Monday, July 13, 2026

எருமைச் சீமாட்டி- பெருமாள் முருகன் / அக்டோபர் -2025

 



எருமைச் சீமாட்டி-

பெருமாள் முருகன் சிறுகதைகள்

Pages:200 

விலை 250/-+(50/- அனுப்பும் செலவு)

-------

பெருமாள் முருகன், கொங்குப் பகுதியின் நிலத்தையும் வீட்டையும் ஆவினங்களையும் ஆளும் பெண்களின் புறவுலகைப் பேசியவாறே மறைவாய் அவர்களது அகவிரிவை அறியத் தருகிறார். வாசிப்பின் தொடக்க நிலையில் இருப்பவர்க்கும் இடையூறு அளிக்காத நடையும் கதைக் களங்களும் ஆசிரியருடையவை என்பதால் இக்கதைகள் சகலருக்குமானது.


திட்டமான சிறுகதை ஒழுங்கமைவைக் கற்கவும், ஒரு கதையில் நேர்த்தியான உரையாடலை உருவாக்கவும், பலரது பார்வைக் கோணங்களை முன்வைக்கவும் தமிழில் பெ.முவை வாசிப்பது இன்றியமையாதது.


இக்கதைகள் வாசிப்பின்பத்தை மெருகூட்டுபவை என்பதில் ஐயமில்லை.

- ஜார்ஜ் ஜோசப்


-------------

மணல் உதறும் அணில்

பேரிலக்கியச் செல்வம் கொண்ட தமிழில் வாசிப்போர் எண்ணிக்கை வெகுகுறைவு. இது சமூக முரண். வாசகர் குறைவாக இருந்தும் எப்படி நூல்கள் பல்கிப் பெருகுகின்றன, இலக்கிய வளம் செழுமை பெற்றுக் கொண்டேயிருக்கின்றன என்பதுதான் வியப்பு. இந்த வியப்பிற்கு விடை காண வேண்டுமானால் புத்தகச் சந்தை, நிறுவனங்கள், அரசு முயற்சிகள் ஆகியவற்றைக் கணக்கெடுத்துப் பார்த்தால் போதாது. அப்படிக் கணக்கெடுத்தால் சிலசமயம் மனக்கஷ்டத்திற்கு ஆளாகவும் நேரலாம். ஆனால் தனிமனித முயற்சிகள் ஒருபோதும் சோர்வு தருவதில்லை. தமிழும் தமிழ் இலக்கியம் இத்தனை வளம் பெற்றிருக்கத் தனிமனிதர்கள்தான் காரணமோ என்றுகூடத் தோன்றும். 

வாசிப்பின்பத்தை அனுபவித்த ஒருவர் தம்மைப் போல இன்னொருவரைக் காண்கையில் அடையும் பரவசத்தை நம் சூழலில் நிறையக் காணலாம். வாசித்தவற்றைப் பற்றிப் பேசுவதும் நூல்களைப் பகிர்ந்து கொள்வதும் இயல்பாக நடந்தேறும். கடன் வாங்கிய பணத்தைக் கேட்டுச் சண்டையிடுவோர் உண்டு. கடன் வாங்கிய நூலைப் ‘போனால் போகட்டும்’ என்று விட்டுவிடுவோரே அதிகம். வாங்கிய நூலை வாசித்தததும் யாருக்காவது கொடுத்துவிடும் வழக்கம் கொண்டோரும் உள்ளனர். கோவை, பூசாகோ (பிஎஸ்ஜி) கலை அறிவியல் கல்லூரியில் முதுகலைத் தமிழிலக்கியம் படித்தேன். என் ஆசிரியர் ச.மருதநாயகம் தனிநூலகம் வைத்திருந்தார். ஒருவர் தம் வீட்டில் அத்தனை பெரிய நூலகம் வைத்திருக்க முடியும் என்பதைக் கண்டு பெரும்பரவசம் அடைந்தேன். நூல்கள் சேகரிக்கும் ஆர்வம் பெருகியதற்கும் அதுதான் காரணம். 

சேகரித்து வைத்திருந்தது மட்டுமல்ல, என்னைப் போன்ற மாணவர்கள் தடையின்றி நூல்களை எடுத்துச் சென்று வாசிக்கவும் உதவினார். வாசிக்கக் கொடுத்த நூலை ‘படிச்சிட்டயாப்பா?’ என்று எப்போதாவது கேட்பார். அவர் அப்படிக் கேட்டால் பதறிப் போவேன். ‘நாளைக்குக் குடுத்துருவங்கையா’ என ஏதோ பதில் சொல்வேன்.  ‘பொறுமையாப் படிப்பா. படிச்சிருந்தா உங்க கருத்தத் தெரிஞ்சுக்கலாமுன்னு கேட்டன்’ என்பார். போகப்போகத்தான் அவர் மனோபாவம் புரிந்தது. அவர் விசாரிப்பு நூலைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லும் நினைவூட்டல் அல்ல. படித்த என் கருத்தை அறிய வேண்டும் என்பதற்காகத்தான். அது வாசிப்பின்பத்தை முழுமையாக அனுபவிக்கும் மனநிலை.
 
நான் கல்லூரி ஆசிரியர் பணியில் சேர்ந்தபோது என் சேகரிப்பிலிருந்து பத்திருபது நூல்களைக் கல்லூரிக்கு எடுத்துப் போய் வைத்திருப்பேன். பாடநூலைத் தவிர வேறு புத்தகங்களையே அறியாத முதல் தலைமுறை மாணவர்களை வாசிப்பில் ஈர்க்க அவற்றைப் பயன்படுத்துவேன். தொடக்க நிலை வாசிப்புக்கு உகந்த நூல்கள். குறிப்பேட்டில் மாணவர் பெயரை எழுதி வைத்துக்கொண்டு நூலைக் கொடுப்பேன். அதிகபட்சம் ஒருவாரத்தில் திருப்பிக் கொடுக்கும்படி சொல்வேன். கொடுக்கவில்லை என்றால் கேட்டுப் பெறுவேன். சிலரைக் கடுமையாகத் திட்டவும் வேண்டியிருக்கும். புத்தக அருமை தெரியாமல் எங்கோ போட்டுவிட்டுத் தேடுவோர் உண்டு. கிழித்து எடுத்து வருவோர் உண்டு. புத்தகத்தைக் கையாளுதல், சேகரித்தல், பாதுகாத்தல் ஆகியவற்றைப் பற்றி வகுப்பெடுக்கவும் செய்வேன்.  ‘அறிவுச்சொத்து புத்தகம்’ என்பதை மனதில் பதிய வைக்க என்னென்னவோ செய்ய வேண்டியிருக்கும். 

வாசிப்பு ஆர்வம் மட்டுமல்ல, புத்தகத்தைப் பாதுகாக்கும் கவனமும் கொண்டோருக்கு என் நூல்களைத் தருவதில் ஒருபோதும் சுணக்கம் காட்டியதில்லை. எனக்கு உதவியாக ஒருவேலையைச் செய்து தரும் மாணவருக்குப் புத்தகத்தைக் கொடுப்பேன். திருமண நிகழ்வுகளுக்கு நான் கொடுக்கும் ஒரே பரிசு புத்தகம்தான். முதல் பக்கத்தில் என்  வாழ்த்துப்பாவும் இடம்பெற்றிருக்கும். நம்மைப் போல இன்னொருவர் இருப்பதைக் கண்டால் மகிழ்கிறோம். நம்மைப் போலச் சிலரை உருவாக்கவும் முயல்கிறோம். வாசிப்புச் சுவை கண்டோரிடம் இவ்வியல்பு மிகுந்திருக்கும். 

வாசிப்புப் பண்பாட்டை உருவாக்கப் பலவித முயற்சிகள் நடைபெறும் காலம் இது. மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகள், புதிய நூலகங்கள், நூல் கொள்முதலில் புதிய கொள்கை, பன்னாட்டுப் புத்தகக் காட்சி என அரசு ஒருபக்கம் வாசிப்பைக் கூட்டச் செய்யும் முயற்சிகள் போற்றத்தக்கவை. அதேசமயம் எந்தப் பின்புலமும் அற்றவர்கள் செய்பவை அனேகம். உடலில் ஒட்டிய மணலை உதறி உதவும் அணில் போல வாசிப்புப் பண்பாட்டிற்குப் பலரும் பங்களிக்கின்றனர். அவ்வகையில் சிறுவாணி வாசகர் மையத்தின் ‘மாதம் ஒருநூல்’ என் மனதைக் கவர்ந்த திட்டம். தம் செயல்பாட்டு எல்லைக்கு உட்பட்டு என்ன செய்ய முடியும் என்று சிந்தித்த வாசக உள்ளத்தின் திட்டம். 

நூலார்வம் கொண்டோரை உறுப்பினர்களாகச் சேர்த்து  வீடு தேடி மாதம் ஒருநூலைக் கொண்டு சேர்ப்பது சாதாரணம் போலத் தோன்றும். நூல் தேர்வு, வாசகர் தேர்வு,  அதை அச்சிடும் பணிகள், அனுப்புதல் என்று தொடர்ந்து ஓர் இயக்கமாகச் செயல்படுவது எளிதல்ல. நூல்களைப் பெறுவோர் பாக்கியவான்கள். ஒருநூல் கைக்கு வந்து சேர்வதில் இருக்கும் கஷ்டமும் சேர்ந்த பின் கிடைக்கும் மகிழ்வும் என் தலைமுறையினருக்கு நன்றாகத் தெரியும். நல்ல நூலைத் தேடி நூலகங்களுக்கும் எங்கோ அரிதாகப் பெருநகரங்களின் சிறுசந்தில் இருக்கும் புத்தகக் கடைக்கும் அலைந்த தலைமுறை. இன்றோ நாம் இருக்கும் இடத்திற்கு நூல் வந்து சேர்கிறது. முகம் தெரியாத ஒருவர் நூலைக் கொண்டு வந்து நம் கையில் வைக்கிறார். இதைத் தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தியிருக்கிறது. தொழில்நுட்பம் எத்தனை வளர்ந்தாலும் அதைப் பயன்கொள்ளும் திறம் நம்மைப் பொருத்ததுதான். அத்திறம் கொண்ட அமைப்பாகிய சிறுவாணி வாசகர் மையம் வாசிப்புப் பண்பாட்டிற்குச் செய்யும் பங்களிப்பாகவே இத்திட்டத்தைக் காண்கிறேன். அதற்கு என் பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள். 

சிறுவாணி மூலம் என் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளியாவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. என் அறுபதாம் வயதுத் தொடக்கத்தை ஒட்டி இப்படி ஒருநூலை வெளியிட்டுப் பெருமைப்படுத்துவதைக் கண்டு நெகிழ்கிறேன். சாத்தியப்படுத்திய நண்பர் பிரகாஷ் அவர்களுக்கும் சிறுவாணி நண்பர்களுக்கும் நன்றி. என் பணியை எளிமையாக்கிக் கதைகளைத் தேர்வு செய்து கொடுத்தவர் இளவல் ஜார்ஜ் ஜோசப். வாசிப்பிலும் எழுதுவதிலும் தீரா வேகம் கொண்டவர் அவர். இந்தத் தொகுப்பை உருவாக்குவதிலும் அவ்வேகத்தைக் கண்டேன். நினைவுபடுத்த வேண்டிய தேவையே இல்லாமல் பணியை முடித்துத் தரும் இயல்புடைய அவருக்கு நன்றி. 

என் சிறுகதை நூலொன்றுக்கு ‘எருமைச் சீமாட்டி’ எனத் தலைப்பிட வேண்டும் என்பது நெடுநாள் அவா. எருமைகளைப் பற்றிப் பிரமாதமான சித்திரங்கள் நம் பழைய  இலக்கியத்தில் இருக்கின்றன. அழகிய உருவமும் கம்பீரமும் வலிமையும் கொண்ட வளர்ப்பு விலங்கு எருமை. அதன் கனைப்பே எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் குடும்பத்திற்குப் பால்மாடு ஆகாது என்று சில சம்பவங்களால் முடிவுசெய்து எருமை வளர்த்தோம். அதனால் எருமைகளோடு எனக்கு நல்ல பழக்கமுண்டு. நான் விரும்பிய வகையில் தலைப்பு மட்டுமல்ல, எருமைச் சித்திரம் கொண்ட அட்டை அமைந்திருக்கிறது. இதை உருவாக்கிய ஓவியர் ஜீவா அவர்களுக்கு நன்றி. நூல் தயாரிப்பில் பங்களித்த அனைவருக்கும் நன்றி.

13-09-25                                                 
நாமக்கல்                                                                                                   பெருமாள் முருகன்



No comments:

எழுத்தும் சிந்தனையும் AI to Zero - மது ஸ்ரீதரன் ஜனவரி-2026

  எழுத்தும் சிந்தனையும் AI to Zero  -மது ஸ்ரீதரன் விலை ரூ 300/-+(50/- அனுப்பும் செலவு) -------------------- நமக்குப் பிடித்த பாடல் ஒன்றை நாம...