Monday, July 13, 2026

எழுத்தும் சிந்தனையும் AI to Zero - மது ஸ்ரீதரன் ஜனவரி-2026

 




எழுத்தும் சிந்தனையும்

AI to Zero 

-மது ஸ்ரீதரன்

விலை ரூ 300/-+(50/- அனுப்பும் செலவு)

--------------------

நமக்குப் பிடித்த பாடல் ஒன்றை நாமாக யூ-டியூப்பில் தேடிப் பிடித்துக் கேட்பதற்கும், எதிர்பாராத நேரத்தில் ஒரு டீக்கடையிலோ, டவுன் பஸ்ஸிலோ கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது அல்லவா? இரண்டாவதில் அந்தப் பாடல் இன்னும் இனிமையாக ஒலிக்கும். இதை Serendipity என்கிறார்கள்.


அதே போல இந்த நூல் நீங்கள் தேடிப் பார்க்காமலேயே சில புதுத் தகவல்களை உங்களுக்குக் கொடுக்கக் கூடும். இதில் உள்ள சில விஷயங்கள் நீங்கள் ஏற்கனவே அறிந்ததாக இருக்கலாம், சில விஷயங்கள் புரியாமல் இருக்கலாம். எது எப்படியோ, எதிர்பாராமல் கேட்க நேரிடும் டீக்கடைப் பாடல் போல இந்த நூல் உங்கள் வாசிப்பு அனுபவத்தை சற்று மேம்படுத்தும். 

----------------------------


நவீன அறிவியல் கருத்துக்களையும் தொழில்நுட்பங்களையும், தமிழ் இலக்கியங்களையும் இணைத்து எழுதிய எழுத்தாளர்களின் தொடர்ச்சி தமிழில் உண்டு. பெ.நா. அப்புசாமி முதல் சுஜாதா வரை ஒரு  பட்டியல் தரலாம்.  நான் சமீபத்தில் படித்த புத்தகம்  

தமிழ் இலக்கியம், பாடல்கள், ஆன்மீகம், வானியல் போன்ற பல தகவல்களோடு சுவாரசியமான களஞ்சியமாக  எழுத்தாளர் மதுஸ்ரீதரன் அவர்களின் ‘எழுத்தும் சிந்தனையும்’. சிறுவாணி வாசகர் மைய வெளியீடு.

ஆங்கில எழுத்துக்கள் 26 க்கும் தலா ஒரு கட்டுரை என நூல் முழுவதும் படிக்க எடுத்தால் கீழே வைக்க இயலாத ரகம்.

AI செயல்பாடுகளைப் பற்றித் தெளிவாகவும் எளிமையாகவும் கூறும் கட்டுரை, நுகர் கலாச்சாரம் பற்றிய கட்டுரை, பழந்தமிழ் இலக்கியம், புராணம் முதல் திரைப்பாடல் வரிகள் உள்ளிட்ட எடுத்துக்காட்டுகள் அடங்கிய பல கட்டுரைகள் என நூலில் மேலும் சுவாரஸ்யம் கூட்டுகின்றன.

மதுஸ்ரீதரனின் பலமாக நான் எண்ணுவது எடுத்துக்கொண்ட தலைப்பின் கருப்பொருளை எளிமையாக உதாரணங்கள் மூலம் வாசகருக்குக் கடத்துவதுதான்.

நுகர்பொருள் கலாசாரம் பற்றிய கட்டுரையில், ‘வாங்குவதால்தானே விற்கிறோம்' என்கிறது ஒரு கூட்டம். ‘விற்பதால்தானே வாங்குகிறோம்' என்கிறது ஒரு கும்பல்.

சுற்றுச் சூழலை, மற்றவர்களை விட்டு விடுவோம். ‘வாங்கிக் குவித்தல்' நம் சேமிப்பைப் பதம் பார்த்து விடுகிறது. நம் பாதுகாப்பான எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்குகிறது.

‘இன்றைக்கு இந்த நொடியை அனுபவிப்போம், நாளை வெறும் கனவு, அதை நாம் ஏன் நம்பணும்?' என்பதெல்லாம் கவிதைக்குச் சரிப்படும். நாளைக்கு ரிட்டையர் ஆகி, பென்சன் இல்லாத போது யாரிடம் சென்று கையேந்துவது? கண்டதை வாங்கிக் குவிக்காமல் கொஞ்சம் சேமித்து வைத்திருக்கலாம் என்று தோன்றுமே!  

எதை நாம் துறக்கிறோமோ அதைச் சார்ந்த துன்பங்களில் இருந்தும் விடுதலை பெறுகிறோம் என்பது இக்காலகட்டத்தில் அவசியமான அறிவுரை.


கருந்துளை பற்றிய ஒரு கட்டுரையில் மரணமும் ஒரு கருந்துளை போன்றதே. உள்ளே நுழைந்தவர்கள் மீண்டும் திரும்புவதில்லை எனச் சொல்லும்போது ஞான மார்க்கத்தில்  ரிடர்ன் டிக்கெட் கிடையாது எனும் ஓஷோவின் கருத்தை இணைக்கிறார்.


தொடுவானம் போல மனிதனின் ஆசை அவன் அதை நெருங்க நெருங்க விலகிச் செல்கிறது.அடைதல் பிழை. அடைந்துவிட்டால் சந்தோஷமாக இருக்கலாம் என்பது தப்புக்கணக்கு. நாம் அனைவருமே கனியை உண்டபிறகும் ஏமாறும் டான்டலஸ்தான் என கிரேக்க புராணத்தையும் ஒப்பிடுகிறார்.


இளவயதில் நிறைய நேரம்,உடல் வலிமை இருக்கிறது.ஆனால் பணம் இல்லை.

நடுத்தர வயதில் நேரம் இல்லை.

முதுமையில் வலிமை இல்லை.

ஆக ஏதாவது ஒரு நிச்சயமின்மை இருந்துகொண்டேதான் இருக்கிறது. மூன்றில் இரண்டுதான் தேர்ந்தெடுக்க முடியுமென ஒரு கட்டுரை.

அரிதினும் அரிதான உயிரினமான நாம் நம் இருப்பை கொண்டாடிக் களிக்க வேண்டாமா? நம் பூமியை, நம் வானை, நமக்கு வழங்கப்பட்ட இந்த காலத் துணுக்கை நொடிக்கு நொடி அனுபவிக்க வேண்டாமா? ஆராதிக்க வேண்டாமா? வேற்றுமைகளை மறந்து ஒன்று கூடி நடனமாட வேண்டாமா? ஆனால், உலகத்தின் நிலையை எண்ணிப் பாருங்கள். அதிகாரம். வன்முறை, பிரிவினை, அடக்குமுறை...

வாசிப்பவரை நோக்கி எழுப்பப் படும் இக்கேள்வி சிந்தித்துத் திருந்துவதற்கானது.

‘நான் சந்தோஷமாக இருப்பேன்' என்பது உண்மையில் ஒரு மிகச்சிறந்த குறிக்கோள் என்கிறார்கள் ஞானிகள். ‘பைலட் ஆவேன்', ‘பில்லியனர் ஆவேன்', ‘உலகம் சுற்றுவேன்', ‘முதல்வன் ஆவேன்' இவைகளைக் காட்டிலும் இந்த குறிக்கோள் சிறந்தது, எளிதில் அடையக்கூடியது. நடைமுறை சாத்தியம் உள்ளது.

‘இந்த நிமிடம் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்' என்ற எளிய குறிக்கோளை நமக்குள் வைத்துக் கொண்டால் அதை யாராலும், ஒட்டுமொத்த உலகத்தாலும் மாற்ற முடியாது என்பதைக் கவனியுங்கள். நமது மற்ற குறிக்கோள்கள் சிக்கலானவை, பலகீனமானவை, பிறரின் சார்புள்ளவை.

‘எதிர்காலம் ஒவ்வொரு நாளாக அல்ல, நொடியாக நம்மிடம் தரப்படுகிறது. ஒவ்வொரு நொடியும் வாழ்பவனுக்கு எதிர்காலம் அர்த்தமற்றுப் போகிறது. மரண பயம் உட்பட எல்லா பயங்களும் அவனுக்குப் பொருளற்றுப் போய் விடுகின்றன.

முதல் முறை கொடுக்கும் போது நன்றியுணர்வை உருவாக்குகிறோம்.

இரண்டாம் முறை கொடுக்கும் போது எதிர்பார்ப்பை. மூன்றாம் முறை நமக்கு இவர் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை, நான்காம் முறை இவர் கொடுப்பதும், நாம் பெறுவதும் சகஜம் என்ற எண்ணத்தை உருவாக்குகிறோம். ஐந்தாம் முறை நாம் ஒருவேளை கொடுப்பதை நிறுத்தினால் வெறுப்பையும், பகைமையையும் உருவாக்குகிறோம்.

கொடுப்பவர்தான் எல்லையை நிர்ணயிக்க வேண்டும். ஏனெனில், வாங்குபவர்களுக்கு எந்த எல்லையும் இல்லை!

மதுஸ்ரீதரனின் முந்தைய சிறுவாணி வாசகர் மைய வெளியீட்டு நூலான ‘எண்ணும் எழுத்தும்' போலவே இந்த ‘எழுத்தும் சிந்தனையும்' (AI to Zero) நூலும் நம்மை வியக்கவும், சிந்தனையிலாழ்த்தவும் செய்கின்றன என்றால் மிகையில்லை.

வாசிப்பவரின் எண்ணஓட்டத்தை விரிவாக்கி, மரபைப் போற்றி, புதியன காணும் போக்கைக் கைக்கொள்ளத் தூண்டுமாறு நம்மையெல்லாம் வியக்க வைக்கின்றன மதுஸ்ரீதரனின் கட்டுரைகள்.  

அனைத்து வயதினரும் படிக்கவேண்டிய செறிவான புத்தகம்.


 21.06.2026 தினமலர் கோவைப் பதிப்பில்

'நான் படித்த புத்தகம்' பகுதியில் வெளிவந்துள்ள  

செய்தியின் முழுவடிவம் இது.




No comments:

எழுத்தும் சிந்தனையும் AI to Zero - மது ஸ்ரீதரன் ஜனவரி-2026

  எழுத்தும் சிந்தனையும் AI to Zero  -மது ஸ்ரீதரன் விலை ரூ 300/-+(50/- அனுப்பும் செலவு) -------------------- நமக்குப் பிடித்த பாடல் ஒன்றை நாம...