முத்திரை குத்தி விடுகிறோம். ஆனால் அவர்களை நெருங்கிப் பார்த்தால்தான் ஆச்சரியமான அவர்களின் குணங்களை அறிந்து கொள்ள முடிகிறது ஆண்டவனேஏஏ…ஓ கதையில் வருகிறவரைப் போல.
காதலித்துப் பிரிந்து வேறு ஒருவரை மணந்த உங்கள் காதலியை வாழ்வில் என்றாவது சந்தித்திருக்கிறீர்களா?ஆம் என்றால் உங்களுக்கு அழியாத கோடுகள் கதை நிச்சயம் பிடிக்கும்.
குடும்பத்தைப் பார்க்க வேண்டிய கடமையிலிருந்து நழுவி, ஊருக்கு உழைத்து மரணித்த ஒருவரின் இறுதிக் காலத்தைப் பேசுகிறது மயானத்தின் ஒற்றை மரம். வாசிக்கிற யாரும் தங்களைப் பற்றி சில நிமிடங்களாவது ஒரு சுய பரிசோதனையை நிச்சயம் செய்து கொள்வார்கள்.
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட மகள் மீதான கோபம் தீராத தந்தை,வாழ்வில் துணையாக இருக்கும் வரை மனைவியின் அருமையை அறியாதவர்கள்,நாம் பலமுறை சந்தித்து கவனிக்காமல் கடந்து சென்ற, செல்கிற ரயில்வே சுமை தூக்கித் தொழிலாளி,லாரி கிளீனர், அரவாணிக்கு 100 ரூபாய் தருகிற விலைப் பெண், அப்பாவை இழந்து தவிக்கிற பெண், நண்பர்களின் மரணங்கள், மனைவியை விட்டு வயதான காலத்தில் பிரிந்து இருக்க முடியாது தவிக்கிற கணவன், துன்பத்தில் துவளும் போது உத்வேகத்தைத் தருகிற குளத்தில் நீந்துகிற மீன், காதலித்துத் தோற்றுப் போய் நண்பர்களாக இருக்கிறவர்கள், வயதான அம்மாவை குடும்ப சூழ்நிலையால் தன்னோடு வைத்து பார்த்துக் கொள்ள முடியாதவர்கள், வயது கூடக் கூட,நெருங்கிய நண்பர்களுக்குள் நிகழ்கிற உரையாடல் மாற்றங்கள், இயல்பாக நிகழ்கிற சம்பவங்களை ஒன்றோடு ஒன்று போட்டு குழப்பிக் கொள்ளுகிற மனநிலை, தனது சிக்கனத்தால் வாழ்க்கையில் மிக முக்கிய பாடம் ஒன்றைப் போதிக்கும் பட்டாபி,பெண்ணுக்கு மன ரீதியாக அழுத்தம் தந்து தான் நினைத்ததை சாதித்துக் கொள்ளும் தந்தை,சிறு வயது விளையாட்டுக்கள்,அரசியல் ஆர்வங்கள் இப்படி கதைகளில் அவர் பதிவு செய்திருக்கிற பலரை அல்லது எல்லோரையும்,எல்லாவற்றையும் நாம் வாழ்வில் எப்போதாவது கடந்து வந்திருப்போம்தானே?
அப்பாவின் நினைவுகள் நிறைந்த வீடு,அப்பாவின் நினைவாக உள்ள சுவர்க் கடிகாரம் இவையெல்லாம் நமக்கு பொக்கிஷங்கள்.இந்தத் தலைமுறைக்கு…?
அப்பா, இதை ஸ்கிராப்ல போட்டிருங்களேன்.
இந்த ஒற்றை வரியில்,அத்தனை பெரிய தலைமுறை இடைவெளியை எவ்வளவு சுலபமாகக் கடத்துகிறார் பாருங்கள்.
விஞ்ஞான நுட்பத்தைப் பேசுகிற புறா வேட்டையும் சுவாரசியமாக இருக்கிறது.
நாணா என்கிற தி. நாராயணனின் கதையில் வருகிற, ஆதிகேசவனைப் போல், மதுசூதனும் அடிக்கடி பழைய விஷயங்களை நினைத்து பார்த்துக் கொள்கிறார். அவற்றை நேர்த்தியாகப் பதிவும் செய்கிறார்.
வாசிக்கிற யாவருக்குமே எளிதில் நெருக்கமாகி விடுகிற கதைகளின் தொகுப்பு.
--------------------------------
No comments:
Post a Comment