நீலவானம்
ரமணன்
வெளியீடு March 2025 விலை ரூ 150/-
தமிழில் த்ரில்லர்கள், துப்பறியும் கதைகள் புதியன அல்ல. ஜே.ஆர். ரங்கராஜு காலம் (1875-1959), வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் காலம் (1880-1942) முதல் இன்று வரை அவை வந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் பல தகவல்களுடன், அதே நேரம் பரபரப்பும், திகிலும் நிறைந்த ரமணனின் இந்தக் கதைப் பாணி தமிழுக்குப் புதிது.
எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என முதல் பக்கத்தைத் திறந்தால் மொத்தப் புத்தகத்தையும் படித்து முடித்துவிட்டுதான் கீழே வைப்பீர்கள்.
இந்த நூலைப் படித்துப் பாருங்கள். நான் சொல்வதில் சற்றும் மிகையில்லை என்பது தெரியும்.
-சிவசுப்பிரமணியன்
--------------------------------------
நீலவானம் நூல் பற்றி
'கல்கி' ரமணன் அவர்கள் எழுத்தாளர், பத்திரிகையாளர், பொதுத்துறை வங்கியின் முன்னாள் மூத்த அதிகாரி, தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் சரளமாக பேசவும் எழுதவும் செய்கிறவர். எப்போது சந்தித்தாலும் மாறாத புன்னகை, உற்சாகம் இவற்றோடு சுழன்று வருகிற இவர் எனக்கு தனது நீலவானம் என்கிற தனது 'திரில்லர்' புத்தகத்தை பரிசளித்தார். சோதனையாக அதனை நான் கையில் எடுத்து வாசிக்க சில நாட்கள் ஆகிவிட்டன.
வியத்தகு தகவல்கள், பரபரப்பு, திகில் என்று இப்படியான நூலை நான் நிச்சயம் வாசித்ததில்லை. இவர் ஒரு பயிற்சியாளர் என்பதால் விமான நிலையம், எத்தனை விமானங்கள் ஒரு நாளைக்குப் பறக்கும், எத்தனை சர்வதேச நிறுவனங்கள் இயங்குகின்றன, விமான நிலையப் பணியாளர்கள், விமானக் கம்பெனி (பைலட்கள், பணிப்பெண்கள், செக்யூரிட்டி அதிகாரிகள் எப்படி செயல்படுகிறார்கள்) போன்ற விவரங்கள் எல்லாமே கண்முன்னே பார்த்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விளக்கி நம்மை கைப்பிடித்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
MAA மெட்ராஸ் ஏர்போர்ட் அத்தாரிட்டி போன்ற விளக்கங்கள், 'பே' என்றால் என்ன? விமான நிலைய கண்ட்ரோல் டவர் பற்றிய விவரம், உள்ளே பயணிகளுக்கு உணவு எங்கிருந்து வருகிறது, அவை எப்படி உள்ளே ஏற்றப்படுகிறது போன்ற விவரங்கள், போர்டிங் பாஸ் வழங்கும் விவரம், பயணிகள் நடக்கும் ஏரோ பிரிட்ஜ், அதிகாரிகள் என்ன செய்யலாம் மற்றும் செய்யக்கூடாது போன்ற நடைமுறை விளக்கங்கள், என்ன விதிப்படி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆணையிடும், இப்படி கடினமான தொழில்நுட்ப விஷயங்களை அதிகம் படிப்பறிவு இல்லாதவர் கூட புரிந்து கொள்ளும் விதத்தில் ஆங்காங்கே குறிப்பிடுவது இந்த நூலின் மதிப்பைக் கூட்டுகிறது.
ஒரு நாவலை எழுதும் முன்னர் எத்தனை ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும், எத்தனை விவரங்கள் (உண்மைத்தன்மை கலந்து) திரட்ட வேண்டும் என்பதற்கு இந்த நூல் ஒரு பாடம். வெறும் கதைக்கரு, எழுத்துத்திறன், சொல் மேலாண்மை, கூகிள் கூட சொல்லாத விஷயங்களை எப்படி சுவாரசியமாக அளிக்கலாம், என்ற அடிப்படையில் அதுவும் ஒரு திரில்லர் வடிவில் தருகிற ஸ்டைல் நிச்சயம் நான் எனது பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ....'வேற லெவல் '
எங்குமே தேவையற்ற வர்ணனைகள், வார்த்தை ஜாலங்கள் கிடையாது. இந்தக் கதையை வாசிக்கும் பொழுது பயம், படபடப்பு வராது. கியூரியாசிட்டி மட்டுமே நம்மை ஆட்கொள்கிறது. சூழலை திறமையானவர்கள் எப்படி சாதுரியத்துடன், சமயோஜிதமாக கையாள வேண்டும் - கையாளுகிறார்கள் என்பதை நாமும் அறிந்து கொள்கிறோம். விமானப்பணி என்பது ஒரு தேச சேவை. தேச பாதுகாப்பு குறித்த ஒன்று. வெறும் பயணிகளை இடம் விட்டு இடம் கொண்டு செல்வது மட்டும் விமானம் அல்ல என்பதை முடிக்கிற கடைசி பத்திகளில் வெளிப்படுத்தி நிற்கிறார்.
இதில் வருகிற கதாபாத்திரங்களின் அறிவுப்பூர்வமான நடவடிக்கைகள், மன அழுத்தத்தின் இடையே எப்படி நிதானம் மற்றும் சாதுர்யம் சாகசம் இவற்றை கையாளுகிறார்கள் என்பதையெல்லாம் ஒரு நிர்வாக ஆலோசகர் மற்றும் பயிற்சியாளராக நான் மிகவும் ரசித்தேன். தேவையில்லாத திரில்லர் கொடுமைகள் எதுவுமே இதில் இல்லை. தேவையான விஷயங்கள் எதுவுமே இதில் விட்டுப்போகவும் இல்லை.
வாழ்த்துக்கள் ரமணன் சார். உங்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி. (நான் அனுப்புவது கடிதம் அல்ல - என்பது போல நான் எழுதுவது கதைகள் அல்ல என்று கூட யோசிக்க வைத்தது). மேலும் நீங்கள் நிறைய எழுத வேண்டும். வாசித்து பலரும் மகிழ வேண்டும்.
பாலசாண்டில்யன்
------------------------------------
வி எஸ் வி ரமணனின் "நீலவானம்"
“A Colt .45 revolver consisting essentially of a metal tube from which a missile or projectile is shot by the force of exploding gunpowder or some other propellant….”
”அந்த சிங்கிள் ஆக்ஷன் ராணுவ கோல்ட் பீஸ்மேக்கர் துப்பாக்கியின் இருண்ட வாய் என்னை நோக்கி அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது” என்று அலிஸ்டைர் மக்ளீன் எழுதினது காலேஜ் வயதில் என்னைப்பாதித்த எழுத்து நடை.
ஒரு துப்பாக்கியின் உள் சமாச்சாரங்களை விலாவாரியாக எழுதிவிட்டு அதன் மூலம் கதாநாயகனை அறிமுகம் செய்து அபார ஆக்ஷன் கதையாக அந்த When Eight Bells Toll இன்று வரை என் மனதை விட்டகலவில்லை.
ஒரு நாவலில் டெக்னிக்கல் விஷயங்களை நுட்பமாக எழுதுவது அந்த கதையின் நம்பகத்தன்மையை பல மடங்கு அதிகரிக்கும் என்பதை ஆணித்தரமாக நம்பும் ஆசாமி நான். அதனாலேயே ஃப்ரெடெரிக் ஃபர்ஸைத்தின் கதைகள் – கில் லிஸ்ட், அஃப்கான், அவெஞ்சர் – மத்திய கிழக்கு மற்றும் செபியாவின் சரித்திரத்தையும் சுவாரஸ்யமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பை நல்கின.
இந்த டெக்னிக்கல் விஷயங்களை நுட்பமாக எழுதுவது லேசுப்பட்ட காரியம் இல்லை. அதற்கு தீவிர படிப்பும் ஆராய்ச்சியும் தேவை.
நில்லுங்கள் ராஜாவே கதைக்காக ஹிப்னொபீடியா பத்தி ஒரு வரி எழுதுவதற்காக அலாய்ஸ் பெஞ்சமின் சாலிகரிலிருந்து Weizmann Institute of Science ஆராய்ச்சி பேப்பர்கள், ஆல்டாஸ் ஹக்ஸ்லி, Ralph 124C 41+ என்றெல்லாம் பதினேழு புத்தகங்கள் படித்ததாகச் சொன்னார் சுஜாதா.
அந்த வாரம்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு காவேரி ஹாஸ்பிடலில் இரண்டு நாள் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார் பாலகுமாரன்
“ சார்! என்ன அதுக்குள்ள அலைச்சலா? உடம்புக்கு ஏதாவது..?”
“இல்ல ரகு! ஸ்வர்ண வேட்கையில் பதினெட்டாம் நூற்றாண்டில் நம்ம ஆளுங்க கூடலூருக்குப் பயணப்படும்போது பெரிய இரும்பு பெட்டி நெறைய சாமான்கள். ஃபைல், கணக்கு வழக்கு புஸ்தகங்கள்னு எடுத்துண்டு போறான்னு எழுதணும். அந்தப்பெட்டிய விவரிக்கணுமே! அதான் ஜார்ஜ் கோட்டை ம்யூசியத்துல போய்த்தேடி பார்த்துட்டு வந்தேன். என்னமா இருக்கு தெரியுமா? அந்த ரிவெட் அடிச்ச……..”
திரு வி எஸ் வி ரமணன் அந்த வேலையைத்தான் செய்திருக்கிறார்.
அவரது நீலவானம் நாவலை எனக்கு அனுப்பியிருந்தார். இதோ இங்கே ம்யூனிக்கில் துல்லிய நீலவானத்தின் கீழே கையில் ஒரு கோப்பை……சரி அது எதுக்கு இங்க…..படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க முடியவில்லை. அந்த அளவு விறுவிறுப்பான கதைக்களம்.
ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது ஒவ்வொரு விஷயத்தின் பின்புலத்தை Authenticஆக விவரித்திருந்த பாங்கு. லண்டனின் Vauxhall Crossஉம் வாஷிங்டனின் பென்ஸில்வேனியா அவென்யூவில் எட்கர் ஹூவர் பில்டிங்கும், டெல்லியின் CGO Complex, Lodi Road உம் பெயர் சொல்லப்படாமலேயே நமக்கு அதன் வீர்யத்தை விளக்கும் அளவுக்கு உளவுத்துறை நாவல்கள் எழுதப் பட்டிருக்கின்றன.
அந்த வரிசையில் நீலவானம் நிச்சயம் வைக்கப்பட வேண்டும்.
சென்னை விமான நிலையம், ஏர் இந்தியா விமானம், ரா ஏஜன்ஸி, உள்துறை அலுவலர்கள், ரிசர்வ் வங்கியின் தங்க டெபாஸிட், ஏர் டிராஃபிக் கண்ட்ரோல், கடத்தல்காரர்களுடனான பேச்சு வார்த்தையில் கையாளவேண்டிய நெகோஷியேஷன் உத்தி எனக்கதை பயணிக்கிறது. கடைசியில் ஒரு கமாண்டோ ஆக்ஷனுடன் முடியும்போதுதான் நாம் மூச்சு விட மறந்தது நினைவுக்கு வருகிறது!
கதை ஒரு குறிக்கோளுடன் படு வேகமாக நகர்வதால் காரக்டர்களின் முழு வீச்சையும் களத்துக்குள் கொண்டு வர இயலாத நிலமையைப்புரிந்துகொள்ள முடிகிறது. ரமணன் அவர்கள் தனது அடுத்து ஆக்ஷன் கதையில் – அவர் எழுதத்தான் வேண்டும் – கதையை அறுநூறு பக்கங்களுக்கு நீட்டி காரக்டர்களின் பரிமாணங்களையும் கொண்டு வந்தால், தமிழுக்கு ஒரு ஃப்ரெடெரிக் ஃபோர்ஸைத் கிடைப்பார்.
ஜெஃப்ரி ஆர்ச்சரின் ”ஷல் வி டெல் தி பிரெஸிடெண்ட்” நாவல் பற்றி ந்யூயார் டைம்ஸ் குறிப்பிட்ட வார்த்தையான Unputdownableஐக்கடன் வாங்கி வி எஸ் வி ரமணனின் நீலவானத்துக்கும் தயக்கமில்லாமல் சொல்லுவேன்,.
கூடவே சிறுவாணி வாசகர் மையத்துக்கு நன்றி நவின்றேயாக வேண்டும்!
Jayaraman Raghunathan
--------------------------------------------------------
No comments:
Post a Comment